உங்க பக்கத்துல கூட இருக்கலாம்... விமானத்தில் ஏர் மார்ஷல் யார் என்பதை ரகசியமா வெச்சிருப்பாங்க... ஏன் தெரியுமா?
ஏர் மார்ஷல்கள் பற்றி உங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருக்கலாம். அவற்றை இந்த செய்தியின் மூலம் நாங்கள் நிவர்த்தி செய்கிறோம்.

அனைத்து விமானங்களிலும் ஏர் மார்ஷல்கள் இருப்பார்களா?
இல்லை. அமெரிக்காவில் 1 சதவீதத்திற்கும் குறைவான விமானங்களில் மட்டுமே ஏர் மார்ஷல்கள் இருப்பார்கள். அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் சுமார் 44 ஆயிரம் கமர்ஷியல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்கள் ஒவ்வொன்றிலும் ஏர் மார்ஷல்களை பணியமர்த்துவது என்பது இயலாத காரியங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

எனினும் எந்தெந்த விமானங்களில் ஏர் மார்ஷல்கள் இருக்க வேண்டும் என்பதை சில காரணிகள் தீர்மானிக்கின்றன. அதாவது விமானத்திற்கு இருக்கும் அச்சுறுத்தல், விமானம் புறப்படும் நகரம், தரையிறங்கும் நகரம், விமானம் பயணிக்கும் பாதை, எரிபொருள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் ஏர் மார்ஷல்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

ஏர் மார்ஷல்கள் என்ன செய்வார்கள்?
தீவிரவாத தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை கண்டறிவதுதான் ஏர் மார்ஷல்களின் முக்கியமான பணி. தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்காக, விமானம் புறப்படுவதற்கு முன்னதாக பல்வேறு விசாரணைகளை செய்யும் பொறுப்பும் ஏர் மார்ஷல்களுக்கு இருக்கிறது.

ஆனால் இதுதவிர ஏர் மார்ஷல்களுக்கு இன்னும் பல்வேறு பணிகள் உள்ளன. உதாரணத்திற்கு மது போதையில் உள்ள பயணிகள் யாராவது விமானத்தில் மற்ற பயணிகளிடம் எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள் என வைத்து கொள்வோம். அப்போது மது போதையில் உள்ள பயணிகளை கட்டுப்படுத்தும் பணிகளிலும் ஏர் மார்ஷல்கள் ஈடுபடுவார்கள்.

ஏர் மார்ஷல்களின் அடையாளத்தை ஏன் ரகசியமாக வைக்கிறார்கள்?
ஏர் மார்ஷல்களின் அடையாளத்தை எப்போதும் ரகசியமாக வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு ஏர் மார்ஷல் யார் என்பது தீவிரவாதிகளுக்கு தெரிந்தால் என்ன நடக்கும்? என்பதை யூகித்து பாருங்கள். ஏர் மார்ஷல் யார் என்பது தெரிந்து விட்டால், தங்கள் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பாக தீவிரவாதிகள் அவர்களை வெளியேற்றவோ அல்லது கட்டுப்படுத்தவோ முயற்சிப்பார்கள்.

இதுவே ஏர் மார்ஷல்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதற்கு முக்கியமான காரணம். ஏர் மார்ஷல்கள் துப்பாக்கிகளை வைத்திருப்பார்கள் என்பது மற்றொரு காரணம். தவறான நோக்கம் உடைய யாராவது ஒருவர், துப்பாக்கியை கைப்பற்றி விட்டால், பயணிகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படலாம். இதன் காரணமாகவும் ஏர் மார்ஷல்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படுகிறது.

ஏர் மார்ஷல் யார் என்பது விமானத்தின் பணியாளர்களுக்கு தெரியுமா?
தெரியும். ஆயுதங்களுடன் இருக்கும் ஏர் மார்ஷல்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள், காக்பிட்டில் இருக்கும் பைலட்கள் மற்றும் விமான ஊழியர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவார்கள். அவர்களின் அடையாள அட்டை பரிசோதிக்கப்படும். அவர்கள் எங்கே அமர வேண்டும்? என்பதை விமானத்தின் ஊழியர்கள் கூறுவார்கள்.

ஒரு விமானத்தில் எத்தனை ஏர் மார்ஷல்கள் இருப்பார்கள்?
எத்தனை ஏர் மார்ஷல்கள் இருப்பார்கள் என்பது விமானங்களை பொறுத்து மாறுபடும். உள்நாட்டு விமானங்கள் என்றால், ஒன்று முதல் இரண்டு ஏர் மார்ஷல்கள் வரை இருப்பார்கள். அதுவே சர்வதேச விமானங்கள் என்றால், அதிகபட்சமாக நான்கு ஏர் மார்ஷல்கள் வரை இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏர் மார்ஷல்களை எப்படி கண்டறிவது?
இவர்கள் ஏர் மார்ஷல்களாக இருக்கலாம் என்பதை ஒரு சில விஷயங்களின் மூலம் யூகிக்க முடியும். அதாவது அவர்கள் பெரும்பாலும் துணை இல்லாமல் தனியாக வருவார்கள். கடைசி நேரத்தில்தான் விமானத்தில் ஏறுவார்கள். நீண்ட தொலைவு பயணிக்கும் விமானங்களில் கூட அவர்கள் தூங்க மாட்டார்கள். இவை ஏர் மார்ஷல்களை கண்டறிவதற்கான ஒரு சில குறியீடுகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








