90 நிமிடங்களில் குர்கான் டூ ஜெய்ப்பூர்... இந்தியாவின் முதல் சூப்பர் எக்ஸ்பிரஸ் சாலை!!
குர்கான்- ஜெய்ப்பூர் இடையே அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அதி விரைவு நெடுஞ்சாலை குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
டெல்லி அருகே உள்ள குர்கானில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சூப்பர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை பற்றிய சிறப்புத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

டெல்லி- ஜெய்ப்பூர் இடையிலான 260 கிமீ தூரத்தை சாலை மார்க்கமாக கடப்பதற்கு 5 முதல் 6 மணி நேரம் பிடிக்கிறது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியிலிருந்து சுற்றுலா மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஜெய்ப்பூரை அதிவிரைவாக இணைப்பதற்காக புதிய சூப்பர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

டெல்லி அருகிலுள்ள குர்கான் நகரிலிருந்து ஜெய்ப்பூருக்கு 200 கிமீ தொலைவுக்கு இந்த புதிய சூப்பர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலையின் மூலமாக குர்கான் - ஜெய்ப்பூர் இடையிலான 200 கிமீ தூரத்தை வெறும் 90 நிமிடங்களில் கடந்து விட முடியும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

தற்போது நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக 100 கிமீ வேகம் வரை அனுமதிக்கப்படுகிறது. ஆனால், புதிய சூப்பர் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வேக வரம்பு அதிகரிக்கப்பட உள்ளது. இதன்மூலமாக, மேற்சொன்ன ஒன்றரை மணிநேரத்தில் இந்த இரு நகரங்களையும் இணைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குர்கான் எல்லையில் துவங்கி ஜெய்ப்பூர் வெளிவட்ட சாலையில் இந்த சூப்பர் நெடுஞ்சாலை முடிவடையும்.

இந்த சூப்பர் எக்ஸ்பிரஸ் சாலையில் அதிகபட்ச வேகத்தில் வாகனங்களை இயக்குவதற்கு அனுமதிக்கப்பட உள்ளது. இதற்காக, பழைய விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மேலும், புதிதாக அமைக்கப்பட உள்ள சூப்பர் எக்ஸ்பிரஸ் சாலையில் மணிக்கு 165 கிமீ வேகம் வரை வாகனங்களை செலுத்துவதற்கான வடிவமைப்புடன் அமைக்கப்பட உள்ளது.

எக்ஸ்பிரஸ் சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் இடத்திற்கு தக்கவாறு வேக வரம்பை மாற்றி அமைக்கவும் முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதாவது, அதிகபட்சமாக 130 கிமீ முதல் 140 கிமீ வேகம் வரை செல்வதற்கு அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜெர்மனியில் உள்ள ஆட்டோபான் விரைவு சாலையில் இதுபோன்று அதிவேகத்தில் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால், பல வெளிநாட்டினர் ஆட்டோபான் சாலையில் வந்து கார் ஓட்டி மகிழ்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்தியாவில் சாலை கட்டமைப்பு மிக வேகமாக மேம்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்தியாவின் ஆட்டோபான் சாலையாக குர்கான்- ஜெய்ப்பூர் சாலை அமைய இருக்கிறது. எனவே, இனி வெளிநாடுகளுக்கு செல்லாமல், இந்த சாலையிலேயே கார் ஓட்டி மகிழ்வதற்கான வாய்ப்பு இந்தியர்களுக்கு கிடைக்க இருக்கிறது.
புதிய டாடா டாமோ ரேஸ்மோ காரின் படங்கள்!
புதிய டாடா டாமோ ரேஸ்மோ காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் கண்டு ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications








