கோவை- பெங்களூர் இடையே பயன்பாட்டுக்கு வரும் டபுள்டெக்கர் ரயிலின் சிறப்பம்சங்கள்!
கோவை- பெங்களூரு இடையே விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய இரண்டடுக்கு ரயிலின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
கோவை- பெங்களூர் இடையே உதய் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய இரண்டடுக்கு ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த இரண்டடுக்கு ரயிலின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

நாடு முழுவதும் புதிய வழித்தடங்களில் இரண்டடுக்கு ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன்படி, கோவை- பெங்களூர் நகரங்களுக்கு இடையிலும் புதிய இரண்டடுக்கு ரயில் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

உதய் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய ரயில் சேவையானது, ரயில் பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை கோவையிலிருந்து திருப்பத்தூர் வரை இரண்டு முறை இரண்டடுக்கு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகம் வரை ரயில் இயக்கப்பட்டதாக ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video


சாதாரண ரயில் பெட்டிகளை விட இரண்டடுக்கு ரயில் பெட்டிகள் நீளம் மற்றும் உயரம் அதிகம் உள்ளவை. எனவே, இந்த ரயில் பெட்டிகள் ரயில் நிலையத்திற்குள் செல்லும்போது பிளாட்ஃபார கூரைகள் மீது இடிக்கின்றனவா, வழியில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் கம்பி மீது உரசுகிறதா என்பது உள்ளிட்ட கவனத்தில் கொள்ளப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டன. இதற்காக ரயில் பெட்டிகளில் கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன.

மேலும், இரண்டடுக்கு ரயில் பெட்டிகள் நீளம் அதிகம் இருக்கும் காரணத்தால், கோவை- திருப்பத்தூர் வழித்தடத்தில் அதிக வளைவுகள் இருப்பதால் அவற்றில் இவை எவ்வாறு செல்கின்றன என்பதும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கைகள் ரயில் பாதுகாப்பு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து பெங்களூருக்கு திருப்பத்தூர் வழியாக ஏற்கனவே இரண்டடுக்கு ரயில் இயக்கப்படுவதால், இந்த சோதனை ஓட்டமானது, கோவை - திருப்பத்தூர் வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 8 பெட்டிகள் கொண்ட முழுமையான இரண்டடுக்கு ரயிலும் விரைவில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றவுடன், அடுத்த ஓரு சில மாதங்களில் இந்த ரயில் பயணிகள் சேவைக்கு முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது. கோவையில் காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, மதியும் 12.40 மணிக்கு பெங்களூர் வந்தடையும். பின்னர், பெங்களூரில் 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை சென்றடையும்.

இந்த ரயிலில் எல்இடி தகவல் பலகைகள் பொருத்தப்பட்டு இருக்கும். அடுத்து வரும் ரயில் நிலையங்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் வசதியும் உண்டு. இந்த ரயிலில் காஃபி மற்றும் தேனீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.

மேலும், வீட்டிலிருந்து பயணிகள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கான குளிர்சாதனப் பெட்டி மற்றும் உணவுப் பொருளை சூடுபடுத்தும் மைக்ரோ அவன் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

இந்த ரயில் கோவையிலிருந்து பெங்களூருக்கு 22665 என்ற எண்ணிலும், பெங்களூரிலிருந்து கோவைக்கு 22666 என்ற எண்ணிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறிய மாறுதல்களுடன் சரியான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் இரு நகரங்களுக்கு இடையே பயணிப்போருக்கு மிகுந்த பயன் தரும் வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








