இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட எச்டிடி-40 விமானத்தின் சிறப்புகள்!
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட பயிற்சி விமானம் நேற்று முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக எச்ஏஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்மூலமாக, போர் விமானங்களை ஓட்டும் பயிற்சி துறையில் இந்த உள்நாட்டு தயாரிப்பு மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விமானத்தின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

வெள்ளோட்டம் வெற்றி...
எச்ஏஎல் நிறுவனத்தின் விமான சோதனைப் பிரிவின் தலைமை விமானியும், ஓய்வு பெற்ற குரூப் கேப்டனுமான சுப்ரமணியன் இந்த விமானத்தை முதல்முறையாக இயக்கி சோதித்து பார்த்தார். அப்போது, எதிர்பார்த்தபடி, அனைத்து விதத்திலும் இந்த விமானம் சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

குறியீட்டுப் பெயர்
HTT-40 என்ற பெயரில் இந்த விமானம் குறிப்பிடப்படுகிறது. மொத்தம் 72 எச்டிடி-40 விமானங்களை பெறுவதற்கு எச்ஏஎல் நிறுவனத்திடம் இந்திய விமானப்படை ஆர்டர் கொடுத்துள்ளது.

மாற்று மாடல்
இந்திய விமானப்படையில் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த HPT-32 விமானத்திற்கு மாற்றாக இந்த புதிய பயிற்சி விமானம் சேர்க்கப்பட உள்ளது. இந்த விமானத்தை வைத்து புதிய பைலட்டுகளுக்கான அடிப்படையான விமானம் ஓட்டும் பயிற்சிகள் வழங்கப்படும்.

இருக்கை அமைப்பு
பயிற்சிக்கு ஏற்ற வகையில், முன்னும் பின்னும் இரண்டு இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், போர் விமானத்தை இயக்குவதை போன்ற அனுபவத்தை தரும் வகையில் இந்த விமானத்தின் காக்பிட் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. குளிர்சாதன வசதி கொண்டது.

எஞ்சின்
இந்த விமானத்தில் 950 எச்பி பவரை அளிக்க வல்ல டர்போட்ராப் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த விமானம் பயிற்சிக்கு மட்டுமின்றி, விமான சாகசங்கள், இரவு நேர தாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் ஈடுகொடுக்கும் திறன் கொண்டது இந்த எஞ்சின்.

அதிகபட்ச வேகம்
இந்த விமானமானது மணிக்கு 600 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 1,000 கிமீ தூரம் வரை பயணிக்கும். 6,000 மீட்டர் உயரம் வரை பறக்கும்.

விலை
ஒரு விமானத்தின் விலை ரூ.34.5 கோடி. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால், விலை குறைவானதாக இருக்கிறது. இந்த விமானத்தில் அவசர சமயத்தில் விமானிகள் வெளியேறும் எஜெக்ட் இருக்கைகளும் உள்ளன.

முக்கிய சிறப்பு
இந்த விமானத்தை பயிற்சிக்காக பயன்படுத்த தயாரிக்கப்பட்டாலும், அவசர காலத்தில் வெடிகுண்டுகள், ராக்கெட்டுகள் மற்றும் எந்திர துப்பாக்கிகளை பொருத்தி எதிரிகள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்த முடியும்.

தேவை
மொத்தமாக 106 எச்டிடி-40 பயிற்சி விமானங்களை தயாரிக்க எச்ஏஎல் இலக்கு வைத்துள்ளது. அதில், முதல்கட்டமாக 72 விமானங்கள் இந்திய விமானப்படைக்கு டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது.

ஒதுக்கப்பட்ட மாடல்
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பல குறைகள் இருப்பதாக கூறி இந்திய விமானப்படை ஒதுக்கியதுடன், வெளிநாட்டு விமானங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியது. ஆனால், மத்திய அரசின் அதிரடியால், தேஜஸ் விமானத்தில் இருக்கும் குறைகளை களைந்து பெற்றுக் கொள்ள சம்மதித்துடன், 120 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. அதேபோன்று, இந்த பயிற்சி விமானத்தையும் இந்திய விமானப்படை முதலில் ஒதுக்கிவிட்டது. கடந்த ஆண்டு மத்திய அரசு போட்ட உத்தரவில் தற்போது இந்த விமானத்திற்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் ஜேஎஃப்-17 போர் விமானம் Vs இந்தியாவின் தேஜஸ் போர் விமானம்: ஒப்பீடு


Click it and Unblock the Notifications








