இரண்டு கைகளும் இல்லாமல் கார் ஓட்டி அசத்தும் மாற்றுத்திறனாளி!!
இரண்டு கைகளும் இல்லாமல் கால்களாலேயே காரை அனாயசமாக ஓட்டி அசத்துகிறார் இந்தூரை சேர்ந்த விக்ரம் அக்னிஹோர்த்தி. கார் ஓட்டுவதற்கான முறையான டிரைவிங் லைசென்ஸை பெற்றுவிட்டார் என்பதே விசேஷமான செய்தி.
இதனால், சாலைகளில் சர்வசாதாரணமாக தனது காரில் பறக்கிறார். மேலும், இரண்டு கைகள் இல்லாமல் கார் ஓட்டுவதற்கான முறைப்படி டிரைவிங் லெசென்ஸ் பெற்ற இந்தியாவின் முதல் மாற்றுத்திறன் பெற்றவாரகவும் கருதப்படுகிறார். விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

சிறு வயதிலேயே மின் விபத்தில் சிக்கியபோது இரண்டு கைகளையும் இழந்தார் விக்ரம். அத்துடன் சோர்ந்துபோய்விடவில்லை. அவர் வளர வளர தனது தன்னம்பிக்கையை பன்மடங்கு வளர்ந்து கொண்டார்.

கை இல்லை என்ற குறை தெரியாத அளவுக்கு கால்களாலையே அனைத்து வேலைகளையும் செய்து கொள்கிறார் விக்ரம். ஆம், எழுதுவது, முகச்சவரம் செய்வது, லேப்டாப்பை இயக்குவது என கால்களாலையே அனைத்தையும் செய்கிறார் 46 வயதாகும் விக்ரம்.

அத்துடன் நின்றுபோகவில்லை. தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும் வளர்க்கும் சொற்பொழிவாளராகவும், கால் பந்தாட்டம் மற்றும் நீச்சலிலும் கூட இவர் அசத்துகிறார். சட்டப் படிப்பையும் முடித்திருக்கிறார். தொழில் முனைவராகவும் பல பணிகளை செய்து வரும் விக்ரமிற்கு மனதில் நினைத்ததையெல்லாம் செய்துவிடுவதற்கு அவரது கால்கள் கைகள் போன்று உறுதுணையாக நிற்கின்றன.

கடந்த ஆண்டு கார் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு பிறந்தது. உடனடியாக, காரை ஓட்டுவதற்கான பயிற்சியில் ஈடுபட துவங்கினார். கடும் பயிற்சிக்கு பின்னர் ஆட்டோமேட்டிக் காரை ஓட்டுவதற்கான முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

வலது காலால் ஸ்டீயரிங்கையும், இடது காலால் பிரேக் மற்றும் ஆக்சிலரேட்டரை கட்டுப்படுத்துகிறார். ஆனால், ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால், ஓட்டுனர் உரிமம் கொடுப்பதற்கு உடல் தகுதி இல்லாதவராக கருதி, அதிகாரிகள் தயங்கினர்.

சட்டம் படித்தவராயிற்றே விக்ரம். விடுவாரா என்ன? மாற்றுத்திறனாளிகள் வசதியாக இயக்குவதற்கு ஏற்ப வாகனங்களில் மாறுதல்களை செய்து கொண்டு வந்தால், கார் டிரைவிங் லைசென்ஸ் தரலாம் என்ற விதியை பிடித்துக் கொண்டு காரில் ஒரேயொரு மாற்றத்தை செய்தார்.

அதாவது, பிரேக் மற்றும் ஆக்சிலரேட்டர் பெடல்களை இயக்குவது அவருக்கு சிரமமாக இருந்திருக்கிறது. இதையடுத்து, பிரேக் பெடலுக்கு இடது பக்கத்தில் புதிதாக ஒரு ஆக்சிலரேட்டர் பெடலை மெக்கானிக் உதவியுடன் பொருத்திவிட்டார்.

இதையடுத்து, அவரால் காரை எளிதாகவும், லாவகமாகவும் இயக்க முடிந்தது. இருந்தாலும் விக்ரமிற்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு, வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தயங்கியதாக தெரிகிறது.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, போக்குவரத்து துறையின் உயரதிகாரிகளை, தனது கோரிக்கையை அழுத்தமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். பின்னர் ஒருவழியாக டிரைவிங் லைசென்ஸை வாங்கிவிட்டார். இரண்டு கைகளும் இல்லாமல் டிரைவிங் லைசென்ஸ் பெற்ற இந்தியாவின் முதல் வாகன ஓட்டுனராக இவர் கருதப்படுகிறார்.

மாருதி ஆல்ட்டோ கே10 காரின் ஏஎம்டி மாடலையே அவர் பயன்படுத்துகிறார். வாங்கி 15 மாதங்களில் இதுவரை 14,500 கிமீ தூரம் பயணித்திருக்கிறார். அனைத்து சாலைகளிலும் காரை வெகு லாவகமாக ஓட்டுகிறார். இதுவரை ஒரு சிறு விபத்தை கூட நிகழ்த்தவில்லை.

ஆரம்பத்தில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டபோது பலர் வேடிக்கை பார்த்துள்ளனர். ஆனால், இப்போது யாரும் என்ன கண்டுகொள்வதில்லை. அந்தளவு சிறப்பாக ஓட்டுகிறேன். கார் ஓட்டுவதும் என் வாழ்க்கையில் மிகச்சிறப்பான அனுபவங்களில் ஒன்றாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

பெற்றோருடன் வசித்து வரும் விக்ரம், தன் போன்றே, பிற மாற்றுத்திறனாளிகளுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணரும் நோக்கில் வாழ்வில் வென்றவர்கள் [WIL] என்ற தன்னார்வ நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்.

இதற்கு நிதி திரட்டுவதற்காக அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இமயமலையில் உள்ள லே - லடாக்கிற்கு தனது காரில் சாகச பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மேலும், அங்குள்ள உலகின் உயரமான வாகன போக்குவரத்து சாலையான கர்துங்லாவுக்கு தனது காரில் பயணிக்க இருக்கிறார்.

இரண்டு கையுள்ள சோம்பேறிகள் மத்தியில், இரண்டு கைகளும் இல்லாமல் பல்துறை வித்தகனாக விளங்கும் விக்ரம் மேலும் பல சிகரங்களை தொட எமது வாழ்த்துகள்!

- 8 போட்டா லைசென்ஸ்... இல்லாட்டி ஏழரைதான்...!
- பழகுனர் உரிமத்துக்கு (எல்எல்ஆர்) விண்ணப்பிப்பது எப்படி?
- டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கும் வழிமுறை
Picture credit: The Better India And Facebook


Click it and Unblock the Notifications








