இந்திய விமான துறை வரலாற்றின் சுவாரஸ்யப் பக்கங்கள்!
பரந்து விரிந்த இந்திய துணைக் கண்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளையும் விரைவாக இணைப்பதற்கு விமானப் போக்குவரத்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த இரு தசாப்தங்களாக இந்தியாவின் விமானப் போக்குவரத்து அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்தியாவின் விமானத் துறை வரலாறு பாரம்பரிய சுவை நிறைந்தது. 1903ல் ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டறிந்த நிலையில், அதற்கு அடுத்த வெகு சில ஆண்டுகளிலிருந்தே, இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையின் வரலாறும் துவங்கியிருக்கிறது. அதிலிருந்து சில சுவையானத் தகவல்களின் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

1910: பாட்டியாலாவை ஆட்சி செய்த பூபிந்தர் சிங் மஹாராஜாதான் முதல்முறையாக விமானத்தை வாங்கியிருக்கிறார். இந்திய அளவில் மட்டுமின்றி, ஆசிய கண்டத்தில் இவர்தான் முதல் விமானத்தை தருவித்ததாக கூறப்படுகிறது. பூபிந்தர் சிங் மஹாராஜா தனது தலைமை பொறியாளரை ஐரோப்பாவிற்கு அனுப்பி, மூன்று விமானங்களை செய்து வாங்கினார். அதில், பிளேரியாட் மோனோபிளேன் மற்றும் ஃபார்மன் பை-பிளேன் மாடல்களை அவர் வாங்கினார். அந்த மூன்று விமானங்களும், அந்த ஆண்டு இறுதியில் பஞ்சாபை வந்தடைந்தது.
Picutre credit: Wiki Commons

1911: இந்த ஆண்டு பிப்ரவரி 18ந் தேதிதான் இந்தியாவின் வர்த்தக ரீதியிலான உள்நாட்டு விமான சேவை துவங்கப்பட்டது. அலஹாபாத் நகரிலிருந்து 6 மைல் தொலைவில் இருந்த நைனி ரயில் சந்திப்பிற்கு தபால்களை ஏற்றிக் கொண்டு ஹம்பர் பை- பிளேன் சென்றது. இந்த விமானத்தை ஹென்றி பைகுயட் என்ற விமானி இயக்கினார்.
Picutre credit: J.Klank/Wiki Commons

1927: உலகிலேயே முதலில் அரசு அங்கீகாரம் பெற்ற பிரிட்டனின் இம்பீரியல் ஏர்வேஸ் நிறுவனம்தான் இந்தியாவிற்கு விமான சேவையை துவங்கியது. மேலும், வெளிநாடுகளுடன் இந்தியாவை வான் வழியாக இணைத்த பெருமை பிரிட்டன் இம்பீரியல் ஏர்வேஸ் நிறுவனத்தையே சேரும். கெய்ரோ- பஸ்ரா-கராச்சி-ஜோத்பூர்-டெல்லி வழித்தடத்தில் இந்தியாவின் முதல் சர்வேதச விமானம் இயங்கியது. இதற்காக பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட டீ ஹாவிலேண்ட் ஹெர்குலிஸ் என்ற 7 சீட்டர் விமானம் பயன்படுத்தப்பட்டது. மேலும், கராச்சி- ஜோத்பூர்- டெல்லி வழித்தடத்தில் உள்நாட்டு சேவை துவங்கியது.
Picutre credit: C.C. Pierce & Co./Wiki Commons

