ஏர் இந்தியாவில் இணைந்திருக்கும் புதிய ஏர்பஸ் ஏ320 நியோ விமானத்தின் சிறப்புகள்!!
ஏர்பஸ் ஏ320 நியோ என்ற நவீன விமான மாடலை சேவைக்கு பயன்படுத்த இருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம். இந்த விமானம் பற்றிய சில முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
உள்நாட்டு விமான சேவை துறை அபரிமிதமான வளர்ச்சி பெற்று வருவதை மனதில் கொண்டு புதிய விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் சேவைக்கு கொண்டு வருகிறது. அதன்படி, குவைத் நாட்டை சேர்ந்த அலாஃப்கோ நிறுவனத்திடமிருந்து 14 புதிய ஏர்பஸ் ஏ320 நியோ விமானங்களை ஏர் இந்தியா குத்தைக்கு எடுத்துள்ளது.

அதில், முதலாவது ஏர்பஸ் ஏ320 நியோ விமானம் நேற்று டெல்லி வந்தடைந்தது. வழக்கம்போல் அந்த முதல் விமானத்துக்கு நீரை பீய்ச்சியடித்து 'வாட்டர் சல்யூட்' வரவேற்பும் கொடுக்கப்பட்டது. இதர விமானங்களும் விரைவில் ஏர் இந்தியா சேவையில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. நீங்கள் அடிக்கடி பயணிக்க வாய்ப்பு கிடைக்க இருக்கும் இந்த விமானத்தின் சில முக்கிய சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஏர் இந்தியா வாங்கியிருக்கும் புதிய ஏர்பஸ் ஏ320 நியோ விமானத்தில் 162 இருக்கைகள் உள்ளன. இதில், 12 பிசினஸ் க்ளாஸ் இருக்கைகளும், மற்றவை சாதாரண வகுப்பு இருக்கைகளும் உள்ளன. நடுத்தர தூர வழித்தடங்களுக்கு மிகவும் ஏற்ற சிறப்பம்சங்களை இந்த விமானம் பெற்றிருக்கிறது.

ஏர்பஸ் ஏ320 வரிசையில் புதிய எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட விமானம்தான் ஏர்பஸ் ஏ320 நியோ. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் லூஃப்தான்ஸா நிறுவனம்தான் முதல் விமானத்தை பெற்று சேவைக்கு அறிமுகம் செய்தது. தற்போது வரை 5,069 ஏ320 நியோ விமானங்களுக்கு ஆர்டர் பெற்றிருக்கிறது ஏர்பஸ் நிறுவனம்.

இந்த விமானத்தின் கேபின் மிகவும் நவீனமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. விமானத்தின் உட்புறத்தில் கெட்ட வாடைகளை வெளியேற்றும் விசேஷ காற்று சுத்திகரிப்பு வசதி இருக்கிறது. இனிமையான பயணத்தை வழங்குவதற்காக மெல்லிய ஒளியை உமிழும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விமானத்தில் எஞ்சின் சப்தம் அதிகம் உட்புறத்தில் கேட்காதவாறு விசேச தடுப்பு வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பயணிகளுக்கான பகுதியில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு வசதிகளையும் தொடுதிரை மூலமாக பணியாளர்கள் கட்டுப்படுத்த முடியும். மிகச் சிறந்த குளிர்சாதன வசதியும் இந்த விமானத்தில் இருக்கிறது.

இந்த விமானத்தின் இறக்கைகள் மேல்நோக்கி மடக்கப்பட்டது போன்ற அமைப்புடன் மாற்றம் செய்யப்பட்டது. கொரியன் ஏர் நிறுவனம் இந்த விசேஷ இறக்கை அமைப்பு தொழில்நுட்பத்தை வழங்கி உள்ளது. இந்த விசேஷ வடிவமைப்பு மூலமாக 200 கிலோ எடை கூடுதலானது. ஆனால், எரிபொருள் சிக்கனம் மிக சிறப்பாக மேம்பட்டது.

சாதாரண ஏர்பஸ் ஏ320 விமானத்தைவிட இந்த நியோ மாடல் 15 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்க வல்லது. இதுவே இந்த புதிய மாடலின் மிக முக்கிய சிறப்பம்சம். இந்த புதிய விமானத்தில் பிராட் அன்ட் ஒயிட்னி நிறுவனத்தின் 1100ஜி அல்லது சிஎஃப்எம் இன்டர்நேஷனல் லீப் 1ஏ ஆகிய இரண்டு எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இந்த விமானம் மணிக்கு 828 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் பெற்றிருக்கிறது. இந்த விமானத்தில் 26,730 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் டேங்க் உள்ளது. ஒருமுறை முழுமையான எரிபொருள் நிரப்பும்பட்சத்தில், 6,500 கிமீ தூரம் வரை பயணிக்கும். எனவே, உள்நாட்டு வழித்தடங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் இந்த விமானத்தை இயக்குவதற்கு ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, கோ ஏர் மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் இந்த ஏர்பஸ் ஏ320 நியோ விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்திய விமானப் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை கொடுப்பதற்காக ஏர் இந்தியா நிறுவனமும் ஏர்பஸ் ஏ320 நியோ விமானத்தை சேவைக்கு கொண்டு வந்துள்ளது.
புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்!
அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








