இந்தியாவிலேயே தயாரிக்கப்பட இருக்கும் புதிய பயணிகள் விமானம்!
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 20 பேர் செல்லும் வசதி கொண்ட விமானத்தை மஹாராஷ்டிராவை சேர்ந்த நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பயணிகள் விமானத்தை தயாரிக்க மஹாராஷ்டிராவை சேர்ந்த நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளது. முன்னாள் பைலட் ஒருவர் துவங்கி இருக்கும் இந்த விமான தயாரிப்பு நிறுவனம் 20 சீட்டர் விமானத்தை வணிக ரீதியில் தயாரித்து வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த விமான திட்டத்தின் சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மும்பையை சேர்ந்த அமோல் யாதவ் [40] என்பவர்தான் விமான தயாரிப்பு திட்டத்தை கையிலெடுத்து இருக்கிறார். இவர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் விமானி என்பதும் குறிப்பிடத்தக்கது.

த்ரஸ்ட் ஏர்கிராஃப்ட் லிமிடேட் என்ற பெயரில் இவர் விமான தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இருக்கிறார். ஏற்கனவே, 6 பேர் செல்வதற்கான சிறிய ரக விமானத்தை தயாரித்து மும்பையில் நடந்த மேக் இன் இந்தியா திட்ட கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தார்.

இந்த நிலையில், அடுத்ததாக குறைந்த தூர வழித்தடங்களில் இயக்குவதற்கான 20 சீட்டர் விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்த விமான தயாரிப்பு திட்டத்துக்கு மஹாராஷ்டிர அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

விமான தயாரிப்பு ஆலையை நிறுவுவதற்காக 157 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தருவதாக மஹாராஷ்டிர மாநில அரசு உறுதி அளித்துள்ளது. அத்துடன், இந்த திட்டத்திற்கு தேவையான அனுமதிகளை தருவதற்காக பிரதமர் மோடியிடமும் பரிந்துரை செய்ய இருப்பதாக மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் குறித்து அமோல் யாதவ் கூறுகையில்," ஏற்கனவே டிஏ 003 என்ற பெயரில் 6 பேர் செல்லும் வசதி கொண்ட சிறிய ரக விமானத்தை தயாரித்து இருக்கிறேன். அவசர காலத்தில் பாராசூட் மூலமாக தரை இறக்கும் வசதி கொண்டதாக உருவாக்கினோம்.

அடுத்ததாக 20 பேர் செல்லும் வசதி கொண்ட விமானத்தை தயாரிக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம். மத்திய விமான போக்குவரத்துத் துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் விமான தயாரிப்புப் பணிகள் உடனடியாக துவங்க இருக்கிறோம்.

அனுமதி கிடைத்தவுடன் 15 மாதங்களுக்குள் முதல் மாதிரி விமானம் தயாராகி விடும். இந்த விமானம் நகரங்களுக்கு இடையில் இயக்குவதற்கான வசதிகள் கொண்டதாக இருக்கும்.

வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் விமானங்களைவிட விலை மிக குறைவாக இருக்கும் என்பதால், இந்த விமானம் நம் நாட்டு வான் வழி போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும்," என்று அமோல் யாதவ் தெரிவித்தார்.

இந்த விமானத்தில் பயணம் செய்வதற்கு ரூ.2,000 என்ற அளவில் கட்டணம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சலுகைகளை பெற முடியும் என்பதால் விரைந்து இந்த விமான தயாரிப்பு திட்டம் குறித்த காலத்தில் செயல்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








