தரமான சம்பவத்தை நிகழ்த்திய மிராஜ் 2000 போர் விமானத்தின் சிறப்புகள்!
நம் நாட்டின் எல்லையோரம் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 போர் விமானங்கள் 20 நிமிடங்களில் ஒரு தரமான சம்பவத்தை இன்று நிகழ்த்தி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த 14ந் தேதி காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் மத்திய அதிவிரைவு படையினரின் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியது. அதற்கு பழிதீர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு இந்தியரின் நெஞ்சிலும் கனலாக உழன்று கொண்டிருக்கிறது. இந்த வேளையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜேய்ஷ் இ முகம்மது அமைப்பின் தீவிரவாத முகாம்கள் மீது விமானப்படை மிக கடுமையான தாக்குதலை நடத்தி அதிரடி காட்டி இருக்கிறது.

இந்த தாக்குதலுக்கு 12 மிராஜ் 2000 போர் விமானங்களை இந்திய விமானப்படை பயன்படுத்தி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், நெடிதுயர்ந்த மலைப்பிரதேசங்களை கொண்ட வட எல்லையோர பகுதிகளில் தீவிரவாதிகள் பின்னால் ஒளிந்துகொண்டு வாலாட்டி வரும் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே மிராஜ் 2000 விமானம் மூலமாகத்தான் இந்தியா சூடு கொடுத்தது.

ஆம், கார்கில் போரின் வெற்றியில் மிராஜ் 2000 போர் விமானங்கள்தான் முக்கிய பங்கு வகித்தன. இதைத்தொடர்ந்து, தற்போது தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுப்பதற்கும் மிராஜ் 2000 விமானங்களையே இந்திய விமானப்படை பயன்படுத்தி இருக்கிறது. மிராஜ் 2000 விமானத்தின் சிறப்புகளை தொடர்ந்து காணலாம்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, ஒவ்வொரு இந்தியர் மனதையும் சற்றே ஆசுவாசப்படுத்தி இருக்கும் மிராஜ் 2000 விமானம் பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பு. மிராஜ் 2000 விமானத்தை இந்தியா வாங்குவதற்கு முக்கிய காரணமும், பாகிஸ்தான்தான்.

ஆம். 1980களில் அமெரிக்காவிடம் இருந்து எஃப்-16 போர் விமானத்தை பாகிஸ்தான் வாங்கியது. இந்த விமானங்களை எதிர்கொள்ளும் விதமாக, அதனைவிடவும் சிறந்த தயாரிப்பாக இருந்த மிராஜ் 2000 போர் விமானத்தை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்தது.

பெரும் சர்ச்சையில் இருக்கும் ரஃபேல் போர் விமானத்தை தயாரிக்கும் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் தயாரிப்புதான் இந்த மிராஜ் 2000 போர் விமானம். 1978ம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இந்த போர் விமானம், 1982ம் ஆண்டு 36 விமானங்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டு 1986ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.

மிராஜ் 2000 போர் விமானம் நான்காம் தலைமுறையை சேர்ந்தது. பன்முக பயன்பாட்டு வகையை சேர்ந்த போர் விமானம். அதாவது, எதிரிகளின் இலக்கு மீது தாக்குதல் தொடுப்பது, எதிரி விமானங்களை வழிமறித்து தாக்குதல் நடத்துவது மற்றும் வான் பகுதியை கட்டுக்குள் கொண்டு வருவது உள்ளிட்ட பல விதத்தில் பயன்படுத்த முடியும்.

கடந்த 2011ம் ஆண்டு மிராஜ் 2000 விமானங்களை நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஒவ்வொரு மிராஜ் 2000 விமானமும் 43 மில்லியன் டாலர் மதிப்பில் மேம்படுத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட மாடல் மிராஜ் 2000 -5 எம்கே-2 என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. மிராஜ் போர் விமானங்களில் இதுதான் மிகவும் நவீன ரக மாடல்.

இரவிலும் பைலட் துல்லியமாக பார்ப்பதற்கு ஏற்ற காக்பிட் கண்ணாடி அமைப்பு, நவீன நேவிகேஷன் வசதி, நம் நாட்டு விமானத்தையும், எதிரி நாட்டு விமானத்தையும் பிரித்தறிந்து தாக்குதல் நடத்துவதற்கான ஐஎஃப்எப் தொழில்நுட்பம், நவீன மல்டி லேயர் ரேடார், முற்றிலும் மின்னணு முறையில் செயல்படும் ஆயுதங்களை கட்டுப்படுத்தும் வசதிகள் என ஏராளமான நவீன வசதிகள் சேர்கக்கப்பட்டன.

