மொட்டைமாடியில் ஹெலிகாப்டரை இறக்கிய ரகசியத்தை சொன்ன கடற்படை விமானி!!
கேரள மீட்புப் பணியில் துணிச்சலமாக மொட்டைமாடியில் ஹெலிகாப்டரை இறக்கி பலரையும் மீட்ட கடற்படை பைலட் அபிஜித் கருட்டிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த விஷயத்தில் பயன்படுத்தப்பட்ட யுக்தி குறித்து
கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை படகு மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மிக மோசமான நிலப்பகுதிகளில் சிக்கியிருப்போரை கடற்படை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

மிகவும் சவாலான இடங்களிலும் மீட்புப் பணிகளை அனாயசமாக செய்து வருகின்றனர். அந்த வகையில், சாலக்குடியில் மொட்டைமாடி ஒன்றில் ஹெலிகாப்டர் தாழ்வாக இறக்கப்பட்டு 26 பேரை மீட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் சிலாகித்து பேசப்பட்டு வருகிறது.
இந்த மீட்புப் பணியில் மிகவும் துணிச்சலமாக மொட்டைமாடியில் ஹெலிகாப்டரை இறக்கி பலரையும் மீட்ட கடற்படை பைலட் அபிஜித் கருட்டிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த விஷயத்தில் பயன்படுத்தப்பட்ட யுக்தி குறித்து ஹெலிகாப்டரை இயக்கிய பைலட் அபிஜித் கருட் கூறி இருக்கிறார்.

பொதுவாக கயிறு மூலமாக பலரையும் மீட்டு வந்தோம். அந்த சமயத்தில் ஒரு மொட்டைமாடியில் ஏராளமானோர் நின்று உதவி கோரியதை பார்த்து ஹெலிகாப்டரை தாழ்வாக இறக்க முடிவு செய்தோம். அப்போது கயிறு மூலமாக 4 பேர் மீட்கப்பட்டனர்.
ஆனால், கீழே நின்றிருந்தவர்களில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் இருந்ததை காண நேர்ந்தது. இதையடுத்து, அவர்களை மீட்க மொட்டைமாடி மீது ஹெலிகாப்டரை மிக தாழ்வாக இறக்கி மீட்க முடிவு செய்தேன்.

மொட்டைமாடி மீது ஹெலிகாப்டரை இறக்கும்போது அதிர்வுகள் மற்றும் ஹெலிகாப்டர் எடை காரணமாக கட்டடத்தில் பாதிப்புகள் ஏற்படவும், இடிந்துபோகவும் வாய்ப்புண்டு. இதனால், ரூஃப்டாப் லேண்டிங் முறையில் கட்டடத்தை தொடுமாறு ஹெலிகாப்டரை இறக்கினேன்.

அதாவது, ஹெலிகாப்டர் கட்டடத்தின் மீது முழுவதுமாக நிற்கவில்லை. மாறாக ஹெலிகாப்டர் மிக தாழ்வாக இறக்கப்பட்டு சக்கரங்கள் தளத்தில் பட்டும் படாமல் பறந்து கொண்டிருந்தது. இதனை லைட் ஆன் வீல்ஸ் என்று குறிப்பிடுவர்.

அப்போது கீழே இருந்த அனைவரையும் மிக விரைவாக ஹெலிகாப்டரில் ஏற்றிவிட்டோம். ஒவ்வொரையும் சில வினாடிகளில் ஹெலிகாப்டரில் ஏற்றினோம். மொத்தம் 22 பேரை வெறும் 8 நிமிடங்களில் ஏற்றிவிட்டோம்," என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாக பெரும் வணிக மையங்கள் உள்ளிட்ட இடங்களின் பெரும் கட்டடங்களின் மேல் ஹெலிபேட் அமைக்கப்பட்டு அதற்குரிய கட்டமைப்புடன் தரை இறக்கப்படும். ஆனால், மிக சிறிய பரப்பவிலான மொட்டைமாடியில் இறக்குவது அபாயகரமானது.

இந்த மீட்புப் பணியின்போது Sea King 42B என்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் 6.3 டன் எடை கொண்டது. மேலும், பைலட் மற்றும் குழுவினர், மீட்பு கருவிகள், இதர பயணிகளுடன் ஹெலிகாப்டரின் எடை 7 டன்னிற்கும் அதிகமாக இருந்துள்ளது.

இவ்வேளையில், ஹெலிகாப்டர் கட்டடத்தில் சற்று உரசினாலும் விபத்தில் சிக்கும் ஆபத்து உண்டு. ஆனால், அதனை துணிச்சலோடு பைலட் அபிஜித் கருட் மற்றும் அவருடன் பணியாற்றிய குழு செய்துள்ளது. இம்மி பிசகினாலும் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிவிடும்.

அனுபவம் வாய்ந்த பைலட்டுகளே இதுபோன்ற இடத்தில் இறங்கும் விஷப் பரீட்சைகளில் இறங்க விரும்பமாட்டார்கள். ஆனால், இதனை மிகச் சிறப்பாக கையாண்டு குறுகிய இடத்தில் ஹெலிகாப்டரை இறக்கி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் கடற்படை வீரர்கள்.

இதுகுறித்து வெளியான வீடியோவை பார்த்து பலரும் பைலட்டையும் அவருடைய குழுவினரையும் பாராட்டி வருகின்றனர். மேலும், மீட்கப்பட்ட மூதாட்டி மற்றும் பெண்களும் ஹெலிகாப்டர் பைலட் மற்றும் குழுவினருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications