அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்த இஸ்ரோவின் சாதனை!
ஒரேநேரத்தில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய இஸ்ரோவின் சாதனையை கேட்டு அதிர்ச்சியுற்றதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் இயக்குனராக முன்மொழியப்பட்டிருக்கும் டேன் கோட்ஸ் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்எல்வி ராக்கெட்டை கண்டு அமெரிக்க ராக்கெட் தயாரிப்பு நிறுவனங்கள் அலறி வருவதாக சில மாதங்களுக்கு முன் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தோம். பிஎஸ்எல்வி ராக்கெட்டால் தங்களது வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ராக்கெட் நிறுவனங்கள் புலம்ப துவங்கிவிட்டன என்றும் கூறி இருந்தோம். ஏனெனில், செயற்கைகோள்களை உருவாக்கும் பல அமெரிக்க நிறுவனங்கள் இஸ்ரோ மூலமாக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த மாதம் 15ந் தேதி ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை பொருத்தி பிஎஸ்எல்வி சி37 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. இந்த மகத்தான சாதனையை உலகமே வியந்து பார்த்தது. இந்த தகவல் அமெரிக்காவிற்கு கிலியை அதிகரித்துள்ளது. உலக அளவில் விண்வெளி ஆய்விலும், செயற்கைகோள் ஏவுவதிலும் இந்தியா முதன்மை வகிப்பதை அமெரிக்காவே ஒப்புக் கொண்டுள்ளது.

ஆம், 104 செயற்கைகோள்களுடன் ராக்கெட் ஏவப்பட்டதை கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்ததாக அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைமை இயக்குனர் பதவிக்கு முன்மொழியப்பட்டு இருக்கும் டேன் கோட்ஸ் தெரிவித்துள்ளார். , இந்த செய்தியை கேள்விப்பட்ட பின்னரும் அமெரிக்கா பின்தங்கி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறி இருக்கிறார்.

இதனால், ராக்கெட் விஞ்ஞானத்தில் உலகின் முன்மாதிரியாக இருக்கும் அமெரிக்காவே தற்போது இந்தியா முதன்மை பெற்றிருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவை இந்த அளவுக்கு புலம்ப விட்டிருப்பதற்கு இந்திய விஞ்ஞானிகளின் அயராத உழைப்புக்கும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்கலாம்.

ராக்கெட்டுக்கான க்ரையோஜெனிக் எஞ்சினை சொந்தமாக தயாரித்ததோடு, அதனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி தற்போது உலகையே வியக்க வைத்துள்ளனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கும் அதிகமான செயற்கைகோள்களை எடுத்துச் சென்று துல்லியமாக நிலைநிறுத்துவதற்கு பிஎஸ்எல்வி ராக்கெட்தான் தற்போது பெரும் துணையாக நிற்கிறது.

பிஎஸ்எல்வி., ராக்கெட்டை பார்த்து அனைத்து நாடுகளும் வியப்பும், பொறாமையும் கொள்வதற்கு காரணம் அதிக எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. மேலும், ஒரே நேரத்தில் பல செயற்கைகோள்களை இந்த ராக்கெட்டில் வைத்து ஏவ முடியும் என்பதுதான்.

துல்லியம் சுற்று வட்டப்பாதையில் செயற்கைகோள்களை மிக துல்லியமாக நிலைநிறுத்துவதிலும் இஸ்ரோ ராக்கெட்டுகள் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கின்றன. இதுவரை பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலமாக ஏராளமான செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன.

44 மீட்டர் நீளமும், 2.8 மீட்டர் விட்டமும் கொண்டது பிஎஸ்எல்வி ராக்கெட். பயண தூரத்தை பொறுத்த 1,425 கிலோ முதல் 3,250 கிலோ வரை எடை சுமந்து செல்லும் திறன் கொண்டது. மூன்று விதமான மாடல்களில் பிஎஸ்எல்வி ராக்கெட் உருவாக்கப்படுகிறது. அண்மையில் ஏவப்பட்ட ராக்கெட் மணிக்கு 27,000 கிமீ வேகத்தில் பயணித்தது.

