இந்திய சாலை என கெத்தா சொல்லலாம் - 2025இல் தரமான சம்பவம் இருக்கு... பாதி வேலை முடிஞ்சாச்சு!!
எந்தவொரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அந்த நாட்டில் உள்ள சாலை கட்டமைப்பு ஆனது மிக முக்கியமான ஒன்றாகும். அதாவது, எந்த அளவிற்கு தரமான சாலை வசதிகள் பரந்து விரிந்து உள்ளதோ அந்த அளவிற்கு அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என சொல்லலாம். இதனை நன்கு புரிந்து வைத்துள்ள நம் இந்திய அரசு குறிப்பாக விரைவுச்சாலைகளை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான இரு மாநகரங்களான டெல்லி மற்றும் மும்பை இடையே விரைவுச்சாலை கொண்டுவரப்பட்டது மத்திய நெடுஞ்சாலை துறையின் சமீப கால மிக முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலை ஆக டெல்லி- மும்பை விரைவுச்சாலை விளங்குகிறது. இந்த நிலையில், இந்தியாவின் 2வது மிக நீளமான விரைவுச்சாலையும் பயன்பாட்டிற்கு தயாராகி வருகிறது. முதல் விரைவுச்சாலையை போன்று, 2வது விரைவுச்சாலையையும் வட இந்தியாவில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸையும், குஜராத்தின் ஜாம்நகரையும் இணைக்கும் விதத்தில் இந்த விரைவுச்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. இடையில், ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தை கடந்து செல்லும் வகையில் இந்த விரைவுச்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. ஏறக்குறைய நெடுஞ்சாலையின் 500கிமீ நீளம் தார் பாலைவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள வறண்ட பகுதிகளில் அமைகிறது. இதனால், பாலைவனத்தின் அதிகப்படியான வெப்பத்தை தாங்கும் வகையில் இந்த சாலையை கட்டமைத்துள்ளனர்.
இந்தியாவின் இந்த 2வது நீளமான விரைவுச்சாலையின் பணிகள் பாதி முடிந்துவிட்டன. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, வருகிற 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த சாலை பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விரைவுச்சாலை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுவிடும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் நம்பிக்கையுடன் உள்ளது. இந்த விரைவுச்சாலை பயன்பாட்டிற்கு வந்தபின் அமிர்தசரஸ் - ஜாம்நகர் இடையேயான பயண நேரம் பாதியாக குறைந்துவிடும் எனவும் மத்திய அரசு நம்பிக்கையாக உள்ளது.

தற்சமயம், பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள இந்த இரு முக்கிய நகரங்களுக்கு இடையேயான தூரம் 1,516கிமீ ஆகும். இந்த தொலைவை கடக்க தற்போதைக்கு ஏறக்குறைய 26 மணிநேரங்கள் தேவைப்படுகிறது. ஆனால், புதிய விரைவுச்சாலையின் மூலம் பயண தொலைவு 1,316கிமீ ஆக குறைவது மட்டுமின்றி, பயண நேரமும் பாதியாக, அதாவது வெறும் 13 மணிநேரங்களாக குறையும் என கூறப்படுகிறது.
இந்தியாவின் மிக நீளமான டெல்லி- மும்பை விரைவுச்சாலையின் நீளம் 1,350கிமீ ஆகும். ராஜஸ்தான் மட்டுமின்றி, ஹரியானா மாநிலத்தையும் இந்த விரைவுச்சாலை கடந்து செல்லும். இந்தியாவின் மிக முக்கிய தொழில்வள மாநிலங்களுள் ஒன்றாக ஹரியானா விளங்குகிறது. இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி உள்பட பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை ஹரியானாவில் கொண்டுள்ளன.

இந்த தொழிற்சாலைகளுக்கான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து பெரும்பாலும் குஜராத் துறைமுகங்கள் வழியாகவே கொண்டுவரப்படுகின்றன. ஆதலால், அமிர்தசரஸ் - ஜாம்நகர் இடையேயான விரைவுச்சாலை நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தலைநகர் டெல்லிக்கு அருகாமையில் இருப்பதினாலேயே பல தனியார் நிறுவனங்கள் போட்டிப் போட்டு கொண்டு ஹரியானாவின் குருக்கிராம் நகரத்தில் தங்களது அலுவலத்தை அமைத்து வருகின்றன.
மேலும், டெல்லிவாசிகளுக்கும் இந்த புதிய விரைவுச்சாலை பயனுள்ளதாக இருக்கும். இதற்காக, டெல்லி- காத்ரா விரைவுச்சாலை உடன் இணையும் விதத்தில் இந்த புதிய விரைவுச்சாலையை கட்டமைத்து வருகின்றனர். இந்த விரைவுச்சாலையின் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்த சாலையில் பெரும்பான்மையான தொலைவை 100kmph வேகத்தில் கடக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், நாட்டின் வளர்ச்சிக்கு விரைவுச்சாலைகள் மிக முக்கியமான ஒன்றாகும். போக்குவரத்தை எந்த அளவிற்கு விரைவுப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நாட்டின் முன்னேற்றமும் வேகமெடுக்கும். ஆனால், இவ்வாறு புது, புது விரைவுச்சாலைகள் வந்தால், வேகமாக பைக் ஓட்டும் இளைஞர்களும் குஷியாகிவிடுவார்கள் என்பதை நினைத்தால் தான் கொஞ்சம் பயமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









