பம்புசெட் எஞ்சினுடன் வந்த டீசல் புல்லட் பற்றி சுவாரஸ்யத் தகவல்கள்!
டீசல் புல்லட் குறித்த சுவாரஸ்யமானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
வர்த்தக ரீதியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டீசலில் ஓடும் ஒரே இருசக்கர வாகனம் என்ற பெருமை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் டீசல் புல்லட்டுக்கு மட்டுமே உண்டு.

கடந்த 1993ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை உற்பத்தியில் இருந்த டீசல் புல்லட் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற சாலைகளில் அதிகம் வலம் வந்தது. மாசு உமிழ்வு பிரச்னை காரணமாக இதனை தொடர்ந்து உற்பத்தி செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.

பலராலும் டீசல் புல்லட் என்று அழைக்கப்பட்டாலும்,, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வைத்திருந்த பெயர் டாரஸ். இந்த மோட்டார்சைக்கிளில் ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய 325சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தயாரித்த சிறிய ரக எஞ்சினும் இதுதான்.

டீசல் புல்லட்டில் க்ரீவ்ஸ் நிறுவனத்தின் லொம்பர்தினி என்ற பம்பு செட்டுகளில் பயன்படுத்தப்படும் டீசல் எஞ்சினில் சிறிய மாறுதல்களை செய்து பொருத்தப்பட்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 6.5 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருந்தது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் புல்லட் மோட்டார்சைக்கிள் 168 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. ஆனால், இந்த டீசல் புல்லட் 196 கிலோ எடை கொண்டதாக இருந்தது. எனினும், மைலேஜில் பெட்ரோல் மாடல் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருந்தது.

பிரத்யேகமான பச்சை வண்ணக் கலரில் விற்பனை செய்யப்பட்ட டீசல் புல்லட் இப்போது இருக்கும் இந்தியாவின் மிக அதிக மைலேஜ் தரும் பைக்குகளைவிட அதிக மைலேஜ் தர வல்லதாக இருந்தது. ஆம், டீசல் புல்லட் லிட்டருக்கு 72 கிமீ மைலேஜ் தரும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டீசல் புல்லட் நடைமுறையில் லிட்டருக்கு 55 கிமீ வரை மைலேஜ் தருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த காலக்கட்டத்தில் டீசல் விலை மிக குறைவாக இருந்ததால், இந்த மோட்டார்சைக்கிள் இருசக்கர வாகன மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோட்டார்சைக்கிளின் மிகப்பெரிய பிரச்னையாக இருந்த விஷயம், அதிக அதிர்வுகள்தான். இந்த மோட்டார்சைக்கிளை ஆசையோடு வாங்கிய பலர் ஒரு சில ஆண்டுகளிலேயே உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டு விற்க முனைந்தனர்.

அடுத்து, செல்ஃப் ஸ்டார்ட் இல்லாமல் காலால் உதைத்து ஸ்டார்ட் செய்வதில் பெரும் பிரச்னை இருந்தது. அதிக புகையும் வெளியேற்றமும் வாடிக்கையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய விஷயம்.

வட இந்தியாவில் சில இடங்களில் இந்த டீசல் புல்லட்டை மூன்று சக்கர பயணிகள் வாகனமாக மாற்றி, ஷேர் ஆட்டோ போல பயன்படுத்தினர்.

2000ம் ஆண்டில் டீசல் புல்லட் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், அதிக டிமான்ட் இருந்த காரணத்தை வைத்து சூரஜ் மோட்டார்ஸ் நிறுவனம் டீசல் புல்லட்டை தயாரித்து விற்பனை செய்தது. பெட்ரோல் புல்லட் வைத்திருந்த பலரும் டீசல் எஞ்சினை வாங்கி பொருத்திக் கொண்டனர். எனினும், பெட்ரோல் புல்லட் போல மதிப்பை தக்க வைக்க முடியாமல் வழக்கொழித்து போனது.


Click it and Unblock the Notifications