1929: இமாம் பொறுப்பில் இருந்த அதே அகா கான் என்பவர் ராயல் ஏரோ க்ளப் மூலமாக விமான பந்தயம் ஒன்றை அறிவித்தார். வெற்றி பெறுபவருக்கு 500 பவுண்ட்டுகள் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். விமானத்தை தனியாக ஓட்ட வேண்டும் என்பது நிபந்தனை. இப்போதுள்ள ரேடியோ தொடர்பு வசதிகளற்ற அந்த சூழலில் இந்த பந்தயத்தில் மூன்று பேர் பங்கேற்றனர். அதில், ஒருவர் டாடா குழமத்தின் ஸ்தாபகர் ஜேஆர்டி டாடா. மற்றொருவர் இங்கிலாந்தில் சிவில் எஞ்சினியர் பட்டம் படித்த மன்மோகன் சிங். மூன்றாமாவர், ஆஸ்பி மெர்வன். இவர்தான் பின்னாளில் இந்திய விமானப்படையின் தலைவரானார். இரண்டு பேர் ஒரே வழித்தடத்திலும், அதற்கு நேர் திசையில் ஜேஆர்டி டாடாவும் பயணித்தனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த விமான பந்தயத்தில் மன்மோகன் சிங் வெற்றி பெற்றார்.
Picutre credit: flyingmachines

1929ம் ஆண்டு பிப்ரவரி 10ந் தேதி இந்தியாவின் முதல் விமான பைலட் உரிமத்தை ஜேஆர்டி டாடா பெற்றார். ஒன்றாம் எண் கொண்ட அந்த உரிமத்தை ஏரோ கிளப் ஆஃப் இந்தியா அண்ட் பர்மா அமைப்பால் வழங்கப்பட்டது.
படத்தில் ஜேஆர்டி ரத்தன் டாடா

1932: விமானத்தை இயக்குவதற்கு பைலட் லைசென்ஸை பெற்ற இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமையை ஊர்மிளா கே பாரிக் பெற்றார்.
Picutre credit: lmt-lss.com

1932: புறப்படும் நேரம், வந்து சேரும் கால அட்டவணையுடன் கூடிய முறையான விமான சேவை நிறுவனத்தை ஜேஆர்டி டாடா துவங்கினார். கராச்சியிலிருந்து அகமதாபாத் வழியாக மும்பைக்கு இயக்கப்பட்ட முதல் விமானத்தை அவரே பைலட்டாக இருந்து இயக்கினார். மேலும், ஜேஆர்டி டாடாவின் சக விமானியும், இங்கிலாந்தின் ராயல் ஏர்ஃபோர்ஸ் விமானப்படையின் முன்னாள் விமானியுமான நேவில் வின்சென்ட் அந்த விமானத்தை மும்பையிலிருந்து பெல்லாரி நகர் வழியாக சென்னைக்கு இயக்கி முதல் பயணத்தை நிறைவு செய்தனர்.

1933: டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக முதலாமாண்டு விமான சேவையை நிறைவு செய்தது. மொத்தம் 1.60 லட்ச் மைல்கள் விமானங்கள் இயக்கப்பட்டதாகவும், 155 பயணிகள் ஓராண்டில் பயணித்ததாகவும் தெரிவித்தது. மேலும், 10.71 டன் தபால்களை பரிமாற்றம் செய்ததாகவும் தெரிவித்தது. மேலும், இந்திய அரசுடன் தபால் போக்குவத்து ஒப்பந்தம் மூலமாக வருவாய் ஈட்டுவதாகவும் தெரிவித்தது. அதே ஆண்டில் மும்பையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு முதல் நீண்ட தூர விமான சேவையை அறிமுகம் செய்தது. மைல்ஸ் மெர்லின் என்ற 6 சீட்டர் விமானம் பயன்படுத்தப்பட்டது.
Picutre credit: jetlinemarvel

1945: இந்தியாவின் இரண்டாவது உள்நாட்டு விமான நிறுவனமாக டெக்கான் ஏர்வேஸ் உதயமானது. ஹைதராபாத் நிஜாம் 71 சதவீத மூலதனத்தையும், டாடா சன்ஸ் குழமம் 29 சதவீத மூலதன பங்களிப்புடன் இந்த விமான நிறுவனம் துவங்கப்பட்டது. 12 டக்ளஸ் டிசி3எஸ் விமானங்களுடன் ஹைதராபாத்தை மையமாக கொண்டு 1946ல் சேவையை துவங்கியது.
Picutre credit: Sean d'Silva/Wiki Commons

