சாகசப் பிரியர்களின் வாழ்நாள் லட்சியமாக விளங்கும் சில்க்ரோடு பற்றிய சுவாரஸ்யங்கள்!
பழம் பெருமை வாய்ந்த சில்க் ரோடு பற்றிய சுவாரஸ்யமானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
பண்டை காலத்தில் ஆசியாவையும், ஐரோப்பாவையும் வர்த்தக ரீதியில் இணைத்த சில்க் ரோடு இன்று சாகச பயண விரும்பிகள் பயணிக்க விரும்பும் வாழ்நாள் லட்சியப் பாதையாக மாறி இருக்கிறது. இந்த பட்டுப் பாதை குறித்த வரலாற்று சுவாரஸ்யங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இமயமலையில் சாகசப் பயணம் செல்லும் கனவோடு இருந்தவர்கள், அதனை முடித்த பின்பு இப்போது பட்டுப் பாதையில் பயணிப்பதை தங்களது வாழ்நாள் லட்சியமாக வைத்திருக்கின்றனர். இந்த பட்டுப் பாதை சீனாவிலிருந்து ஆசியாவின் தென் பகுதியின் ஊடாக கிழக்கு ஐரோப்பா வரை நீள்கிறது.

பண்டை காலத்தில் பட்டு வர்த்தகம் நடைபெற முக்கிய காரணமாக விளங்கியதாலேயே இந்த பாதைக்கு பட்டுப் பாதை என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. 1877ல் ஜெர்மானிய புவியியலாளர் ஃபெர்டினான்ட் வான் ரிச்தோஃபன் என்பவர்தான் இந்த சாலைக்கு பட்டுப் பாதை என்ற பெயரில் குறிப்பிட்டார்.
Picture Credit: Wikimedia Commons

கிமு இரண்டாம் நூற்றாண்டில் பயன்பாட்டிற்கு வந்த இந்த பட்டுப் பாதை கிபி முதலாம் நூற்றாண்டு வரை அதிக போக்குவரத்தை கொண்டிருந்தது. அதன்பின்னர், 15ம் நூற்றாண்டில் இதன் முக்கியத்துவம் முற்றிலும் குறைந்தது. அதன்பிறகு, கடல் வழி வாணிபம் சிறந்த வழியாக இருந்ததால், இந்த பட்டுப் பாதை முக்கியத்துவம் படிப்படியாக குறைந்தது.

சீனாவில் துவங்கி இந்தியா, பாரசீகம் வழியாக கிழக்கு ஐரோப்பா வரை 7,000 கிமீ தொலைவுடைய வழித்தடம்தான் சில்க் ரோடு என்று குறிப்பிடப்படுகிறது. சில்க் ரோடு என்பது தரை வழியை மட்டுமே குறிப்பிடவில்லை. சில இடங்களில் நீர் நிலைகள், கடல் வழியாகவும் பயணித்து ஐரோப்பாவை அடைகிறது.
Picture Credit: Wikimedia Commons

பண்டை காலத்தில் ஒட்டகத்தில் பொதியை ஏற்றி, இந்த வழி மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வர்த்தகம் செய்துள்ளனர். சீனாவிலிருந்து பட்டு, வாசனை திரவியங்கள், யானைத் தந்தம், வெடிமருந்துகள், விலை உயர்ந்த கற்களை ஐரோப்பாவிற்கு சென்று வர்த்தகம் செய்துள்ளனர்.
Picture Credit: Wikimedia Commons

அதேபோன்று, திரும்பும்போது, ஒயின் உள்ளிட்ட மது வகைகள், கண்ணாடி பொருட்களை எடுத்து வந்துள்ளனர். பட்டு என்பது எடுத்துச் செல்வதற்கு இலகுவானதாகவும், அக்காலத்தில் மிகுந்த மதிப்புடைய பொருளாகவும் இருந்ததே, அதிக அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.

ஒட்டகம் தவிர்த்து, கவிகை வண்டிகளிலும் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதுடன், பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ வர்த்தகர்கள் இந்த வழித்தடத்தில் செல்வது வழக்கம்.

இந்த பட்டுப் பாதையில் பல இடங்களில் மிக மோசமான சீதோஷ்ண நிலை, இயற்கை சீற்றங்கள் காரணமாக, அவ்வப்போது வழியை மாற்றி செல்ல வேண்டி இருக்கும்.

சீதோஷ்ண நிலை தவிர்த்து, மிகவும் அபாயகரமான சாலைகளையும், மலைகளையும் கடந்து செல்கிறது. இதனால்தான் சாகச பயண பிரியர்கள் இந்த சாலையில் பயணிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

இத்தாலியை சேர்ந்த வர்த்தகரும், எழுத்தாளுருமான மார்கோ போலோ வெனிஸ் நகரிலிருந்து சீனாவிற்கு சில்க் ரோடு வழியாக பயணித்து தனது அனுபவத்தை பயணக் கட்டுரையாக எழுதியிருக்கிறார்.

இப்போது இந்த சாலையில் பயணிப்பதற்கு சாகச பிரியர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக விசேஷ பயணத் திட்டங்களை பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. கார் மற்றும் மோட்டார்சைக்கிளில் செல்வதற்கு ஏற்ப மிக விரிவானத் திட்டங்களை வழங்குகின்றன.

பழம் பெருமை வாய்ந்த பட்டுப் பாதையை மீண்டும் பயன்படுத்துவதற்கான முயற்சியில் சீனா தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. கடல் வழி வாணிபத்தில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும் விதத்தில், பழைய பட்டுப் பாதையை மீட்டெடுப்பதற்காக ஒன்பெல்ட், ஒன்ரோடு என்ற தாரக மந்திரத்துடன் பட்டுப் பாதையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர துடித்து வருகிறது.
இதன்மூலமாக, ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்த முடியும் என்று கருதுகிறது. மேலும், இதற்காக 12,000 கிமீ தூரம் பயணிக்கும், புதிய சரக்கு ரயில் சேவையையும், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications