உலக பிரசித்திப் பெற்ற திருவாரூர் ஆழித் தேர் - சுவாரஸ்யத் தகவல்கள்!
ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான கோயில் தேர் என்ற பெருமைக்குரியது மட்டுமல்ல, தேர் அழகுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும், திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர், புதுப்பிக்கப்பட்டு வரும் 26ந் தேதி வெள்ளோட்டத்திற்கு தயாராகியிருக்கிறது.
மோட்டார் உலகத்தில், மோட்டார் இல்லாத திருவாரூர் தேர் இடம்பெற்றிருக்கிறதே என்ற சந்தேகம் எழலாம். ஆனால், சமீப காலமாக மனித சக்தியை விட புல்டோசர் எந்திரங்கள் மூலமாகத்தான் திருவாரூர் தேர் ஓடுகிறது. ஆருரா, தியாகேசா முழக்கத்திற்கு நடுவில், அசைந்தாடி ஓட காத்திருக்கும் ஆழித்தேர் என்று அழைக்கப்படும் திருவாரூர் தேர் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆழித் தேர் நிலைகள்
ஆழித் தேர் நான்கு நிலைகளையும், பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் பீடம் என 7 அடுக்குகளை கொண்டதாகவும் உள்ளது. இந்த தேரின் நான்காவது நிலையில் தியாகராஜ சுவாமி வீற்றிருப்பார்.

வடிவம்
பீடம் மட்டும் 31 அடி உயரமும், 31 அடி அகலமும் கொண்டது. மூங்கில்களை கொண்டு முழுமையாக அலங்கரிக்கப்படும்போது, தேரின் உயரம் 96 அடியாக இருக்கும். ஆழித்தேரின் எடை 300 டன்.

அலங்காரம்
தேரை அலங்கரிக்க அதிக அளவில் மூங்கில் கம்பங்களும், 3,000 மீட்டர் அளவுக்கு தேர் சீலைகளும் பயன்படுத்தப்படுகின்றன. தேரின் மேற்புறத்தில் 1 மீட்டர் உயரத்திலான கலசம் பொருத்தப்பட்டிருக்கும். காகிதக் கூழில் தயாரிக்கப்பட்ட பிரம்மா தேரோட்டி பொம்மையும், நான்கு வேதங்களை முன்னிறுத்தும் பெரிய குதிரை பொம்மைகளும் என ஏராளமான பொம்மைகள் பொருத்தப்பட்டிருக்கும்.

டன் கணக்கில் கட்டுமானப் பொருட்கள்
தேரை அலங்கரிக்கும்போது, 500 கிலோ எடையுடைய துணிகள், 50 டன் எடையுடை கயிறுகள், 5 டன் பனமர சப்பைகள் பயன்படுத்தப்படுகிறது.

வடங்கள்
திருவாரூர் தேரின் முன்புறத்தில் 4 பெரிய வடக் கயிறுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஒரு வடக் கயிறு 21 அங்குலம் சுற்றளவும் 425 அடி நீளம் கொண்டதாக இருக்கும்.

சக்கரங்கள்
ஒவ்வொரு சக்கரமும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டது.

திருப்பும்போது...
ஆழித்தேர் ஓடுவதை காண்பதை காட்டிலும், தியாகராஜ கோயிலின் நான்கு வீதிகளிலும் திரும்புவதை காண்பதற்கே, அதிக கூட்டம் கூடும். ஏனெனில், அவ்வளவு பிரம்மாண்டமான அந்த தேரின் சக்கரங்களை இருப்பு பிளேட்டுகளின் மீது மசையை கொட்டி, இழுத்து திருப்புகின்றனர்.

எந்திர உதவி
பண்டைய காலத்தில் இந்த பிரம்மாண்ட தேரை இழுப்பதற்கு 12,000 பேர் தேவைப்பட்டனர். அதன்பின், ஆள் பற்றாக்குறையால், மக்கள் வடம் பிடித்து இழுக்கும்போது, பின்புறத்தில் யானைகளை வைத்து முட்டித் தள்ளி தேரை நகர்த்தியுள்ளனர். தற்போது மக்கள் வடம் பிடித்து இழுப்பதுடன், பின்புறத்தில் இரண்டு புல்டோசர் எந்திரங்கள் மூலமாக சக்கரங்கள் உந்தித் தள்ளப்படுகிறது.

ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம்
முன்பு டிராக்டர்களில் ஏராளமான முட்டுக் கட்டைகளை கொண்டு வந்து, தேர் சக்கரங்களில் போட்டு தேரை நிறுத்துவர். இதில், சில சமயங்களில் முட்டுக் கட்டை போடுபவர் விபத்தில் சிக்கும் ஆபத்து இருந்ததால், திருச்சியிலுள்ள பாரத மிகு மின் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இரும்பு அச்சு மற்றும் ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டது.

தீ விபத்து
1927ல் மேற்கு கோபுர வாசல் அருகே வரும்போது திருவாரூர் தேர் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, 1930ல் புதிய தேர் உருவாக்கப்பட்டது. இந்த தேரில் 400க்கும் மேற்பட்ட மர சிற்பங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 1988ம் ஆண்டு இந்த தேரின் சக்கரங்களுக்கு இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டதால், எளிதாக இழுக்க முடிந்தது.

வெள்ளோட்டம்
ரூ.2.17 கோடி மதிப்பில் தற்போது புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்து வரும் 26ந் தேதி வெள்ளோட்டம் நடைபெற இருக்கிறது. திருவாரூர் தேரோட்டம் மூன்று நாட்கள் திருவிழாவாக நடப்பது வழக்கம்.

வள்ளூவர் கோட்டம்
சென்னையில் அமைந்திருக்கும் வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேரின் பாணியிலேயே கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Photo Source: Facebook


Click it and Unblock the Notifications








