ஊரடங்கை மீறினால் இனி நேரா அங்கதான் போகணும்... காவல் துறை அதிரடியால் வெல வெலத்து போன மக்கள்...
ஊரடங்கை மீறும் நபர்களுக்கு எதிராக காவல் துறையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து முழுமையான ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை மீறி, தேவையில்லாமல் யாராவது வெளியில் சுற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்தூர் நகரமே பாலைவனம் போல் வெறிச்சோடி போயுள்ளது.

எனினும் ஒரு சிலர் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர். அவர்கள் மீது காவல் துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன்படி ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 685 பேரை காவல் துறையினர் தற்காலிக சிறைக்கு அனுப்பி அதிரடி காட்டியுள்ளனர். ஊரடங்கை மீறும் நபர்களை தண்டிப்பதற்காக தற்காலிக சிறை ஏற்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தூர் நகரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக ஒரே நாளில் காவல் துறையினர் இவ்வளவு பேரை இதற்கு முன்பு கைது செய்தது கிடையாது என்பதும் கவனிக்கத்தக்கது. இதுதவிர ஏராளமான வாகனங்களையும் காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் எவ்வளவு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது? என்ற தகவலை காவல் துறையினர் வழங்கவில்லை.

மேலும் வீட்டில் இருந்து வெளியே வந்ததற்கு உரிய காரணங்களை வழங்காதவர்களின் வாகனங்களில் காவல் துறையினர் காற்றையும் பிடுங்கி விட்டுள்ளனர். இந்த வரிசையில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கேக் உடன் வந்த ஒருவரின் வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திங்கள் கிழமையன்று மட்டும் சுமார் 100 வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

மேலும் 25 பேரை தற்காலிக சிறைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இதேபோன்று கடுமையான நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுத்து வருகின்றனர். இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகின்றனர்.

ஆனால் கடந்த ஆண்டை போல், இம்முறை நாடு தழுவிய அளவில் ஊரடங்கை பிறப்பிக்கப்போவதில்லை என மத்திய அரசு அறிவித்து விட்டது. எனினும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. இதன்படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இதில், தமிழகமும் அடங்கும். தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அற்ற முழுமையான ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தில் தொடக்கத்தில் காவல் துறையினர் பெரிதாக கடுமை காட்டவில்லை. எனவே ஊரடங்கை மீறி பலர் தேவையில்லாமல் வெளியே சுற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்து, அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தின.

ஆனால் தற்போது தளர்வுகள் அற்ற ஊரடங்கு என்பதால், உரிய காரணம் இல்லாமல் வெளியே வரும் வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதுபோன்ற கடும் நடவடிக்கைகள் காரணமாக வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








