ஓர் இன்ஸ்டாகிராம் பிரபலம் இப்படியா நடந்து கொள்வது? ஒரு ரீல்ஸ் வீடியோவுக்கு ரூ.17,000 அபராதம் - போலீஸார் அதிரடி
ரீல்ஸ் வீடியோக்கள் நாம் எதிர்பார்த்ததை போன்று இணையத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், செய்திகளையும், சமூக வலைத்தள பக்கங்களையும் தடவி தடவி பார்த்து கொண்டிருப்பவர்களை காட்டிலும், ரீல்ஸ் வீடியோக்களை பார்ப்பவர்களே அதிகமாக உள்ளனர். வெறும் சில வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியவைகளாக இருக்கும் இத்தகைய வீடியோக்கள் டிக்டாக் மூலமாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் பிரபலமாகின.
அதன்பின் இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுவிட்டாலும், அதன் இடத்தை மற்ற சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்டவை கவனித்து கொள்கின்றன. அதாவது இவற்றில் மற்றவர்களின் பதிவுகள் மட்டுமின்றி அவர்களின் ரீல்ஸ் வீடியோக்களையும் காண முடிகிறது. ரீல்ஸ் வீடியோக்களை பார்க்க ஏகப்பட்ட மொபைல் போன் செயலிகளும் இணையத்தில் உள்ளன என்றாலும், மேற்கூறப்பட்ட மூன்றும் தான் முக்கியமானவைகளாக உள்ளன.

இவ்வாறு அதிக பார்வையாளர்களை கொண்டிருப்பதினால் ரீல்ஸ் வீடியோக்களின் மூலமாக சமீப காலங்களில் பிரபலமானவர்கள் ஏராளம். அத்தகையவர்களுள் ஒருவராக வர வேண்டும் என நிறைய பேர் வித்தியாச வித்தியாசமான முறைகளில் வீடியோக்களை காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு வீடியோக்களை காட்சி படுத்தும் போது, சிலமுறை அவை அசம்பாவிதங்களில் முடிந்துள்ள நிகழ்வுகளையும் இதற்குமுன் பார்த்துள்ளோம். அவ்வாறுதான் உத்திர பிரதேசத்தில் நெடுஞ்சாலையை மறித்தப்படி ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண் ஒருவருக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டிருக்கும் இளம்பெண்ணின் பெயர் வைஷாலி சௌதாரி குடெயில். இன்ஸ்டாகிராமில் சுமார் 6.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸை கொண்டவராக பிரபலமானவராக விளங்கும் இவர் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு கடந்த ஜனவரி 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையிலும் ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த வீடியோ அவர் எதிர்பார்த்ததை காட்டிலும் வைரலாகி உள்ளது.
ஏனெனில் உ.பி-இல் காஸியபாத்தின் சஹிபாபாத் பகுதியில் உள்ள பரபரப்பான நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இந்த குறிப்பிட்ட வீடியோவை வைஷாலி காட்சிப்படுத்தி உள்ளார். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் போக்குவரத்தை மறித்து வீடியோவை பதிவு செய்ததற்காக வைஷாலிக்கு கண்டனத்தை தெரிவிக்க, அதன்பின் இந்த வீடியோ காஸியாபாத் போலீஸாரின் பார்வைக்கும் வந்துள்ளது. இவ்வாறு போக்குவரத்திற்கு இடையூறாக வீடியோக்களை பதிவு செய்ததற்காக பல்வேறு இடங்களில் பல்வேறு மக்கள் அபராதத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
அவர்களுக்கு சில ஆயிரங்கள் அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வைஷாலி சௌதாரி குடெயிலுக்கு சுமார் ரூ.17 ஆயிரத்தை அதிரடியாக காஸியாபாத் போலீஸார் அபராதமாக விதித்துள்ளனர். மேலும், இதுகுறித்த பதிவு ஒன்றையும் காஸியாபாத் போலீஸார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த டுவிட்டர் பதிவில், வைஷாலிக்கு ரூ.17,000 அபராதமாக விதிக்கப்பட்டிருப்பதை தெளிவாக காண முடிகிறது.

அத்துடன், இவ்வாறான செயல்பாடுகள் மற்றவர்களுக்கு எவ்வாறு அச்சுறுத்தலாக அமையும் என்பதை போலீஸார் ஒருவர் விளக்கும் வீடியோ ஒன்றினையும் இந்த டுவிட்டர் பதிவுடன் வெளியிட்டுள்ளனர். இதனை அறிந்த வைஷாலி, இதுகுறித்த தனது விளக்கத்தை தனது இன்ஸ்டாகிராம் நேரலையில் தெரிவித்துள்ளார். இவ்வாறான வீடியோக்கள் பதிவிடுவதே விளம்பரத்திற்காக தானே. அப்படியிருக்கையில், அவ்வாறு வீடியோ பதிவிடும்போது ஏதேனும் சர்ச்சைகள் எழுந்தால் அதற்காக இத்தகையவர்கள் மனம் தோய்ந்துவிட போவதில்லை.
வைஷாலியும் தனது இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்ட ட்ரோல் பதிவுகளை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தும், தொலைக்காட்சியில் வந்த செய்திகளை காட்சிப்படுத்தியும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டு கூடுதல் விளம்பரத்தை தேடி கொண்டுள்ளார். வைஷாலி, நீங்கள் சீக்கிரமாகவே பிரபலமாகிவிடுவீர்கள்... இவ்வாறான சம்பவங்கள் நம் நாட்டில் நடைபெறுவது ஒன்றும் இது முதல்முறையல்ல. ஆனால் இவ்வளவு பெரிய தொகையை இதற்கு வேறெந்த இணையவாசியும் அபராதமாக செலுத்தியதாக நினைவில்லை.


Click it and Unblock the Notifications








