லண்டன் அருகே தேம்ஸ் நதியில் அமையும் மிதக்கும் விமான நிலையம்!
உலகிலேயே அதிக போக்குவரத்து கொண்ட விமான நிலையங்களில் ஒன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரூ. இந்த நிலையில், போக்குவரத்து நெரிதல் காரணமாக, ஹீத்ரூ விமான நிலையத்தை விரிவுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், விரிவுப்படுத்தினால் அது சுற்றுச்சூழலை வெகுவாக பாதிப்பதோடு, அதற்கான இடத்தை கையகப்படுத்த பல கிராமங்களை அழிக்கும் நிலை இருக்கிறது. எனவே, மாற்று திட்டமாக தேம்ஸ் நதியில் பிரம்மாண்ட மிதக்கும் விமான நிலையத்தை அமைக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டிருக்கிறது.

கனவுத் திட்டம்
லண்டன் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சனின் கனவு திட்டமாக இது உருவானது. இந்த திட்டத்தை ஆய்வு செய்து விமான நிலைய மாதிரியை உருவாக்குவதற்காக கட்டிட கலை நிபுணர் நார்மன் ஃபாஸ்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுதான், இந்த மிதக்கும் விமான நிலையம் எப்படியிருக்கும் என்பது குறித்த மாதிரி படங்களை வெளியிட்டது.

செயற்கைத் தீவு
தேம்ஸ் நதிக்கரை கடலில் சேரும் முகத்துவாரத்தில் செயற்கை தீவை உருவாக்கி, அதில் இந்த மிதக்கும் விமான நிலையத்தை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே பரிசீலிக்கப்பட்டு வரும் இந்த திட்டம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

அமைவிடம்
இந்த விமான நிலையத்தை லண்டன் பிரிட்டானியா விமான நிலையம் என்ற பெயரில் அழைக்கின்றனர். மத்திய லண்டன் மாநகரிலிருந்து கிழக்கு பகுதியில் 70 கிமீ தொலைவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

பிரம்மாண்டம்
இந்த மிதக்கும் விமான நிலையம் 6 ஓடுபாதைகளுடன் மிக பிரம்மாண்டமானதாக அமைக்கப்படும். இருபுறமும் ஓடுபாதைகளுக்கு நடுவில் விமான முனையம் அமையும். அங்கிருந்து நகரை இணைப்பதற்கான போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக செய்வதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

திட்ட மதிப்பீடு
5 லட்சம் கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த பிரம்மாண்ட மிதக்கும் விமான நிலையத்தை அமைப்பதற்கு மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், 2 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

வரவேற்பு
இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஹீத்ரூ விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தால் பல லட்சக்கணக்கான மரங்களையும், பல ஏரிகள் மற்றும் வீடுகளையும் அழிக்க வேண்டியிருக்கும். எனவே, புதிய விமான நிலையம் வேறு இடத்தில் அமைவது சிறப்பானதாக அவை கருதுகின்றன.

நிம்மதி
புதிய பிரிட்டானியா விமான நிலையம் அமையும் பட்சத்தில், அதிக மக்கள் தொகை நெருக்கம் கொண்ட பகுதிகளில் விமானம் பறப்பதால் ஏற்படும் அதீத சப்தம் மற்றும் புகை வெளியீடு போன்றவையும் தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மற்றொரு புறத்தில்...
ஹீத்ரூ விமான நிலையத்திற்கு மாற்றாக அமைக்க திட்டமிடப்பட்டிருக்கும் புதிய பிரிட்டானியா மிதக்கும் விமான நிலையத்தாலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஒரு சாரார் எதிர்ப்பு குரல் எழுப்பியிருக்கின்றனர். அங்கு வாழும் பறவைகள், நீர் உயிரினங்கள் இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் என்பது அவர்களது கருத்து.

புதிதல்ல...
இதுபோன்று மிதக்கும் விமான நிலைய கட்டமைப்புகள் புதிதல்ல. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கடலிலிலேயே செயற்கை தீவுகளை உருவாக்கி, அதில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








