இந்திய கடற்படையின் ஐஎன்எஸ்வி மாதேய் பாய்மரக் கப்பலில் சிறப்பம்சங்கள்!
இந்திய கடற்படையில் பல்வேறு வகையான படகுகள், போர்க்கப்பல்கள் இருப்பது அறிந்ததே. ஆனால், எஞ்சின் இல்லாமல், காற்று விசையில் இயங்கும் பாய்மரக் கப்பலும் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம், ஐஎன்எஸ்வி மாதேய் என்று பெயருடைய பாய்மரக் கப்பல் இந்திய கடற்படையில் உள்ளது.
பாய்மரக் கப்பல் என்றாலும் இந்த கப்பலில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளும், புதிய தலைமுறை கட்டமைப்பு கொண்டது. இந்த பாய்மர கப்பலில், இந்திய கடற்படையை சேர்ந்த வீராங்கனைகள் அடங்கிய குழு விசாகப்பட்டணத்திலிருந்து கோவாவிற்கு சாகசப் பயணம் மேற்கொண்டு சமீபத்தில் சாதனை புரிந்துள்ளது.
முதல்முறையாக கேப்டன் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் கடற்படையை சேர்ந்த வீராங்கனை குழுவினர் இந்த பாய்மர கப்பலை செலுத்தி வியக்க வைத்துள்ளனர். இந்த சாதனை இத்தோடு நிற்க போவதில்லை. வாருங்கள் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பயண சாதனை
கடந்த 2009ம் ஆண்டில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட இந்த ஐஎன்எஸ்வி மாதேய் கப்பல், இதுவரை இதுவரை ஒரு லட்சம் மைல்கள் தூரம் பயணம் செய்து சாதனை புரிந்துள்ளது.

உலகை வலம் வந்து சாதனை
இதுவரை இரண்டு முறை உலகை வலம் வந்து சாதனை புரிந்துள்ளது ஐஎன்எஸ்வி மாதேய் பாய்மரக் கப்பல். கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பையிலிருந்து புறப்பட்ட திலிப் டோன்டே 2010ம் ஆண்டு மே 19ந் தேதி பயணத்தை நிறைவு செய்தார். உலகை சுற்றி வந்த 175 நபர் என்ற பெருமையையும் பெற்றார்.

இரண்டாவது சாதனை
இதைத்தொடர்ந்து, கடந்த 2013ம் ஆண்டு இந்திய கடற்படையை சேர்ந்த லெப்டினென்ட் கமாண்டர் அபிலாஷ் டோமி, என்ற கடற்படை வீரர் தனி ஒருவராக இந்த பாய்மரக் கப்பலில் உலகை 151 நாட்களில் சுற்றி வந்து சாதனை புரிந்தார். எங்கும் நில்லாமல் இவர் இந்த சாதனையை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சாதனை
இந்த நிலையில், அடுத்த ஆண்டு இந்த பாய்மரக்கப்பலில் உலகை வலம் வரும் சாகசப் பயணம் மேற்கொள்ள இந்திய கடற்படை வீராங்கனைகள் குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக வீராங்கனைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னோட்டப் பயணம்
தற்போது விசாகப்பட்டணத்திலிருந்து சென்னை, கொச்சி வழியாக கோவா வரை இந்திய கடற்படை வீராங்கனை குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருககும் இந்த சாகசப் பயணமானது, அடுத்த ஆண்டு உலகை வலம் வரும் பயணத்திற்கான முன்னோட்டமாகவே கருதப்படுகிறது.

வசதிகள்
கோவாவை சேர்ந்த அக்வாரியஸ் ஃபைபர்க்ளாஸ் லிமிடேட் என்ற நிறுவனத்தால் ஐஎன்எஸ்வி மாதேய் கட்டமைக்கப்பட்டது. 2009ம் ஆண்டு இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கப்பலில் செயற்கைகோள் தொடர்பு வசதிகள், மின்னணு நேவிகேஷன் சாதனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த பாய்மரக் கப்பல் 23 டன் எடை கொண்டது.

குடிநீர் வசதி
இந்த கப்பலில் 12,000 லிட்டர் குடிநீரை சேமித்து வைக்கும் வசதியும், கடல்நீரிலிருந்து குடிநீரை பெறும் வசதியும் உள்ளது.

கூடுதல் விபரம்
எடை: 23 டன்
நீளம்: 17.1 மீட்டர்
பீம் நீளம்: 5 மீட்டர்
பாய்மர உயரம்: தண்ணீர் மட்டத்துக்கு மேலே 21 மீட்டர்

உங்களுக்கு தெரியுமா?
1612ம் ஆண்டில் இந்தியாவை ஆண்டு வந்த கிழக்கிந்திய ஆங்கிலேயே கம்பெனிதான் முதல்முறையாக இந்திய கடற்படைக்கான பிள்ளையார் சுழி போட்டது. ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் மரைன் என்று அழைக்கப்பட்டது.அவர்களின் சொந்த நலன் கருதி உருவாக்கினாலும், அதுதான் இந்திய கடற்படை வரலாற்றின் துவக்கமாக கூறப்படுகிறது.

ராயல் நேவி
ஈஸ்ட் இந்தியா கம்பெனி மரைன் பின்னாளில், ராயல் இந்தியன் நேவி என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1950ல் இந்தியா குடியரசு நாடாகியபோது, இந்தியன் நேவி, அதாவது இந்திய கடற்படை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1961ல் முதல்முறையாக கோவாவை விடுவிப்பதற்கான முயற்சியில் போர்ச்சுகீசிய கடற்படைக்கு எதிராக இந்திய கடற்படை தனது முதல் போரை நடத்தியது.


Click it and Unblock the Notifications