1946: டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர் ஏர் இந்தியா என்று மாற்றம் செய்யப்பட்டது. ச1947ம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அரசு- தனியார் கூட்டணி கொள்கையின் அடிப்படையில் சர்வதேச வழித்தடங்களில் தனது சேவையை விரிவாக்கியது. ஏர் இந்தியா இன்டர்நேஷனல் லிமிடேட் என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் மூன்று லாக்ஹீட் கன்ஸ்டெல்லேஷன் விமானங்களுடன் சேவையை துவங்கியது. 1948ம் ஆண்டு விமான சேவையை ஆரம்பித்தது. மும்பையிலிருந்து கெய்ரோ மற்றும் ஜெனிவா வழியாக லண்டனுக்கு விமானங்களை இயக்கியது. 1953ம் ஆண்டு ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்டது.

1951: வர்த்தக விமானத்தை இயக்கிய இந்தியாவின் முதல் பெண் பைலட் என்ற பெருமையை பிரேம் மாத்தூர் பெற்றார். டெக்கான் ஏர்வேஸ் விமானத்தை அவர் இயக்கினார்.
Picutre credit: quora

1953: இந்தியாவின் ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களும் தேசியமாக்கப்பட்டன. இதன்படி, டெக்கான் ஏர்வேஸ், ஏர்வேஸ் இந்தியா, பாரத் ஏர்வேஸ், ஹிமாலயன் ஏவியேஷன், கலிங்கா ஏர் லைன்ஸ், இந்தியன் நேஷனல் ஏர்வேஸ், ஏர் சர்வீஸஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் அரசு வசமாகின. உள்நாட்டு சேவைக்கான விமான நிறுவனமாக இந்தியன் ஏர்லைன்ஸ் உருவானது. சர்வதேச போக்குவரத்து நிறுவனமாக ஏர் இந்தியா தனது சேவையை தொடர்ந்தது. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 74 டிசி-3 டகோட்டாஸ் விமானங்களும், 3 டிசி4எஸ் விமானங்களும், இதர சிறிய விமானங்களும் பயன்படுத்தப்பட்டன.
Picutre credit: RuthAS/Wiki Commons

1956: இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதல் பெண் பைலட்டாக துர்பா பானர்ஜி பணியமர்த்தப்பட்டார்.
Picutre credit: @Epicgrams

1960: முதல்முறையாக ஜெட் விமானங்கள் அறிமுகமானது. போயிங் 707-437 விமானத்தை ஏர் இந்தியா சேவைக்கு அறிமுகம் செய்தது. அத்துடன், அமெரிக்காவுக்கு சேவையை துவங்கிய முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையையும் ஏர் இந்தியா பெற்றது.
Picutre credit: Ralf Manteufel/Wiki Commons

1984: இந்திய விமானப்படையில் பைலட்டாக பணியாற்றிய 35 வயதான ராகேஷ் ஷர்மாதான் இந்தியாவின் முதல் விண்வெளி வீரர். மேலும், விண்வெளிக்கு சென்ற 138வது வீரர். விண்வெளியில் 8 நாட்களை அவர் செலவிட்டார்.
Picutre credit: Subhav Sharma/Wiki Commons

1985: கொல்கத்தா- சில்சார் வழித்தடத்தில் முழுக்க முழுக்க பெண் பணியாளர் குழுவால் இந்தியாவின் முதல் விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானக் குழுவிற்கு தலைமையேற்றவர் சவுடமணி தேஷ்முக். மேலும், 1989ம் ஆண்டு போயிங் விமானத்தை இயக்கி பெண் பணியாளர் குழுவிற்கும் இவர்தான் தலைவராக இருந்தார்.
Picutre credit: Torsten Maiwald/Wiki Commons

1989: ஃப்ளை பை ஒயர் என்ற அதிநவீன கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட ஏர்பஸ் ஏ320 விமானத்தை முதல்முதலில் சேவைக்கு அறிமுகம் செய்த நிறுவனங்களில் ஒன்றாக இந்தியன் ஏர்லைன்ஸ் பெருமை பெற்றது.