1,678 கிலோ எடையை சுமந்து கொண்டு 622 கிமீ உயரம் வரை செல்லும் திறன் வாய்ந்த பிஎஸ்எல்வி - ஜி, 1,100 கிலோ எடையை சுமந்து கொண்டு 622 கிமீ உயரம் பறந்து செல்லும் பிஎஸ்எல்வி - சிஏ மற்றும் 1,800 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் வாய்ந்த பிஎஸ்எல்வி- எக்ஸ்எல் என்ற மூன்று மாடல்களில் அவை பயன்பாட்டை பொறுத்து தயாரிக்கப்படுகின்றன. கடந்த மாதம் 104 செயற்கைகோள்களை சுமந்து சென்ற மாடல் பிஎஸ்எல்வி எக்ஸ்எல் ராக்கெட்.

முதல் நிலையில் திட எரிபொருளில் இயங்கும் எஸ்139 எஞ்சின் உள்ளது. இதற்காக 138 டன் திட எரிபொருள் முதல் நிலையில் இருக்கும். உலகிலேயே மிகப்பெரிய ராக்கெட் எஞ்சின் இதுவாகும். இரண்டாம் நிலையில், 1 விகாஸ், மூன்றாம் நிலையில் எச்பிஎஸ்3, நான்காம் நிலையில் இரண்டு எல்-2-5 எஞ்சின்களும் உள்ளன. முதல் நிலையின் எரிபொருள் 105 வினாடிகளிலும், இரண்டாம் நிலை எரிபொருள் 158 வினாடிகளிலும், மூன்றாம் நிலை எரிபொருள் 83 வினாடிகளிலும் நான்காம் நிலை எரிபொருள் 425 வினாடிகளிலும் எரிந்துவிடும்.

ஒவ்வொரு பிஎஸ்எல்வி ராக்கெட்டிலும் 6 பூஸ்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். உருளைகள் போன்று ராக்கெட்டின் கீழ்பாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும், இந்த பூஸ்டர்களின் வேலை என்பது, ராக்கெட்டை தரையிலிருந்து மேலே உந்தி கிளப்புவதற்காக பயன்படுகிறது. முதலில் 4 பூஸ்டர்கள் மட்டுமே இயங்கும். 25 வினாடிகளில் மேலும் 2 பூஸ்டர்கள் இயங்கும்.

புதிய பிஎஸ்எல்வி வரிசை ராக்கெட்டான பிஎஸ்எல்வி எக்ஸ்எல் ராக்கெட்டில் இருக்கும், ஒவ்வொரு பூஸ்டர் எஞ்சினும் 720 கேஎன் மேல் நோக்கி எழும்புவதற்கான உந்து சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதாவது, தேஜஸ் போர் விமானத்தில் இருக்கும் ஜிஇ எஃப்-404 டர்போஃபேன் எஞ்சினைவிட 9.2 மடங்கு கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும்.

ஒரு பிஎஸ்எல்வி ராக்கெட்டை செலுத்துவதற்கு ரூ.90 கோடி செலவாகிறது. இதுவே பிற நாடுகளில் மிக அதிகம். எனவேதான் பிஎஸ்எல்வி ராக்கெட் வர்த்தக ரீதியில் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இதுவரை 39 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. அதில், 37 ராக்கெட்டுகள் வெற்றிகரமாக ஏவப்பட்டன. இரண்டு மட்டுமே தோல்வியை சந்தித்தது.

அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், இந்தோனேஷியா உள்ளிட்ட 19 வெளிநாடுகள் இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டை பயன்படுத்தி தங்களது செயற்கைகோள்களை ஏவி வருகின்றன. குறைந்த கட்டணம், துல்லியம், கால அளவு ஆகியவை அந்நாட்டு நிறுவனங்களை இஸ்ரோ பக்கம் ஈர்த்து வருகிறது.

மேலும், அமெரிக்காவை சேர்ந்த பல நிறுவனங்கள் இஸ்ரோ மூலமாக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த துவங்கி உள்ளன. அந்நாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு ராக்கெட்டுகளை பயன்படுத்தி செயற்கைகோள்களை ஏவுவதற்கு பல கெடுபிடிகள் உள்ளன. எனவே, சிறப்பு அனுமதி பெற்று இஸ்ரோ ராக்கெட் மூலமாக தங்களது செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகின்றன.

கடந்த 1990ம் ஆண்டு கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில், பிஎஸ்எல்வி ராக்கெட்டை உருவாக்கும் பணிகள் துவங்கின. இந்த ராக்கெட்டின் இரண்டாம் மற்றும் நான்காம் நிலைக்கான திரவ எரிபொருள் உந்து தொழில்நுட்பத்தை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மஹேந்திரகிரியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டது. திட எரிபொருள் உந்து தொழில்நுட்பம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!
புதிய ஹூண்டாய் வெர்னா காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications