பெட்ரோல் வளம் மூலம் அடி வயிற்றில் அடிக்கும் அரபு நாடுகள்.. பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த இந்தியா
இந்தியாவில் பெட்ரோலுடன் 15 சதவீத மெத்தனாலை கலந்து பயன்படுத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பெட்ரோலுடன் 15 சதவீத மெத்தனாலை கலந்து பயன்படுத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், கச்சா எண்ணெய்க்காக அரபு நாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலை குறையும். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை சமீப காலமாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வை சமாளிக்க முடியாமல் சாமானிய மக்கள் திணறி வருகின்றனர். இன்றைய நிலவரப்படி (ஆகஸ்ட் 3) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.72க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய்தான் பெட்ரோல், டீசலின் மூலப்பொருள். இந்த கச்சா எண்ணெய்யை, ஈராக், ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகையை கேட்டால் தலை சுற்றிப்போவது நிச்சயம். ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடுகிறது. இந்திய மக்களின் வரிப்பணம் அரபு நாடுகளின் கஜானாவை நிரப்புகிறது.

ஆனால் ஒரு ஆண்டுக்கு 2,900 கோடி லிட்டர் பெட்ரோல் மற்றும் 9,000 கோடி லிட்டர் டீசலை, அரபு நாடுகளிடம் இருந்து இந்தியா நுகர்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே மாற்று எரிபொருளை வெகு விரைவாக கண்டறிந்தே ஆக வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருந்து வருகிறது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில், 10 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்பட்டு வருகிறது.

கரும்புச்சாற்றில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்த பின்னர் மொலாசஸ் என்ற துணைப்பொருள் கிடைக்கிறது. இந்த மொலாசஸில் இருந்துதான் எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. 10 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில்தான் தற்போது இந்தியாவில் வாகனங்கள் ஓடிகொண்டிருக்கின்றன.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிபொருட்களில் ஒன்றாக எத்தனால் கருதப்படுகிறது. அத்துடன் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் நமது நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும். உலக நாடுகள் பலவும் எத்தனால் எரிபொருளுக்கு மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், பெட்ரோலுடன் 15 சதவீத மெத்தனாலை கலப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எத்தனால் போன்று மெத்தனாலும் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும் எத்தனாலை காட்டிலும் மெத்தனால்தான் அதிக பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என கருதப்படுகிறது.

ஏனெனில் ஒரு லிட்டர் எத்தனாலின் விலை 42 ரூபாய். ஆனால் ஒரு லிட்டர் மெத்தனாலின் விலை 20 ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே 15 சதவீத மெத்தனாலை கலக்கும்போது, பெட்ரோல் விலை சுமார் 10 சதவீதம் வரை குறையலாம்.

இன்றைய நிலவரப்படி பார்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 80 ரூபாய். அப்படியானால் 15 சதவீத மெத்தனால் கலக்கப்பட்டால், பெட்ரோல் விலை 8 ரூபாய் வரை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

அத்துடன் அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்க முடியும். இதன்மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகையின் பெரும்பகுதி சேமிக்கப்படும். எனவே பெட்ரோலில் 15 சதவீத மெத்தனாலை கலப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோலில் 15 சதவீத மெத்தானலை கலக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், மாதந்தோறும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகையில், 10 சதவீதம் குறைந்து விடும். 15 சதவீத மெத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்க, வாகன இன்ஜின்களில் சிறிய மாற்றம் செய்தாலே போதுமானது.

மெத்தனால் எரிபொருள் என்பது நிலக்கரியில் இருந்து உற்பத்தி செய்யக்கூடியது. வணிக பயன்பாட்டிற்காக நிலக்கரியில் இருந்து மெத்தனால் உற்பத்தி செய்யும் வகையில் மூன்று R&D (Research and development) ப்ராஜெக்ட்கள் திருச்சி, ஐதாராபாத், புனே ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வணிக பயன்பாட்டிற்கான மெத்தனால் தயாராகவே உள்ளது. ஏனெனில் மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசுகள், இதற்கெனவே நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தீவிரமாக முயற்சி செய்தால், அடுத்த 4 ஆண்டுகளில், மெத்தனால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எக்கச்சக்கமாக மெத்தனால் கிடைப்பதன் மூலமாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.

போதுமான அளவு மெத்தனால் கிடைத்தால், டீசலுடன் கலந்தும் அதனை பயன்படுத்த முடியும். எனவே டீசல் விலையும் கணிசமாக குறையும். இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக, கடந்த ஜூலை மாத கடைசி வாரத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக, தனிப்பட்ட முறையில் சில உயரதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என அந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பயன்கள் அப்படி.

அரபு நாடுகள் சில சமயங்களில், கச்சா எண்ணெய் உற்பத்தியை திடீரென குறைத்து விடுகின்றன. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தாறுமாறாக உயர்ந்து விடுகிறது. அந்த சமயங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மாட்டோம் என அரபு நாடுகள் முரண்டு பிடிப்பது வாடிக்கை.

ஏனெனில் உற்பத்தியை அதிகரித்து விட்டால், பற்றாக்குறை நீங்கி, கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து விடுமே! இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் பெட்ரோலுடன் 15 சதவீத மெத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டம் அமலானால், கச்சா எண்ணெய்க்காக அரபு நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை குறையும்.

இந்த திட்டத்தில் அடங்கியிருக்கும் மற்றொரு முக்கிய அம்சம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு. கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை வெறும் 20 சதவீதம் குறைத்து விட்டு, அதற்கு பதிலாக மெத்தனால் பயன்படுத்த தொடங்கினாலே, நமது நாட்டின் சுற்றுச்சூழல் மாசுபாட்டை 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைத்து விட முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