1990: விமான சேவை நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு 37 ஆண்டுகளுக்கு பின்னர், விமான சேவை துறையில் தனியார் நிறுவனம் கால் பதித்தது. உள்நாட்டு விமான சேவையில் தனிக்காட்டு ராஜாவாக கோலோய்ச்சி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக ஈஸ்ட்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் களமிறங்கியது.
Picutre credit: Daniel Tanner/Wiki Commons

1990: வளைகுடா போரின்போது அங்கு பணிபுரிந்த இந்தியர்களை அழைத்து வருவதற்காக அவசரகால சேவையை ஏர் இந்தியா வழங்கியது. அம்மான் - மும்பை இடையே 59 நாட்களில் 488 விமான சேவைகளை வழங்கி, அங்கிருந்த 1,10 லட்சம் பேரை தாயகம் திரும்ப உதவியது. இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறது.
Picutre credit: scroll

1990: இந்தியாவின் மிகவும் இளம் விமானி என்ற பெருமையை நிவேதிதா பாசின் பெற்றார். அவர் ஐசி-492 விமானத்தை மும்பை- அவுரங்காபாத்- உதய்பூர் வழித்தடத்தில் இயக்கினார். மேலும், ஏர்பஸ் ஏ300 விமானத்தை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் விமானி என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
Picutre credit: @nivedita_bhasin

1992: இந்திய விமானப்படையில் முதல்முறையாக பெண் விமானிகளுக்கான பணியமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெறும் 8 பைலட் பணியிடங்களுக்கு 20,000 விண்ணப்பங்கள் குவிந்தன. 1994ல் பெண் விமானிகள் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் விமானங்கள் அல்லாத விமானப்படையில் சாதாரண ரக விமானங்களை இயக்க பணியமர்த்தப்பட்டனர்.

1997: விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் ஒன்றிணைந்து டெக்கான் ஏவியேஷன் என்ற நிறுவனத்தை துவங்கினர். இது பின்னாளில் இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் சேவை நிறுவனமாக மாறியது.
Picutre credit: Sean D Silva/Wiki Commons

1998: விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்த அவர் நாசா விண்வெளி மையத்திற்காக விண்வெளி ஆய்வுப் பணிகளுக்கு சென்றார்.

1999: கார்கில் போரின்போது, போர் நடந்த இடங்களில் விமானங்களை இயக்கிய இந்தியாவின் முதல் பெண் பைலட் குஞ்ஜான் சக்சேனா.
Picutre credit: shethepeople.tv

2003: இந்தியாவின் முதல் பட்ஜெட் கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் டெக்கான் உதயமானது. பெங்களூரிலிருந்து மங்களூருக்கு முதல் விமானத்தை இயக்கியது.
Picutre credit: Konstantin von Wedelstaedt/Wiki Commons

2004: சேவை துவங்கிய இரண்டாவது நாளே பெங்களூர்- டெல்லி இடையே ஏர்பஸ் ஏ320 விமான சேவையை அறிமுகம் செய்து, பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
Picutre credit: Daniel Murzello/Wiki Commons

2007: இந்தியன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை ஏர் இந்தியாவுடன் இணைத்து ஒரே நிறுவனமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, தேசிய விமான நிறுவனத்தையும் அமைத்தது.

2016: இந்திய விமானப்படையில் முதல்முறையாக போர் விமானங்களை இயக்கும் பணிக்காக பாவனா காந்த், அவானி சதுர்வேதி, மோகனா சிங் உள்ளிட்ட 3 பெண் பைலட்டுகள் பணியமர்த்தப்பட்டனர். இதற்காக, அவர்களுக்கு 6 மாத காலம் விசேஷ பயிற்சி அளிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications