சத்தமில்லாமல் சர்ஜிக்கல் ஸ்டிரைக்... காரியத்தை கச்சிதமாக முடிக்க உதவிய துருவ்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அங்கிருந்த தீவிரவாத முகாம்களும் அடியோடு அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதலை நடத்திய கமாண்டோ படை வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது துருவ் ஹெலிகாப்டர்கள்தான். எதிரிகளின் கண்ணில் அகப்படாமல், இந்திய ராணுவ வீரர்களை வெற்றிகரமாக தாக்குதல் நடத்த உதவியதில் இந்த துருவ் ஹெலிகாப்டர்களுக்கு அதி முக்கிய பங்கு இருந்துள்ளது.

Advanced Light Helicopter[ALH] என்ற ரகத்தில் வடிவமைக்கப்பட்ட துருவ் ஹெலிகாப்டர் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மாடல். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்தான் இந்த ஹெலிகாப்டரை தயாரிக்கிறது.

ராணுவ வீரர்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது, ராணுவத்திற்கான விரைவான சரக்கு போக்குவரத்து, விமானப்படையின் சரங் சாகச அணியில் பயன்பாடு என பல்வேறு பாதுகாப்புத் துறையின் பயன்பாட்டி்ல இருக்கிறது.

அதுதவிர, இயற்கை பேரிடர் சமயங்களில் மீட்புப் பணிகள், எல்லையோர கண்காணிப்பு மற்றும் சியாச்சின் பனிச்சிகரத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கான அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் என பன்முக பயன்பாட்டு ஹெலிகாப்டர் மாடலாக இதுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்முறையாக தற்போது ராணுவ தாக்குதல் நடவடிக்கையில் துருவ் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ராணுவ தளபதி தல்பீர் சிங் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்திய 150 கமாண்டோ படை வீரர்களை துருவ் ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்று இறக்கிவிட்டுள்ளது.

அப்போது பாகிஸ்தான் ராணுவம் வைத்திருந்த நவீன ராணுவ ரேடார்களுக்கு கூட தெரியாத வகையில் மிகவும் தாழ்வாக பறந்து சென்று தனது கில்லாடித்தனத்தை காட்டியிருக்கிறது. அதாவது, மிக குறைவான உயரத்திலும், மிக அதிக உயரத்திலும் பறக்கும் வல்லமை கொண்ட ஹெலிகாப்டர் இது.

மின்னணு முறையில் ஆயுதங்களை கையாளும் தொழில்நுட்பம், இரவு நேரத்திலும் குறிப்பிட்ட இலக்கை சரியாக சென்றடையும் திறன் போன்றவையும் இதற்கு வலு சேர்க்கும் அம்சங்கள். அதாவது, சர்ஜிக்கல் ஸ்டிரைக் கூட இரவு நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலே. இதில், துருவ் ஹெலிகாப்டர் மிகச் சிறப்பாக செயலாற்றியிருப்பது பெருமைக்குரியது.

ALH Mk. I மற்றும் ALH Mk. II ஆகிய இரு மாடல்களும் ராணுவத்தின் சாதாரண பயன்பாட்டுக்கு பொருத்தமாக தயாரிக்கப்பட்டது. ALH Mk.III என்ற இந்த மாடலில் சக்தி என்ற புதிய எஞ்சின் பொருத்தப்பட்டது. குறிப்பாக, மலை சிகரங்களில் அமைந்திருக்கும் படை தளங்களுக்கு விரைவான போக்குவரத்து இணைப்பை இந்த ஹெலிகாப்டர் வழங்குகிறது.

ALH Mk. IV என்ற மாடல் எதிரிகளின் மீது தாக்குதல் நடத்துவதற்கான கருவிகளையும், ஆயுதங்களும் பொருத்தப்பட்ட மாடலாகும். பகல் மற்றும் இரவு நேர தாக்குதல்களை ஈடுபடுத்தக்கூடிய தாக்குதல் போர் ஹெலிகாப்டராகவும் பயன்படுத்த முடியும். நிகழ்நேர கண்காணிப்பு சாதனம் இருப்பதால், எதிரிகளின் தாக்குதல்களையும் கணித்து தப்பிவிடும் வசதிகள் கொண்டது.

வெவ்வேறு வகையான ஆயுதங்களை பொருத்துவதற்கு ஏற்ற வசதி கொண்டிருக்கிறது. இதில், ஆயுதங்களை பொருத்துவதற்கான பிடிமான அமைப்புகளில் வெவ்வேறு அளவுடைய ஆயுதங்களை பொருத்தக்கூடிய வசதி கொண்டது.

ஒரேநேரத்தில் 12 முதல் 16 பேரை ஏற்றிச் செல்லும் இடவசதி கொண்டது. ஒன்று அல்லது இரண்டு பைலட்டுகள் இயக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மிக மோசமான வானிலை, அதிக உயரத்தில் அமைந்திருக்கும் மலைப் பிரதேசங்களில் கூட இதன் செயல்பாடு மிகச்சிறப்பாக இருப்பது பல முறை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, உத்தரகாண்ட் பெரு வெள்ளம், நேபாள நில நடுக்கம் போன்ற சமயங்களில் கடுமையான சீதோஷ்ண நிலைகளில் கூட சிறப்பாக செயல்பட்டது. ஏன், 2004ம் ஆண்டு சுனாமி மீட்புப் பணிகளில் கூட ஈடுபடுத்தப்பட்டது.

நவீன வகை ரேடார் சாதனங்கள், தொலைதொடர்பு, வழிகாட்டு சாதனங்களுடன் உலக அளவில் சிறந்த ஹெலிகாப்டர் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இதற்கான கட்டுப்பாட்டு சாதனங்களை இஸ்ரேல் தயாரித்து வழங்குகிறது. இந்த ஹெலிகாப்டரில் தலா 1,341 குதிரைசக்தி திறனை அளிக்க வல்ல இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

மணிக்கு அதிகபட்சமாக 295 கிமீ வேகத்தில் பறக்கும். 1400 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 640 கிமீ தூரம் வரை பறக்கும். ஒரு ஹெலிகாப்டர் ரூ.40 கோடி மதிப்பு கொண்டது. கடந்த ஆண்டு வானிலை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்ட துருவ் ஹெலிகாப்டர் ரூ.60 கோடி மதிப்புடையது.

5.5 டன் எடை ரகத்திலான இந்த ஹெலிகாப்டர் மூன்று டன் எடையுடைய இந்த ஹெலிகாப்டர் ராணுவம் மற்றும் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகிறது. இந்திய விமானப்படையின் சீட்டா மற்றும் சேட்டக் ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக துருவ் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

முதல் முயற்சியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடவடிக்கையில் வெற்றிகரமாக தனது முதல் பங்களிப்பை வழங்கியிருக்கிறது. இந்திய பாதுகாப்புத் துறையின் பல்வேறு பயன்பாட்டிலும் இந்த ஹெலிகாப்டர் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு வரை 200க்கும் அதிகமான துருவ் ஹெலிகாப்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.

நேபாளம், ஈக்குவடார் மற்றும் இஸ்ரேலுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளதுடன், பல்வேறு நாடுகளும் ஆர்டர்களை கொடுத்து காத்திருக்கின்றன. அவ்வப்போது, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. துருவ் சேவை இந்நாட்டுக்கு தேவை.

அமெரிக்காவின் சதியையும் மீறி சிறகு முளைத்த அக்னி ஏவுகணை - சிறப்பம்சங்கள்!!
வல்லரசுகளின் வரிசையில் இந்தியா... பிரம்மோஸ்- II ஏவுகணை பற்றிய சிறப்புத் தகவல்கள்!
விமானப்படையில் சேர்க்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தின் தனிச் சிறப்புகள்!


Click it and Unblock the Notifications








