அமெரிக்க ஹெலிகாப்டர்களை வைத்து சீனாவின் கண்களில் விரல் விட்டு ஆட்ட இந்தியா ரெடி!
கொரோனாவை கிளப்பிவிட்டு உலகையே அல்லாட விட்ட சீனா மீண்டும் தனது கவனத்தை இந்திய எல்லைப்பக்கம் திருப்பியிருக்கிறது. ராணுவ வீரர்களை இந்திய எல்லைக்குள் அனுப்பி, மீண்டும் அத்துமீறல்களை துவங்கி இருக்கிறது. இதற்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான முயற்சிகளிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது.

லடாக் பகுதியை கைப்பற்றுவதற்கு மிக நீண்டகாலமாக திட்டம் போட்டு வருகிறது சீனா. இதனை மனதில் வைத்துதான் மத்திய அரசு அங்கு போக்குவரத்து கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. லடாக் பிரதேசத்திற்கு சாலை மார்க்கமாக எளிதாக செல்வதற்கான கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேபோன்று, சீனா கண் வைத்துள்ள அனைத்து எல்லைப்பகுதிகளுக்கும் சாலைகளை அமைப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது சீனாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ராணுவ வீரர்களை எல்லைக்குள் அனுப்பி பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. லடாக் எல்லைப் பகுதியில் 5,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதிகாரிகள் மட்டத்திலான சமரச முயற்சிகள் ஒருபக்கம் நடந்து வந்தாலும், இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

சீனாவின் அத்துமீறல்களுக்கு முடிவுகட்டும் வகையில், சின்னூக் ஹெலிகாப்டர்களை இந்தியா களமிறக்கி உள்ளது. உலகின் மிக அதிநவீன ஹெலிகாப்டர்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர்களை வைத்து சீனாவை ஒரு கை பார்க்க இந்தியா திட்டம் போட்டுள்ளது. இந்த சின்னூக் ஹெலிகாப்டர்கள் அவ்வளவு திறன் வாய்ந்தவையா, அதன் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்பாட்டு விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

உலகின் மிகப்பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் போயிங் நிறுவனத்தின் தயாரிப்புதான் இந்த சின்னூக் ஹெலிகாப்டர்கள். போயிங் சிஎச்-47 சின்னூக் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

1962ம் ஆண்டு முதல்முறையாக அமெரிக்க ராணுவ பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. உலக அளவில் 800 ஹெலிகாப்டர்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. அமெரிக்க ராணுவத்திற்கு அடுத்து இங்கிலாந்து ராணுவத்தில்தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது உலகின் 19 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு 15 சின்னூக் ஹெலிகாப்டர்களுக்கும், 22 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கும் இந்தியா ஆர்டர் கொடுத்தது. அதில், 4 சின்னூக் ஹெலிகாப்டர்கள் கடந்த ஆண்டு இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. அவைதான் தற்போது சீனாவுக்கு எதிரான இந்தியாவின் மிக முக்கிய ஆயுதமாக மாறி இருக்கிறது.

ஆம். நீண்டு நெடிதுயர்ந்து நிற்கும் இமயமலைத்தொடருடன் கூடிய மிக கடினமான சீனாவுடனான எல்லைப்பகுதியை பாதுகாப்பது பல்வேறு சவால்களை கொடுத்து வருகிறது. இதற்கு சின்னூக் ஹெலிகாப்டர்கள் மிக இன்றியமையாத விஷயமாக இருக்கும்.

சின்னூக் ஹெலிகாப்டர்கள் அதிக பாரம் சுமக்கும் திறன் பெற்றவை. மலைப்பாங்கான இடங்களில் பயன்படுத்துவதற்கு மிகச் சிறப்பானதாக தனது வரலாற்றை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, மலைப்பாங்கான சீன எல்லைகளில் ரோந்து பணிகள் மற்றும் துருப்புகளை கொண்டு செல்வதில் சின்னூக் ஹெலிகாப்டர்கள் மிகச் சிறந்ததாக இருக்கும்.

மலைப்பாங்கான பகுதிகள் மட்டுமின்றி அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் இந்த ஹெலிகாப்டர்களை இரவு நேரத்திலும் இயக்க முடியும் என்ற மிக முக்கிய சிறப்பை கொண்டது. சின்னூக் ஹெலிகாப்டரில் 45 ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ கருவிகள் உள்ளிட்டவற்றை உள்ளேயும், கீழ் புறத்திலும் கனரக பொருட்களை சுமந்து கொண்டு பறக்கும் திறனுடைய இந்த ஹெலிகாப்டர். 10 டன் எடை முதல் 24.5 டன் எடை வரை சுமந்து செல்லும்.

ராணுவ தளவாடங்கள், வாகனங்களை கொண்டு செல்வது, வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளையும் சுமந்து செல்வதற்கும் சின்னூக் ஹெலிகாப்டர்கள் பெரும் பயனுள்ளதாக அமையும். போர் பதட்டம் அதிகரித்தால், எல்லைக்கு ராணுவ வீரர்களை எளிதாக கொண்டு செல்ல முடியும். குறிப்பாக, போர்க்களங்களுக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும், கனரக ஆயுதங்களையும் கொண்டு செல்ல முடியும்.

இந்த ஹெலிகாப்டரில் நவீன ரக கட்டுப்பாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் இயக்குவதற்கும், மலைப்பாங்கான பகுதிகளில் துல்லியமாக தரை இறக்குவதற்கும் எளிதாக இருக்கும். எதிரி நாடுகளின் ஏவுகணைகளை கண்டறிந்து, வழிமாற்றிவிடும் கருவிகளும் உண்டு.

இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 310 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் வாய்ந்தது. 300 கிமீ வேகத்தில் தொடர்ந்து இயக்க முடியும். முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 740 கிமீ தூரம் வரை பறந்து செல்லும். 20,000 அடி உயரத்தில் பறக்கும்.

இது முழுக்க முழுக்க கனரக ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் துருப்புகளை கொண்டு செல்வதற்கு மட்டுமின்றி, இதில் தாக்குதல் நடத்துவதற்கான சில ஆயுதங்களும் உள்ளன. இந்த ஹெலிகாப்டரில் எம்-134 6 பேரல்கள் கொண்ட துப்பாக்கிகளும், எம்-60 எந்திர துப்பாக்கியும் பொருத்தப்பட்டுள்ளன.

கைலாய யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக அண்மையில் சீன எல்லைக்கு புதிய சாலை திறக்கப்பட்டது. இந்த சாலை அமைப்பது கடும் சவாலாக இருந்தது. ஆனால், இந்த சின்னூக் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி, தளவாடங்களை எடுத்துச் சென்று விரைவாக அந்த சாலையை அமைத்தனர். அதேபோன்று, மீட்புப் பணிகளிலும் இந்த ஹெலிகாப்டர் சிறந்ததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








