விமானப்படையில் சேர்க்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தின் தனிச் சிறப்புகள்!
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. இதற்கான, நிகழ்ச்சி இன்று பெங்களூரில் நடந்தது. இதையடுத்து, தேஜஸ் போர் விமானங்கள் கொண்ட முதலாவது விமானப்படை பிரிவும் உருவாகியிருக்கிறது.
உலகிலேயே அதிக சிறப்பம்சங்களை கொண்ட நவீன ரக போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படும் தேஜஸ், முழுக்க முழுக்க இந்தியாவின் சொந்த முயற்சியில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த இலகு ரக போர் விமானத்தின் மூலமாக, இந்திய விமானப்படையின் பலம் வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானத்தின் தனிச் சிறப்புகளை ஸ்லைடரில் காணலாம்.

புதிய பலம்
தற்போது இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் ரஷ்ய தயாரிப்பான மிக்-21 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக, உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் சேர்க்கப்பட உள்ளது. மிக்-21 ரக விமானங்கள் பழமையாகிவிட்ட நிலையில், தற்போது நவீன ரக போர் விமானமான தேஜஸ், இந்திய விமானப்படையின் பலத்தை வெகுவாக உயர்த்தும்.

சிறந்த விமானம்
உலகிலேயே அதி சிறந்த நவீன ரக போர் விமானங்களில் ஒன்றாக தேஜஸ் குறிப்பிடப்படுகிறது. பாகிஸ்தான்- சீனா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஜேஎஃப்-17 போர் விமானத்தைவிட இது சிறந்ததாகவும், சக்திவாய்ந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

இலகு வகை
Light Combat Aircraft என்ற இலகு ரக போர் விமான வகையை சேர்ந்தது. பறக்கும்போது இதன் செயல்திறனும், வளைந்து நெளிந்து எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் திறனும் மிகச்சிறப்பாக இருப்பதாக, இதனை ஓட்டிய பைலட்டுகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

விபத்தில்லா சோதனை
தேஜஸ் விமானத்தின் மற்றொரு சிறப்பு, இதுவரை 3,000 முறை வானில் பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அப்போது, விபத்தில்லாமல் சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதும், விமானிகள் மத்தியில் பாராட்டை பெறுவதற்கும், உலகின் கவனம் தேஜஸ் பக்கம் திரும்புவதற்கும் காரணமாக இருக்கிறது.

பாதிக்கு, பாதி
மேற்கத்திய நாடுகளின் போர் விமானங்களுக்கு இணையான பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது தேஜஸ். ஆனாலும், இதில், 40 சதவீதம் வெளிநாட்டு உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவை சேர்ந்த ஜிஇ நிறுவனத்தின் எஃப் 404 ஜிடி எஃப்2ஜே3 டர்போஃபேன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, எஜெக்ட் சீட் எனப்படும், அவசர சமயத்தில் விமானி வெளியேறும் இருக்கை இங்கிலாந்து தயாரிப்பாகவும், ரேடார் மற்றும் ஆயுதங்கள் இஸ்ரேல் தயாரிப்புகளாகவும் இருக்கின்றன.

பெருமைக்குரிய விஷயங்கள்...
இந்த விமானத்தின் இலகு எடையும், உறுதியும் கொண்ட கார்பன் ஃபைபர் உடற்கூறு பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை. அதேபோன்று, விமானத்தை இயக்குவதற்கான ஃப்ளை-பை ஒயட் என்ற நவீன கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு அமைப்பும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயங்கள்.

மற்றொரு சிறப்பு
இந்த விமானத்திற்காக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் ஃப்ளை பை ஒயர் கட்டுப்பாட்டு அமைப்பை, எதிர்காலத்தில் மேம்படுத்திக் கொள்ளும் தொழில்நுட்பத்துடன் கம்ப்யூட்டர் கோடுகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதனால், அடுத்த தலைமுறை அம்சங்களுடன் மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

எச்சரிக்கை ரேடார்
இந்த விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் தரங் ரேடார் இந்திய தயாரிப்பு. தேஜஸ் விமானத்தை குறி வைத்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களின் வருகை குறித்து முன்கூட்டியே பைலட்டை எச்சரிக்கும் ரேடார் அமைப்பு இது.

செயல்திறன்
பரந்துவிரிந்த நிலப்பரப்பையும், மாறுபாடுடைய தட்பவெப்ப நிலைகளையும் கொண்ட நம் நாட்டிற்கு தேஜஸ் மிகப் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில், இந்த போர் விமானம் அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் மிகச் சிறப்பாக இயங்குவது சோதனைகள் மூலமாக அறியப்பட்டிருக்கிறது.

ஏரோடைனமிக்ஸ்
விமானத்தின் உடற்கூடுடன் இணைந்திருக்கும் டெல்டா விங் வகை இறக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக, மிகச்சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தாத்பரியம் கொண்ட போர் விமானமாக இருப்பதால், எந்த கோணத்திலும் எளிதாக விமானத்தை இயக்க முடியும்.

தாக்குதல் திறன்
வானிலிருந்து வான் தாக்குதல்களையும், தரை இலக்குகளையும் மிக துல்லியமாக நடத்தும் திறன் மிக்க போர் விமானமாக தேஜஸ் கூறப்படுகிறது. இந்த விமானம் கடல் இலக்குகளையும் தாக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சூப்பர்சானிக் விமானம்
அதிகபட்சமாக மணிக்கு 2,205 கிமீ வேகம் வரை பறக்கும். முதல் முறையாக பறக்கவிட்டபோதே, மணிக்கு 1,347.5 கிமீ வேகத்தை தொட்டு அசத்தியது. அதாவது, மேக்-1 வேகத்தில் பறந்தது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3,000 கிமீ தூரம் வரை பறக்கும். வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதியும் உண்டு.

முறியடிக்கும் திறன்
வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளை தாங்கிச் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. லேசர் சமிக்ஞை வழிகாட்டுதலின்படி, வெடிகுண்டுகளை வீசுதல், விமானத்தை நோக்கி வரும் தாக்குதல்களை முறியடிக்கும் ஆயுதங்களும், தொழில்நுட்பங்களும் உள்ளன.

விலை மதிப்பு
மார்க்1 தேஜஸ் போர் விமானம் ரூ.160 கோடி விலை மதிப்பும், மார்க் 1A மாடல் ரூ.190 கோடி விலை மதிப்பும் கொண்டது. அதேநேரத்தில், வெளிநாட்டு போர் விமானங்களை வாங்கும்போதும், ஒன்றின் மதிப்பு அனைத்து செலவுகளும் உட்பட ரூ.1,000 கோடியை நெருங்குகிறது. மேலும், பராமரிப்பு செலவுக்கு தனிக்கட்டணம்.

மேம்படுத்தும் நடவடிக்கை
நவீன ரக போர் விமானமாக இருந்தாலும், போர்களில் ஈடுபடுத்துவதற்கு பல மேம்பாடுகளை செய்ய வேண்டியிருக்கிறது. இந்திய விமானப்படையின் தேவைகளையும், கோரிக்கைகளும் ஏற்று, தேஜஸ் போர் விமானத்தை மேம்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. வரும் 2018-2020ம் ஆண்டுகளில் தேஜஸ் போர் விமானத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்ப்படுகிறது.

பாகிஸ்தானின் ஜேஎஃப்-17 போர் விமானம் Vs இந்தியாவின் தேஜஸ் போர் விமானம்: ஒப்பீடு


Click it and Unblock the Notifications








