மணிக்கு 160கிமீ வேகத்தில் படுத்துனு போனா வேற லெவலில் இருக்கும்! பிரதமர் பச்சை கொடி காட்டியாச்சு!
பிரதமர் நரேந்திர மோடி, வடகிழக்கு இந்திய பகுதியில் ஹவுரா மற்றும் கவுகாத்தி (காமக்யா) இடையேயான நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் (Vande Bharat Sleeper) ரயில் சேவையை இன்று (ஜனவரி 17, 2026) மால்டா நகர நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேற்கு வங்காளத்தில் நடந்த இந்த நிகழ்வை தொடர்ந்து, ஹவுரா-கவுகாத்தி வழித்தடத்தில் ரயில் பயண நேரத்தை சுமார் 2.5 மணிநேரம் குறைப்பதன் மூலம், இந்த ரயில் ஆன்மிகப் பயணத்திற்கும் சுற்றுலா வளர்ச்சிக்கும் ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.
இதனால், இந்த சேவை இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. மால்டாவில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், பிரதமர் மோடி ரூ.3,250 கோடி மதிப்பிலான பல ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார். மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

கிழக்கு இந்தியாவுக்கான இரண்டு நாள் பயணத்தில், பிரதமர் மோடி தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அரசியல் அறிவிப்புகளையும் வெளியிடுகிறார். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டம் நெருங்கும் வேளையில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
நாளை (ஜன.18) அசாமில் உள்ள காசிரங்காவின் காளியாபூருக்குச் சென்று ரூ.6,957 கோடி மதிப்பிலான காசிரங்கா மேம்பால வழித்தடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும், திப்ருகர்-கோமதி நகர் (லக்னோ) மற்றும் காமாக்யா-ரோஹ்தக் ஆகிய இரு வழித்தடங்களில் புதியதாக அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் (Amrit Bharat Express) ரயில் சேவைகளையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

வந்தே பாரத் இரயில்களை காட்டிலும் அம்ரித் பாரத் இரயில்கள் குறைவான பயண கட்டணத்தை கொண்டவை ஆகும். பழைய என்ஜின் விரைவு இரயில்களை காட்டிலும் இவை இரண்டும் அதிவேகமானவைகளாக, முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. கொல்கத்தா மற்றும் கவுகாத்தி இடையேயான இரவு பயண நேரத்தை வெறும் 14 மணிநேரமாகக் குறைக்கும் வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில் ஆனது நீண்ட தூர இரவு நேரப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அதிவேக எலெக்ட்ரிக் பல யூனிட் (EMU) ரயிலாகும்.
இந்த ரயில் மணிக்கு சுமார் 180 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், வழக்கமான சேவையில் அதிகப்பட்சமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில்தான் இயக்கப்படும். பல உலகளாவிய அதிவேக ரயில்களை மிஞ்சும் வகையில், 0 முதல் 100 கி.மீ வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது.

இது, 25 கிலோவோல்ட் AC 50 ஹார்ட்ஸ் ஓவர்ஹெட் லைன் (Hz overhead line) அமைப்பைப் பயன்படுத்தும், தானியங்கு என்ஜின் இல்லாத ரயில் ஆகும். ஒரு நிலையான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் 16 பெட்டிகளைக் கொண்டது. மொத்தம் 823 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.
இதில் ஒரு AC ஃபர்ஸ்ட் கிளாஸ் (1A) பெட்டி 24 படுக்கைகளையும், நான்கு AC 2-டயர் (2A) பெட்டிகள் 188 படுக்கைகளையும், பதினொரு AC 3-டயர் (3A) பெட்டிகள் 611 படுக்கைகளையும் கொண்டுள்ளன. தன்னிச்சையான இரயில் பாதுகாப்பு சிஸ்டத்திற்காக கவாச் (Kavach) அமைப்பை கொண்டிருக்கும் வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயிலின் தரத்தை வெளிக்காட்டுவதற்காக, இரயிலை மணிக்கு 180கிமீ வேகத்தில் இயக்கிய போதும் இரயினுள் ஒன்றின் மீது ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீர் நிரம்பிய டம்ளர் கீழே விழவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நவீன இந்தியாவின் வளர்ந்து வரும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் உருவான இந்த முழுவதும் குளிரூட்டப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் போன்ற சொகுசான பயண அனுபவத்தை வழங்கும். இது நீண்ட தூரப் பயணங்களை வேகமானதாகவும், பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் மாற்றும்.


Click it and Unblock the Notifications









