அக்னி 3 ஏவுகணை பற்றிய சிறப்புத் தகவல்கள்!
அக்னி 3 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்திய பெருங்கடல் பகுதியில் தன் ஆட்சிமானத்தை நிலைநாட்டும் நோக்கில், சீனா தனது இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை சமீபத்தில் களமிறக்கியது.
இந்தியாவை மிரட்டும் தொனியிலேயே, ரகசியமாக தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலை அவசரமாக அந்நாடு அறிமுகம் செய்துள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த சலசலப்புக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்கிற ரீதியில் அடுத்து இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை இந்தியா தயாரித்து வருகிறது. மேலும், சீனாவின் மிரட்டல்களை தட்டி வைக்கும் விதத்தில் இரண்டு ஏவுகணை சோதனைகளை இந்தியா அடுத்தடுத்து வெற்றிகரமாக நடத்தி காட்டி இருக்கிறது.

ஆம், கடந்த வாரம் பிரம்மோஸ் ஏவுகணையை கப்பலில் இருந்து செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்த நிலையில், அக்னி-3 ஏவுகணையையும் நேற்று வெற்றிகரமாக பரிசோத்து காட்டி சீனாவிற்கு தனது பலத்தை மறைமுகமாக காட்டி இருக்கிறது.

அக்னி இருக்க பயமேன் என்பது முற்றிலும் உண்மை. ஏனெனில், இந்த ஏவுகணை நம் நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பதுடன், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்குகின்றன.

தற்போது சோதனை செய்யப்பட்டு இருக்கும் அக்னி 3 ஏவுகணையானது, அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் படைத்தது. கொடுத்த இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும்.

அக்னி வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றாகவும், பல முறை வெற்றிகரமாக பரிசோத்து பார்க்கப்பட்ட ஏவுகணையாகவும் இருக்கிறது. எனவே, போர் என்று வந்தால் உடனடியாக பயன்படுத்த முடியும்.

இந்த ஏவுகணை 17 மீட்டர் உயரமும், 8 டன் எடையும் கொண்டது. இரண்டு நிலை திட எரிபொருள் கலன்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. வினாடிக்கு 6 முதல் 7 கிமீ வேகத்தில் பயணிக்கும்.

அக்னி-3 ஏவுகணையில் 1.5 டன் அணு ஆயுதத்தை வைத்து செலுத்த முடியும். அதிகபட்சமாக 3,000 கிமீ தூரம் வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்டது. இந்திய எல்லையில் வைத்து செலுத்தும்போது பாகிஸ்தானின் மறுபுறத்தையும், சீனாவின் மையப்பகுதி வரை செல்லும் திறன் வாய்ந்தது.

விசேஷ டிரக் அல்லது விசேஷ அமைப்புடைய ரயில் லாஞ்சர் மூலமாக இதனை ஏவ முடியும். எல்லைப்பகுதியில் இருந்து ஏவும்போது அதிக பட்ச தூர இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும்.

இந்த ஏவுகணையானது குறி வைக்கப்பட்ட இலக்கிலிருந்து 40 மீட்டர் சுற்றளவுக்குள் தாக்குதல் நடத்து திறன் கொண்டது. இதனால், மிகவும் துல்லியமான ஏவுகணைகளில் ஒன்றாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த ஏவுகணை 3,000 கிமீ தூரம் வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், இந்த ஏவுகணை அதிகபட்சமாக 5,000 கிமீ தூரம் வரை பாய்ந்து செல்லும் ரகத்தை சேர்ந்ததாக குறிப்பிடப்படுவதையும் கவனிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








