இந்திய கடற்படையின் மிக் 29கே நவீன ரக போர் விமானத்தின் சிறப்புகள்!
கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கடற்படையில் சேவையாற்றி வந்த சீ ஹாரியர் போர் விமானம் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. செங்குத்தாக தரையிறங்கும் சிறப்பம்சம் கொண்ட இந்த விமானத்தின் பராமரிப்பு மற்றும் மேம்படுத்த இயலாத நிலை போன்றவற்றை காரணம் காட்டி விலக்கிக் கொள்ளப்படுகிறது. இங்கிலாந்து தயாரிப்பான சீ ஹாரியர் விமானத்திற்கு பதிலாக, தற்போது ரஷ்ய தயாரிப்பான மிக் 29கே என்ற நவீன ரக போர் விமானங்கள் அந்த இடத்தை நிரப்புவதற்கு தயாராகிவிட்டன.
செங்குத்தாக மேலே எழும்பும் திறன் படைத்த இந்தியாவின் சீ ஹாரியர்!
கோவாவில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் விமான சாகச கண்காட்சியுடன் சீ ஹாரியருக்கு பிரியா விடையும், மிக் 29கே விமானத்துக்கு வரவேற்பும் கொடுத்து கடற்படையின் ஐஎன்ஏஎஸ் 300 பிரிவில் சேர்க்கப்பட்டது. ஐஎன்எஸ் ஹன்சா தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஆர்கே தோவன் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே கடற்படையில் சேர்க்கப்பட்டாலும், முழுமையான பயன்பாட்டிற்கு தயாராகி இருக்கிறது மிக் 29கே விமானங்கள் கடற்படைக்கு புதிய பலம் சேர்க்க தயாராகியிருக்கும் மிக் 29கே போர் விமானத்தின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

தேவை
விமானம் தாங்கி போர்க்கப்பல்களிலிருந்து இயக்குவதற்கான பன்முக பயன்பாட்டு போர் விமானங்களை தயாரிக்க சோவியத் யூனியன் முடிவு செய்தது. இதையடுத்து, அந்நாட்டின் மிகோயன் டிசைன் பீரோ நிறுவனம் 1980களில் இந்த போர் விமானத்தை தயாரிக்கும் பணியை துவங்கியது. ஆனால், அந்நாட்டு கடற்படை மிக் 29கே விமானங்களை விரும்பாமல், சுகோய் எஸ்யூ27கே விமானங்களை சேர்க்க விருப்பம் தெரிவித்தது. இதனால், போதிய நிதி உதவி ஒதுக்கப்படவில்லை.

இந்தியா விருப்பம்
ரஷ்ய கடற்படை இந்த விமானத்தை ஒதுக்கித் தள்ளினாலும், இந்த போர் விமானத்தை வாங்குவதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்தது. இதையடுத்து, விமானம் தாங்கி போர்க்கப்பல்களிலிருந்து இயக்குவதற்கான சிறப்பம்சங்களுடன் MiG 29K போர் விமானத்தை தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

பரிசோதனைகள்
முதல்முறையாக ரஷ்யாவின் அட்மிரல் குனெட்சோவ் விமானம் தாங்கி கப்பலில் வைத்து மிக் 29கே விமானங்கள் தரையிறக்கி சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது மிக துல்லியமாக இந்த போர் விமானம் தரையிறங்கி சோதனைகளில் வெற்றி பெற்றது. மேலும், கப்பல் 10 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும்போது கூட விமானம் துல்லியமாக தரையிறங்கியது. இடையில், சோவியத் யூனியன் துண்டு துண்டாக பிரிந்ததால், சில ஆண்டுகள் இந்த திட்டம் மந்தநிலையில் இருந்தது.

விமானம் தாங்கி கப்பல்
2004ம் ஆண்டு அட்மிரல் கோர்சகோவ் விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்தியா வாங்க முடிவு செய்தது. ஆனால், செங்குத்தாக அல்லது குறைந்த தூரத்தில் மேலே எழும்பும் போர் விமானங்களை மட்டுமே, இந்த விமானம் தாங்கி கப்பலிலிருந்து இயக்கும் நிலை இருந்தது. இதையடுத்து, மிக் 29கே விமானங்களை தரை இறக்கும் வகையில், ஓடுபாதைகளின் நீள, அகலம் கூட்டப்பட்டது. இந்த கப்பல்தான் தற்போது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற பெயரில் கடற்படையில் இணைக்கப்பட்டிருக்கிறது.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா
ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலில் மிக் 29கே விமானத்தை தரையிறக்குவதற்கு வசதியாக, விமானம் தரையிறங்கும்போது வடங்கள் மூலமாக இழுத்து நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டது. அதேபோன்று, மிக் 29கே விமானத்திலும் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டன. வடத்தை கவ்வி தரையிறங்கும் வசதி, இறக்கையை மடக்கும் வசதிகளுடன் மாற்றங்கள் செய்யப்பட்டன.

முதல் பிரிவு
மொத்தம் 24 மிக் 29கே விமானங்கள் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் நிலைநிறுத்தப்படும். அதில், தற்போது 12 மிக் 29கே விமானங்களுடன் முதல் பிரிவு ஐஎன்எஸ் விக்ரமாதித்யாக கப்பலில் உருவாக்கப்படுகிறது. இதைத்தொடர்நது, உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டு வரும் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலிலும் மிக் 29கே விமானங்கள் நிலைநிறுத்தப்படும்.

பன்முக பயன்பாடு
கடலிலிருந்து கிளம்பி தரை தாக்குதல், வான் தாக்குதல்களை துல்லியமாக நடத்தி விட்டு வரும். அத்துடன், எதிரி போர் விமானங்களை எதிர்கொண்டு சமாளிக்கும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

இறக்கை நீளம்
கப்பலில் எளிதாக நிறுத்தும் விதத்தில், மிக் 29கே விமானத்தின் இறக்கையை மடக்கி விரிக்கும் வசதியுடன் மாறுதல்கள் செய்யப்பட்டன. உப்புக் காற்றில் உடல்கூடு பாதிக்கப்படாத வகையில், வலுவான உலோக கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது.

எஸ்யூ33யை ஒதுக்கிய இந்தியா
ரஷ்யாவின் எஸ்யூ33 விமானத்தை இந்தியா ஒதுக்கிவிட்டு, மிக் 29கே விமானத்தை வாங்கியவதற்கு வடிவமும் முக்கிய காரணம். ஆம், எஸ்யூ33 விமானத்தைவிட மிக் 29கே விமானம் உருவத்தில் சிறியதாக இருந்ததும், விமானம் தாங்கி கப்பல்களில் பயன்படுத்த ஏதுவாகும் என்று நினைத்தது.

எரிபொருள் நிரப்பும் வசதி
வானிலிருந்தபடி, மற்றொரு விமானத்திலிருந்து இந்த மிக் 29கே விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப முடியும். இதனால், தரையிறங்காமலேயே, அதிக தூரமும், நேரமும் போர் சமயங்களில் பயன்படுத்த முடியும். சாதாரணமாக 4,560 கிலோ கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் மூலமாக 850 கிமீ தூரம் வரை பறக்கும். மூன்று கூடுதல் டேங்குககளை இணைத்தால், 1,300 கிமீ தூரம் வரை இயக்க முடியும்.

ஆர்டர்கள்
2004ம் ஆண்டு 12 மிக் 29கே ஒற்றை இருக்கை விமானங்களுக்கும், இரட்டை இருக்கை வசதி கொண்ட 4 மிக் 29KUB[பயிற்சிக்கான மாடல்] விமானங்களுக்கும் இந்தியா ஆர்டர் கொடுத்தது. 2009ம் ஆண்டு டெலிவிரி துவங்கியது. இதையடுத்து, 2010ம் ஆண்டில் மேலும் 29 மிக் 29கே விமானங்களுக்கு இந்தியா ஆர்டர் கொடுத்தது. கடந்த 2013ம் ஆண்டு மே 11ந் தேதி இந்திய கடற்படையில் மிக் 29கே விமானங்கள் சேர்க்கப்பட்டன. கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சா விமானப்படை தளத்தில் வைத்து இந்த விமானங்கள் இதுவரை இயக்கப்பட்டு வருகின்றன.

சிறப்பம்சங்கள்
மிக் 29கே போர் விமானம் 17.3 மீட்டர் நீளமும், 11.99 மீட்டர் இறக்கை அகலமும் கொண்டது. அதிகபட்சமாக 24,500 கிலோ எடையுடன் மேலே எழும்பும் திறன் படைத்தது. இந்த விமானத்தில் இரண்டு கிம்லோவ் ஆர்டி33எம்கே டர்போஃபேன் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

வேகம்
ஒலியைவிட இரண்டு மடங்கு கூடுதல் வேகத்தில் பறக்கும். அதாவது, மணிக்கு 2,200 கிமீ வேகத்தில் பறக்கும். குறைந்த உயரத்தில் பறக்கும்போது மணிக்கு 1,400 கிமீ வேகத்தில் பறக்கும். வினாடிக்கு 330 மீட்டர் அளவுக்கு மேலே எழும்பும் திறன் படைத்தது.

ஆயுதங்கள்
150 ரவுண்டுகள் சுடும் திறன் கொண்ட 30மிமீ விட்டமுடைய துப்பாக்கி, 5,500 கிலோ எடையுடைய வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த விமானத்தில் 8 வானிலிருந்து வான் இலக்கை அழிக்கும் ஏவுகணைகளை பொருத்தலாம். எதிரி கப்பல்கள், விமானங்களை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளும் இந்த போர் விமானத்தில் பொருத்த முடியும்.

நவீன வசதிகள்
இந்த விமானத்தில் 4 சேனல் ஃப்ளை பை ஒயர் கட்டுப்பாட்டு அமைப்பு கொண்டதால், எளிதாக இயக்க முடியும். அத்துடன், நவீன ரேடார் அமைப்பும் கொண்டிருக்கிறது. மேலும், எதிரிகளின் ரேடார் கண்களிலிருந்து எளிதாக தப்பும் என்பதும் இதன் சிறப்பம்சம்.

மதிப்பு
மொத்தம் 45 மிக் 29கே விமானங்களுக்கு ஆர்டர் தரப்பட்டது. தற்போது இந்தியாவிடம் 33 மிக் 29கே வகை விமானங்கள் கைவசம் உள்ளன. ஒரு விமானத்தின் மதிப்பு 32 மில்லியன் டாலர்களாகும்.

முக்கிய பங்கு
அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் சிறப்பாக செயல்படும் இந்த போர் விமானம், இந்தியாவின் தரை, கடல் பகுதிகளை காக்கும் பொறுப்பில் இந்த போர் விமானங்கள் முக்கிய பங்காற்றும் என்று ஆணித்தரமாக கூறலாம்.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பலின் சிறப்புகள்!
Source: Wikipedia


Click it and Unblock the Notifications