இந்த மேம்பாட்டு பணிகள் பிரான்ஸ் நாட்டிலுள்ள டஸ்ஸால்ட் ஆலையில் செய்யப்பட்டன. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல்களில் ஒற்றை இருக்கை அமைப்புடைய மாடல் மிராஜ் 2000ஐ மற்றும் இரட்டை இருக்கைகள் கொண்ட பயிற்சிக்கான மாடல் மிராஜ் 2000டிஐ ஆகிய பெயர்களில் குறிப்பிடப்படுகின்றன.

இந்த விமானத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் வெடிகுண்டுகளை இரண்டு முறையில் இலக்கின் மீது குறிவைத்து தாக்குதல் நடத்த முடியும். அதாவது, சாதாரண முறையில் இலக்கை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசுவது.

மற்றொரு முறை, லேசர் வழிகாட்டு தொழில்நுட்பத்தின் மூலமாக வெடிகுண்டை இலக்கை மிக துல்லியமாக குறிவைத்து அடிப்பது. இன்று, லேசர் வழிகாட்டு முறையில்தான் இலக்கு குறிபார்த்து அடிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, தீவிரவாத முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மிராஜ் 2000 போர் விமானங்கள் 47.1 அடி நீளமும், 29 அடி அகலமும், 17 அடி உயரமும் கொண்டவை. இந்த விமானத்தின் வெற்று எடை 7,500 கிலோ எடை கொண்டது. அதிகபட்சமாக 17,000 கிலோ எடையுடன் மேல் எழும்பி பறக்கும் திறன் கொண்டது.

இந்த விமானத்தில் ஸ்நெக்மா எம்-53 பி2 டர்ஃபோஃபேன் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 64.3 கேஎன் த்ரஸ்ட் விசையை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த விமானம் மேக் 2.2 என்ற வேகத்தில் பறக்கும் வல்லமை கொண்டது.

அதாவது, அதிக உயரத்தில் பறக்கும்போது மணிக்கு 2,336 கிமீ வேகம் வரை செல்லும். குறைவான உயரத்தில் பறக்கும்போது வேகத்தில் பறக்கும். தாம்சன் சிஎஸ்எஃப்- ஆர்டிஒய் என்ற நவீன ரேடார் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த விமானத்தில் முழுமையாக எரிபொருள் நிரப்பினால் அதிகபட்சமாக 1,550 கிமீ தூரம் வரை பறந்து செல்லலும். கூடுதல் எரிபொருள் கலன் சேர்க்கும்போது, 3,325 கிமீ தூரம் வரை பறந்து செல்லும். 59,000 அடி உயரம் வரை இயக்க முடியும். வினாடிக்கு 285 மீட்டர் உயரம் வரை எழும்பும் திறனை பெற்றிருக்கிறது.

இந்த விமானத்தில் இரண்டு 30 மிமீ விட்ட குழலுடன் கூடிய துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு துப்பாக்கியும் 125 ரவுண்டுகள் சுடும் வல்லமை கொண்டது. இந்த விமானத்தில் 18 ராக்கெட் பாட் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

வானில் இருந்து வான் இலக்கை தாக்குவதற்கான 6 எம்பிடிஏ எம்ஐசிஏ ஐஆர்ஆர்எஃப் ஏவுகணைகளையும், 2 மத்ரா ஆர்550 மேஜிக் -2 ராக்கெட்டுகளும் பொருத்தப்பட்டுள்ளன. வானிலிருந்து தரை இலக்கை தாக்குவதற்கான 2 ஏஎம்.39 ரக எக்ஸோசெட் ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த விமானத்தில் எம்கே.82 என்ற சாதாரண ரக வெடிகுண்டுகளும், லேசர் வழிகாட்டு நுட்பத்தில் இலக்கை தாக்கும் ஏஎஸ்-30எல் ஏவுகணை, ஜிபியூ-12 ஏவுகணை, ஜிபியூ-16 ஏவுகணை, ஜிபியூ-24 ஏவுகணை, ஜிபியூ-49 ஏவுகணைகள் மற்றும் ஏஎஸ்எம்பி அணுகுண்டு ஆகியவை இந்த விமானங்களில் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

எல்லாம் சரி, மிராஜ் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? கானல் நீர். அதாவது, மாயத் தோற்றம் என்பது பொருளாகிறது. தூரத்தில் இருந்து பார்த்தால் இருக்கும் பொருள், அருகில் செல்லும்போது மாயமாகிவிடும். அதுபோன்றே, மிராஜ் 2000 போர் விமானமும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதலை நடத்திவிட்டு, அந்நாடு சுதாரிப்பதற்குள் திரும்பி விட்டது.
Image Source: IAF


Click it and Unblock the Notifications








