இந்திய ஸ்பைடர் மேன் மற்றும் ஸ்பைடர் பெண்ணை கைது செய்த காவலர்கள்.. பல்சர் பைக் வச்சிருந்தா இப்படி செய்ய தோனுமோ!
இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் இரண்டு பேரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இருவரும் சாலையில் ஸ்பைடர் மேன் (சிலந்தி மனிதன்) உடை அணிந்து வலம் வரும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர்களை காவலர்கள் கைது செய்திருக்கின்றனர். இந்த நிகழ்வு எங்கு அரங்கேறியது? இன்ஸ்டா பிரபலங்களின் கைதுக்கு பின்னால் உள்ள காரணம் என்ன? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவில் வாகன விபத்துகள் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக போக்குவரத்து விதிமீறல்களே உள்ளன. சில நிமிடங்கள் சந்தோஷத்திற்காகவும், அவசரத்திற்காகவும் வாகன ஓட்டிகள் செய்யும் சிறு தவறுகள் மிகப் பெரிய விபத்துகளுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே ஸ்பைடர் மேன் (சிலந்தி மனிதன்) உடை அணிந்து இரண்டு சக்கர வாகனத்தில் வலம் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

இந்த கைதுக்கு பின்னால் போக்குவரத்து விதிமீறலே முக்கிய காரணமாக உள்ளது. இரண்டு சக்கர வாகனத்தில் வலம் வந்த இரண்டு பேரும் தலைக் கவசம் அணியவில்லை. குறிப்பாக, பைக்கை ஓட்டி வந்த இளைஞர் சாலையில் இரண்டு சக்கர வாகனம் வேகமாக ஓடிக் கொண்டிக்கும்போதே அதில் இருந்து கைகளை எடுத்துவிட்டு சாகசம் செய்துக் காட்டியிருக்கின்றார்.
இந்த விதிமீறல்களுக்காகவே இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், அந்த பைக்கில் கண்ணாடிகளும் இல்லாமல் இருந்திருக்கின்றன. அதுதவிர, நம்பர் பிளேட்டும் அதில் பொருத்தப்படவில்லை. இது மிகப் பெரிய குற்றம் ஆகும். இதன் விளைவாகவே உச்சப்பட்ட நடவடிக்கையாக இருவரையும் காவலர்கள் கைது செய்து உள்ளனர்.

இத்துடன் அவர்கள் பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். அவர்கள் பயன்படுத்தியது பஜாஜ் பல்சர் என்250 மாடல் ஆகும். சமீபத்திலேயே இதன் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது, பஜாஜ். இதன் இப்போதைய விற்பனை விலை 1.50 லட்சம் ரூபாய் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இத்தகைய அதிக விலையில் விற்கப்படும் பைக் மாடலின் பழைய வெர்ஷனையே விதிமீறலில் ஈடுபட்ட காரணத்திற்காக போலீஸிடம் இழந்திருக்கின்றார் இந்தியன் ஸ்பைடர் மேன். இத்துடன், அவர்களுக்கு அவர்கள் மேற்கொண்ட அனைத்து விதிமீறல்களுக்கான அபராத செல்லாணும் வழங்கப்பட்டு இருக்கின்றது. தன்னை இந்திய சிலந்தி மனிதன் என குறிப்பிட்டுக் கொள்ளும் இந்த இளைஞர், இதே பெயரில் ஓர் இன்ஸ்டாகிராம் கணக்கை செயல்படுத்தி வருகின்றார்.

இதில் ஃபாலோவர்களைக் கூட்ட வேண்டும் என்பதற்காகவும், லைக்ஸ்களை குவிக்க வேண்டும் என்பதற்காகவுமே இத்தகைய செயலில் ஈடுபட்டு இருக்கின்றார். ஆனால், போக்குவரத்து விதிகளின்படி இது விதிமீறல் செயல் ஆகும். இவர்களின் இந்த ஸ்டண்ட் செயல் பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி மற்றவர்களையும் அதைச் செய்ய தூண்டும் வகையில் இருக்கின்றது.
இதன் விளைவாகவே விதிமீறல்வாதிகளுக்கு தக்க பாடம் கற்பிக்கும் விதமாக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இந்தியாவில் பொதுவெளியில் அல்லது பொது சாலையில் வாகன ஸ்டண்டில் ஈடுபடக் கூடாது என்பது முக்கிய விதியாகும். அத்துடன், அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் மட்டுமே அந்த வாகனம் சாலையில் இயக்க தகுதியானவை.
நம்பர் பிளேட் இல்லாமல் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். இதேபோல், இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர் என இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும். இந்த விதிகள் எதையும் சிலந்தி மனிதன் மற்றும் சிலந்தி பெண் மனிதன் இருவரும் கடைபிடிக்கவில்லை. இதன் விளைவாக மிகப் பெரிய சிக்கலில் அவர்கள் சிக்கியிருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன போக்குவரத்து விதிமீறல்களின் எண்ணிக்கையும், விபத்தின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக காவல்துறை இணையத்தில் வைரலாகும் வீடியோவை அடிப்படையாகக் கொண்டெல்லாம் தன்னுடைய கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.


Click it and Unblock the Notifications









