கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை... உள்ளுக்குள் உதறலில் சீனா!
அடுத்த ஆண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை ராணுவ பயன்பாட்டில் இணைக்கப்பட உள்ளது.
வடக்கு சீனப் பகுதி வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை விரைவில் ராணுவ பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.
இது அண்டை நாடான சீனாவுக்கு பெரும் அதிர்ச்சி தரும் தவலாக அமைந்துள்ளது. இந்த ஏவுகணையின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்ட ஏவுகணையாக அக்னி-5 ராணுவ பயன்பாட்டிற்க வர இருக்கிறது. இந்த ஏவுகணையானது அதிகபட்சமாக 5,500 கிமீ தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

குறிப்பாக, சீனாவின் வடக்குப் பகுதியிலுள்ள நகரங்களைகூட இந்த ஏவுகணையின் மூலமாக துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். மேலும், இந்த ஏவுகணையில் அணு ஆயுதங்களையும் வைத்து செலுத்த முடியும்.

திட்டமிட்ட இலக்கை நோக்கி சரியான வழிகாட்டுதல் முறையில் இந்த ஏவுகணையை செலுத்த முடியும். அத்துடன், இந்த ஏவுகணையை டிரக்குகளில் உள்ள மொபைல் லாஞ்சர் மூலமாக எந்தவொரு இடத்திலிருந்தும் செலுத்த முடியும்.

அதாவது, நாட்டின் எந்த மூலைக்கும் டிரக்கிலோ அல்லது ரயில் மூலமாக எடுத்துச் சென்று ஏவுவதற்கான வசதி கொண்டது. இதனால், எந்த இடத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்படுகிறது என்பதை எதிரி நாடுகள் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. அத்துடன், அதிக தூரத்தில் உள்ள எதிரி நாட்டு நகரங்களை கூட தாக்கும் வல்லமையை நம் நாட்டு ராணுவம் பெறும்.

அக்னி-5 ஏவுகணையானது 17.5 மீட்டர் நீளமும், 50 டன் எடையும் கொண்டது. மூன்று கட்டங்களாக திட எரிபொருள் நிரப்பட்ட ஏவுகணை. இதில், இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை எரிபொருளில் இந்த ஏவுகணை மேக்-24 [மணிக்கு 29,635 கிமீ வேகம்] வேகத்தில் பயணித்து இலக்கை தாக்கும். எனவே, எதிரி நாட்டு ரேடார்களுக்கு சிம்ம சொப்பனமாக அமையும்.

இந்த ஏவுகணையின் வெளிப்புற பகுதியானது அதிக வெப்பத்தை தாங்குவதற்கு ஏற்ப விசேஷ உலோக கலவையில் உருவாக்கப்பட்டது. கார்பன் மற்றும் இதர உலோகங்கள் கலந்த கலப்பு உலோக வெப்ப தடுப்பு தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. ஏவுகணையில் பொருத்தப்பட்டு இருக்கும் வெடிப் பொருட்கள் வெப்பத்தின் காரணமாக முன்கூட்டியே வெடித்து விடாமல் இருக்க சிறப்பு பாதுகாப்பு கவசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு டன் எடையுடைய அணு ஆயுதத்தை வைத்து செலுத்த முடியும்.

இதனிடையே, அக்னி-5 ஏவுகணை 8,000 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாக சீனாவை சேர்ந்த ஏவுகணை தயாரிப்பு துறை பொறியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, சீனாவின் தலைநகர் பீஜிங்கை குறிவைத்து இந்த ஏவுகணையை செலுத்தும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.

மொத்தம் 4 கட்டங்களாக இந்த அக்னி-5 ஏவுகணை சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மூன்று சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட நிலையில், கடைசி கட்ட சோதனை இந்த மாத இறுதியில் அல்லது ஜனவரி துவக்கத்தில் நடைபெற உள்ளது.

அடுத்த ஆண்டு இந்த புதிய அக்னி-5 ஏவுகணை ராணுவ பயன்பாட்டில் சேர்க்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலமாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணையை பெற்றிருக்கும் 6வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

இந்த ஏவுகணைக்காக விசேஷ விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. நம் நாட்டு பிரதமர் நேரடியாக உத்தரவிட்டால் மட்டுமே இந்த ஏவுகணையை ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








