ரயில்வே ஸ்டேஷனில் உள்ள மஞ்ச கலர் போர்டில் இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா? இது முன்னாடியே தெரியாம போச்சே!
ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள மஞ்சள் நிற பலகைகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் ஒரு சுவாரஸ்யமான தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆசிய கண்டத்தின் அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாக இந்திய ரயில்வே திகழ்கிறது. இந்தியா முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் பல லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் கணக்கிட்டால், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே ஸ்டேஷன்கள் இருக்கின்றன. இந்த ரயில்வே ஸ்டேஷன்கள் அனைத்திலும் ஒரு ஒற்றுமையை நீங்கள் கவனித்திருக்கலாம். அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும், சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தின் பெயர், மஞ்சள் நிற பலகையில் எழுதப்பட்டிருக்கும் என்பதுதான் அந்த ஒற்றுமை.

நீங்கள் ரயில்களில் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தாலும் சரி அல்லது எப்போதாவது பயணம் செய்ய கூடியவராக இருந்தாலும் சரி, ரயில்வே ஸ்டேஷனின் பெயர் மஞ்சள் நிற பலகையில் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் ஏன் மஞ்சள் பலகையில் பெயர் எழுதப்பட்டுள்ளது? என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கலாம்.

இதற்கு பின்னால் உள்ள காரணங்களை இந்த செய்தியில் உங்களுக்கு நாங்கள் விளக்க போகிறோம். மஞ்சள் நிறமானது, சூரியனின் பிரகாசமான வெளிச்சத்தை அடிப்படையாக கொண்டது. எனவே ஆற்றலுடன், மஞ்சள் நிறம் தொடர்புபடுத்தப்படுகிறது. அத்துடன் மகிழ்ச்சி மற்றும் புத்தி கூர்மை ஆகியவற்றுடனும் மஞ்சள் நிறம் தொடர்புபடுத்தப்படுகிறது.

கூட்டமான பகுதிகளில், மற்ற நிறங்களுடன் ஒப்பிடும்போது, மஞ்சள் நிற பின்னணி நன்றாக வேலை செய்யும். அதாவது மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு நிறத்தை கொண்டு எழுதினால், பார்வைக்கு எளிதாக புலப்படும். தொலைவில் இருந்து பார்த்தாலும் கூட தெளிவாக தெரியும். ரயில்வே ஸ்டேஷன்களின் பெயர்களை மஞ்சள் நிற பலகையில், கருப்பு எழுத்துக்கள் மூலம் எழுதுவதற்கு இதுவே முக்கியமான காரணம்.

பொதுவாக மஞ்சள் நிறம் மிகவும் பிரகாசமான ஒன்று. தொலைவில் இருந்து பார்த்தாலும் கூட, ரயில்களின் லோகோ பைலட்களுக்கு (Loco Pilot), அதாவது ரயில்களின் டிரைவர்களுக்கு இந்த நிறம் தெளிவாக தெரியும். தொலைவிலேயே தெரிந்து விடும் என்பதால், ரயில்களின் லோகோ பைலட்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட முடியும்.

பொதுவாக அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் ரயில்கள் நின்று செல்லாது என்பது நம் அனைவருக்குமே தெரியும். குறிப்பிட்ட சில ரயில்வே ஸ்டேஷன்களில் மட்டுமே ரயில்கள் நின்று செல்லும். நிறுத்தம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன்களில் நுழைந்ததில் இருந்து வெளியேறும் வரை லோகோ பைலட்கள் ஹாரன் அடித்து செல்வதற்கு இந்த மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு நிறத்தில் எழுதப்பட்ட பலகைகள் உதவுகின்றன.

இதன் மூலமாக சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தில் இருக்கும் பயணிகள் உள்பட அனைவரும் எச்சரிக்கையாக இருப்பார்கள். மஞ்சள் நிறம் தொலைவிலேயே தெரிந்து விடும் என்பதால், ரயில் நிலையத்தை கடக்கும்போது லோகோ பைலட்கள் எச்சரிக்கையாக செயல்பட முடிகிறது. லோகோ பைலட்களுக்கு மட்டுமல்லாது, பயணிகளுக்கும் இந்த வண்ண கலவை பெரிதும் உதவி செய்கிறது.

பொதுவாக ரயில்களில் பயணம் செய்யும்போது, ரயில் எந்த ரயில்வே ஸ்டேஷனில் நிற்கிறது? என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த குழப்பத்தை போக்க மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு நிறத்தில் எழுதப்பட்ட பலகைகள் உதவி செய்யும். தொலைவிலேயே தெரிந்து விடும் என்பதால், பயணிகள் சௌகரியமாக இறங்க முடியும்.

இன்று ரயில்கள் எங்கு சென்று கொண்டுள்ளது? எந்த ரயில்வே ஸ்டேஷனில் நிற்கிறது? என்பதை கண்டறிய நிறைய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமாகி விட்டனதான். ஆனாலும் இந்த தொழில்நுட்ப வசதிகளுக்கு பரிட்சயம் இல்லாத மற்றும் இந்த தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த தெரியாத பயணிகள் பலர் இன்னமும் இருக்கவே செய்கின்றனர்.

சிகப்பு நிறத்திற்கு அடுத்தபடியாக அதிக அலைநீளம் (Wavelength) கொண்ட நிறங்களில் ஒன்றாக மஞ்சள் உள்ளது. அத்துடன் மழை, பனி என அனைத்து சூழ்நிலைகளிலும் மஞ்சள் நிறத்தை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். இதுபோன்ற காரணங்களால்தான் ரயில்வே ஸ்டேஷன்களின் பெயர் பலகைகள் மஞ்சள் நிற பின்னணியில் வைக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








