உங்கள் வாகனத்தில் இருந்து இது திருடப்பட்டால் உங்களுக்கு தெரியவே தெரியாது! அதுதான் திருடர்களின் குறி
உங்கள் வாகனத்தில் இருந்து இந்த பாகம் திருடப்பட்டால், உங்களுக்கு அது தெரியவே தெரியாது. அந்த பாகத்தை குறி வைத்து தற்போது கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

இந்தியாவில் வாகனங்கள் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. சில சமயங்களில் கொள்ளையர்களால் வாகனங்கள் அப்படியே திருடப்பட்டு விடுகின்றன. இன்னும் சில சமயங்களில், வாகனங்களின் குறிப்பிட்ட ஒரு சில பாகங்களை மட்டும் குறி வைத்து கொள்ளையர்கள் தங்களின் கைவரிசையை அரங்கேற்றுகின்றனர்.

இதில், இரண்டாவது ரகம்தான் இந்தியாவில் தற்போது மிகவும் அதிகமாக நடைபெற தொடங்கியுள்ளது. ஆம், வாகனங்களின் குறிப்பிட்ட சில பாகங்கள் மட்டும் கொள்ளை போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் கொஞ்சம் வினோதமான கொள்ளை ஒன்று தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது.

கார்களின் லோகோக்களை மட்டும் குறி வைத்து கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று இந்தூர் நகரில் தற்போது களமிறங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற மிகவும் விலை உயர்ந்த கார்களின் லோகோக்களை மட்டும் குறி வைத்து அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தூர் நகரில் கார்களின் லோகோக்களை திருடுவது என்பது தற்போது ஒரு டிரெண்ட் ஆகவே மாறி விட்டது. குறிப்பாக ஆடம்பரமான பகுதிகளில், வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் விலை உயர்ந்த கார்களின் லோகோக்கள் அதிகம் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. செல்வ செழிப்பான மக்கள் வசிக்கும் பகுதிகள்தான் கொள்ளையர்களின் குறியாக உள்ளது.

கார்களின் லோகோக்களை திருடி என்ன செய்ய போகிறார்கள்? என நீங்கள் கேட்பது புரிகிறது. லக்ஸரி கார்களின் அனைத்து பாகங்களுமே விலை உயர்ந்தவைதான். இதில் லோகோக்களும் கூட விதி விலக்க அல்ல. லக்ஸரி கார்களினுடையே ஒரிஜினல் லோகோக்களின் ஆரம்ப விலையே 7 ஆயிரம் ரூபாய்க்கு நெருக்கமாக வருகிறது.

10 ஆயிரம் ரூபாய்க்கும் கூட லோகோக்கள் உள்ளன. எனவே திருடப்படும் லோகோக்களை கள்ள மார்க்கெட்டில் குறைவான விலைக்கு விற்பனை செய்து கொள்ளையர்கள் காசு பார்க்கின்றனர். பெரும்பாலான லக்ஸரி கார்களின் லோகோக்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதிதான் செய்ய வேண்டும். எனவேதான் அதன் விலை அதிகமாக உள்ளது.

இதனிடையே இந்தூர் நகரை பொறுத்தவரை பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா உள்ளிட்ட கார்களின் லோகோக்கள் அதிகமாக கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் ஸ்வேதா குப்தா என்பவரின் ஹோண்டா அமேஸ் காரின் லோகோவும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அவர் காரை வாங்கிய ஒரு சில மாதங்களுக்கு உள்ளாகவே லோகோ கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. லோகோ கொள்ளையடிக்கப்பட்டால், கார் உரிமையாளர்கள் அதனை கவனிப்பதில்லை என ஸ்வேதா குப்தா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''பஞ்சர் இருக்கிறதா? என நாங்கள் டயர்களை பரிசோதிப்போம்.

அதேபோல் ஏதேனும் ஸ்கிராச் ஆகியுள்ளதா? என காரின் பாடியையும் சோதித்து பார்ப்போம். ஆனால் கார் உரிமையாளர்கள் ஒருபோதும் பின் பக்க லோகோவை 'செக்' செய்து பார்ப்பதே கிடையாது'' என்றார். இவர் சொல்வதும் உண்மைதான். லோகோ திருடப்பட்டால், பெரும்பாலான கார் உரிமையாளர்களுக்கு அது தெரிவதே கிடையாது. லோகோ இல்லாமலேயே கார்களை ஓட்டுகின்றனர்.

இதனிடையே லோகோவிற்காக ஸ்வேதா குப்தா சர்வீஸ் சென்டரை அணுகியுள்ளார். அப்போது இதற்கு குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபாய் செலவாகும் என அவர்கள் கூறியதாக ஸ்வேதா குப்தா தெரிவித்துள்ளார். ஹோண்டா அமேஸ் ஓரளவிற்கு விலை குறைவான கார்தான். அது லக்ஸரி கார் கிடையாது. ஆனால் அதற்கே 2 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

ஆனால் இந்தூர் நகரின் பலாசியா போலீஸ் ஸ்டேஷன் இன்-சார்ஜ் அஜித் பையஸ், இது தொடர்பாக எங்களுக்கு இதுவரை எவ்விதமான புகாரும் வரவில்லை என தெரிவித்துள்ளார். அதே சமயம் லோகோ திருட்டு அதிகரித்து வருவதை நாங்கள் அறிவோம் எனவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''புகார் பதிவு செய்ய மக்கள் முன்வர வேண்டும்.

மக்கள் புகார் அளித்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். இதுதவிர கடந்த ஒரு ஆண்டில் மட்டும், லோகோ வேண்டும் என ஏராளமான கார் உரிமையாளர்கள் விசாரித்துள்ளதாக வாகன டீலர்களும் தெரிவித்துள்ளனர். லோகோக்கள் கொள்ளையடிக்கப்படுவதை இதுவும் உறுதி செய்கிறது. எனவே எதற்கும் நீங்கள் கொஞ்சம் உஷாராகவே இருந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








