ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...
கார்களில் வழங்கப்படும் சீட் பெல்ட்கள் பல லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளன. மிகவும் அவசியமான பாதுகாப்பு உபகரணமாக மாறியுள்ள கார் சீட் பெல்ட்களின் வரலாற்றை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விலை குறைவான கார்கள் முதல் பல கோடி ரூபாய் மதிப்புடைய கார்கள் வரை, தற்போது தவறாமல் இடம்பெறும் ஒரு பாதுகாப்பு உபகரணம் சீட் பெல்ட். எதிர்பாராமல் நிகழும் சாலை விபத்துக்களில் இருந்து, கார்களில் பயணம் செய்பவர்களின் உயிரை சீட் பெல்ட் காப்பாற்றுகிறது. அத்துடன் படுகாயங்கள் ஏற்படுவதில் இருந்து காப்பாற்றும் பணியையும் சீட் பெல்ட் செய்கிறது.

எனவே கார்களில் சீட் பெல்ட் இடம்பெறுவதையும், பயணங்களின்போது பயணிகள் அனைவரும் அதை அணிவதையும் கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் தற்போது கட்டாயமாக்கியுள்ளன. சாலை விபத்துக்களில் இருந்து பல லட்சக்கணக்கானோரின் உயிரை காப்பாற்றியுள்ள சீட் பெல்ட்களின் வரலாற்றைதான் நாம் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

சீட் பெல்ட்களை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜார்ஜ் கேலே. இங்கிலாந்தை சேர்ந்த இன்ஜினியரான இவர் கடந்த 1800களின் பிற்பகுதியில், கிளைடர்களுக்கு உள்ளே பைலட்கள் பாதுகாப்பாக இருக்கும் நோக்கத்தில் சீட் பெல்ட்களை உருவாக்கினார். ஆனால் காப்புரிமை பெற்ற முதல் சீட் பெல்ட்டை உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவர் எட்வர்டு ஜே.க்ளாகோர்ன்.

அமெரிக்கரான இவர் கடந்த 1885ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி அந்த சீட் பெல்ட்டை கண்டறிந்தார். நியூயார்க் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் டாக்ஸிகளில் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக, இந்த சீட் பெல்ட் உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் பயணிகள் மற்றும் ஓட்டுனர்களின் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட்கள் மெல்ல மெல்ல கார்களில் இடம்பெற தொடங்கின.

ஆனால் அன்றைய கால கட்டத்தில் கார்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு குறித்த அக்கறை மிகவும் குறைவாக இருந்தது. எனவே 1800களின் பிற்பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், 1930களின் நடுவில்தான் கார்களில் சீட் பெல்ட்களை வழங்க வேண்டும் என கார் உற்பத்தியாளர்களுக்கு வலுவான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

1930களின் மையப்பகுதியில் அமெரிக்காவை சேர்ந்த பல மருத்துவர்கள் லேப் பெல்ட்களை பரிசோதனை செய்தனர். இதில் கிடைத்த முடிவுகள் சாதகமாக இருந்த காரணத்தால், கார்களில் சீட் பெல்ட்களை வழங்குமாறு கார் உற்பத்தியாளர்களுக்கு கோரிக்கை வைத்தனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில், அமெரிக்காவின் ஸ்போர்ட்ஸ் கார் கிளப் அதிரடியான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது.

போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து ஓட்டுனர்களும் லேப் பெல்ட் அணிய வேண்டும் என கடந்த 1954ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்போர்ட்ஸ் கார் கிளப் உத்தரவிட்டது. அதற்கு அடுத்த ஆண்டே, அதாவது கடந்த 1955ம் ஆண்டு, ஆட்டோமொபைல் பொறியாளர்களின் சங்கமானது, மோட்டார் வாகன சீட் பெல்ட் கமிட்டியை நியமித்தது.

ஆனால் சீட் பெல்ட்களின் வரலாற்றில் உண்மையான திருப்புமுனை 1958ம் ஆண்டுதான் ஏற்பட்டது. ஸ்வீடனை சேர்ந்த இன்ஜினியரான நில்ஸ் போஹ்லின், அந்த ஆண்டில்தான் நவீன த்ரீ-பாயிண்ட் சீட் பெல்ட்டை (Three-point Seatbelt) கண்டுபிடித்தார். அதுவரை கார்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது டூ-பாயிண்ட் லேப் பெல்ட்கள்தான் (Two-point Lap Belts).

எனவே கடந்த 1958ம் ஆண்டு வால்வோ நிறுவனம் நில்ஸ் போஹ்லினை பணியமர்த்தி கொண்டது. இன்று நமக்கு தெரிந்த சீட் பெல்ட்களை உருவாக்கியது நில்ஸ் போஹ்லின்தான். அவர் கண்டுபிடித்த த்ரீ-பாயிண்ட் சீட் பெல்ட்கள் விபத்துக்களில் இருந்து பயணிகளையும், ஓட்டுனரையும் சிறப்பாக காப்பாற்றுகிறது. உடலின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை பாதுகாக்க உதவும் வகையில் த்ரீ-பாயிண்ட் சீட் பெல்ட் உருவாக்கப்பட்டது.

அறிமுகம் செய்யப்பட்ட முதல் நான்கு தசாப்தங்களில் (40 ஆண்டுகள்) மட்டும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை இந்த சீட் பெல்ட் காப்பாற்றியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சீட் பெல்ட்களின் முக்கியத்துவத்தை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். எனவே நீங்கள் காரில் பயணிக்கும் அனைத்து நேரங்களிலும் தவறாமல் சீட் பெல்ட் அணியுங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








