சதாப்தி அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!
சதாப்தி சொகுசு ரயில்கள் பற்றி சுவாரஸ்யமானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களை போன்றே, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களும் பயணிகளிடம் பெரும் மதிப்பையும், வரவேற்பையும் பெற்ற சொகுசு ரயில்களாக இருக்கின்றன. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தலைநகர் டெல்லியை நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கும் விதத்தில் இயக்கப்படுகிறது.

ஆனால், சதாப்தி ரயில்கள் மெட்ரோ நகரங்களை விரைவாக இணைக்கும் விதத்தில் பகல்வேளை சொகுசு ரயில்களாக இயக்கப்படுகின்றன. ராஜ்தானி ரயில்கள் போன்றே, செல்லும் வழித்தடத்தில் முன்னுரிமை கொடுக்கப்படுகின்றன.

1988ம் ஆண்டு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. சதாப்தி என்றால் சமஸ்கிருதத்தில் நூற்றாண்டு என்று பொருள்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் நூறாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, அவரை நினைவுகூறும் விதத்தில் இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த மாதவராவ் சிந்தியாவின் கனவு திட்டத்தின்படி, இந்த புதிய ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. முதல் சதாப்தி ரயில் புது டெல்லியிலிருந்து ஜான்ஸி வரை இயக்கப்பட்டது. இந்த ரயில் தற்போது ஹபீப்கன்ஞ் சதாப்தி என்ற பெயரில் இயக்கப்படுகிறது. தற்போது இந்த ரயில் இந்தியாவின் அதிவேக ரயில் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையில் பகல்நேர சொகுசு ரயிலாக இயக்கப்படும் சதாப்தி சொகுசு ரயில்கள் சில நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும். காலையில் புறப்பட்டு மீண்டும் அன்றைய தினமே திரும்பிவிடும். இதனால், மிக விரைவான போக்குவரத்து வசதியை வழங்குகின்றன.

டெல்லியிலிருந்து போபால் வரையிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 150 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது. மணிக்கு 89 கிமீ என்ற சராசரி வேகத்தில் செல்கிறது. பெரும்பாலான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் WAP-7 மின்சார எஞ்சினுடன் இயக்கப்படுகின்றன. சில தடங்களில் டீசல் எஞ்சினுடனும் இயக்கப்படுகிறது.

சதாப்தி ரயில்கள் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. சதாப்தியில் 9 முதல் 10 ரயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதிவேகத்தில் செல்வதற்காக குறைவான பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படுகின்றன.

இரண்டு வகுப்பு இருக்கை வசதி கொண்டதாக இருக்கின்றன. புஷ் பேக் இருக்கைகள் கொடுக்கப்படுவதுடன், கால்கள் வைக்க தாராளமான இடவசதி பயணிகளுக்கு நிறைவான பயண அனுபவத்தை வழங்குகின்றன.

இந்த ரயில்களில் பயணத்திற்கும், உணவுக்கும் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சதாப்தியில் வழங்கப்படும் தரமான உணவுகளும் பயணிகள் மத்தியில் பிரபலமானவை.

தற்போது நாடுமுழுவதும் 24 ஜதை சதாப்தி ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், 15 ரயில்கள் புது டெல்லியிலிருந்து பிற முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் எல்எச்பி என்ற நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த பெட்டிகள் மிக அதிவேகத்தில் செல்லும் கட்டமைப்பையும், விபத்தின்போது பயணிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றிருக்கின்றன.

மிக விரைவான போக்குவரத்து வசதியை வழங்கும் இந்த சதாப்தி ரயில்களில் மிக குறைவான வேகத்தில் இயக்கப்படும் ரயில் புது டெல்லி- கத்கோடம் சதாப்திதான். இந்த ரயில் மணிக்கு 53.72 கிமீ என்ற சராசரி வேகத்தில் செல்கிறது. காரணம், இந்த ரயில் செல்லும் வழியில் இருக்கும் செங்குத்தான மலைப்பாதையும், சில இடங்களில் ஒருவழித்தடத்தில் இயக்கப்படுவதுமே.

தற்போது சதாப்தி ரயில்கள் கூடுதல் சொகுசு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆமதாபாத் சதாப்தி ரயிலில் சேட்டிலைட் டிவி மூலமாக சீரியல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. இது அலுப்பில்லா பயண அனுபவத்தை வழங்கும்.

இந்த சூழலில் சதாப்தி ரயில்கள் தற்போது அதிக வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனி டிவி வசதி, சிசிடிவி கேமரா, சுகாதாரமான கழிப்பறை வசதி, வினைல் ஃபுளோரிங் உள்ளிட்டவற்றுடன் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications