பனிமூட்டத்திலும் விமானத்தை தரையிறக்க உதவும் தொழில்நுட்பம்!
பனிமூட்டத்தின்போது விமானிகளுக்கு போதிய பார்வை கிடைக்காவிட்டாலும் விமானத்தை தரை இறக்க உதவும் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
பனிக்காலத்தில் விமானங்களை தரை இறக்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. கடும் பனிமூட்டம் நிலவும்போது பைலட்டுகளுக்கு போதிய பார்வை கிடைக்காத பட்சத்தில், விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டு விடுகின்றன. இதனால், பயணிகள் பெரும் அவதி அடைகின்றனர்.

இந்த கட்டமைப்பு வசதிகள் கொண்ட விமான நிலையம் CAT IIIB என்ற குறியீட்டில் வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. டெல்லி உள்ளிட்ட சில விமான நிலையங்கள் மட்டுமே இந்தியாவில் இந்த கட்டமைப்பு வசதியை பெற்றிருக்கிறது.

பனிமூட்டம், மழை பெய்யும் சமயங்களில் பைலட்டுகள் ஓடுபாதையை கண்ணால் பார்த்து இயக்க முடியாத சமயத்தில், CAT IIIB கட்டமைப்பு பெற்ற விமான நிலையங்களில் இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் முறை பின்பற்றப்படுகிறது.

இதற்கு விமான நிலையம், விமானத்திலும் சில சிறப்பு கருவிகள் பொருத்தப்பட வேண்டும். அதேபோன்று, பைலட்டுகளும் இந்த முறையில் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சி அவசியம்.

ஓடுபாதையில் அமைக்கப்பட்டு இருக்கும் கருவிகள் மற்றும் விமானத்தில் இருக்கும் கருவிகள் ரேடியோ சிக்னல் மூலமாக தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு எந்த இடத்தில் சரியாக இறங்க வேண்டும் என்பதை பைலட்டுகளுக்கு தெரிவிக்கும்.

இந்த கருவிகளின் உதவியுடன் ரேடியோ சமிக்ஞைகளை பைலட்டுகள் துல்லியமாக கணக்கிட்டு புரிந்து கொண்டு சரியான இடத்தில் தரை இறக்க வேண்டும். இதற்கு பைலட்டுகளுக்கு தனி பயிற்சி அவசியமாகிறது.

டெல்லி விமான நிலையம் CAT IIIB தொழில்நுட்ப வசதியை பெற்றிருந்தாலும், அங்கு பனிமூட்டம் நிலவும்போது பல விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பிவிடுவது தொடர்கதையாக உள்ளன.

ஒரு வேளை விமான நிலையத்திலும், விமானத்திலும் இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் கருவி பொருத்தி இருந்தாலும், அந்த விமானத்தை இயக்கும் பைலட்டுகளுக்கு இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் முறையில் விமானத்தை தரை இறக்குவதற்கான பயற்சி பெறாததே காரணம்.

பொதுவாக 1,200 மீட்டருக்கும் கீழ் பார்வை தூரம் குறையும்போது விசேஷ முறையில் விமானத்தை தரை இறக்குவதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படும்.

அதுவும் மூன்று வகையாக இவை பிரிக்கப்பட்டுள்ளன. அதில், 50 மீட்டருக்கும் கீழாக பார்வை தூரம் குறையும்போதுதான் CAT IIIB என்ற மிக சிறப்பான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விமானம் தரை இறக்கப்படும்.

இந்த முறையில் ஸீரோ விசிபிளிட்டி, அதாவது பைலட்டுகளுக்கு ஓடுபாதை கண்களுக்கு தெரியாவிட்டால் கூட கருவிகளின் உதவியுடன் விமானத்தை தரை இறக்க முடியும். இது மிகச் சிறப்பான தொழில்நுட்பமாக இருந்தாலும், நடைமுறையில் விமான போக்குவரத்து பெரும் பாதிப்பு அடைவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

இந்த முறையில் விமானத்தை தரை இறக்குவதற்கான பயிற்சியை பெறுவதற்கு பைலட்டுகளும், விமான நிறுவனங்களும் போதிய ஆர்வம் காட்டாமல் இருந்து வருவதாக விமான நிலைய ஆணையம் குற்றம் சாட்டுகிறது.

ஏனெனில், CAT IIIB கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு ரூ.10 கோடி செலவாகும் என்பதுடன் மாதத்திற்கு பராமரிப்பு செலவீனமாக ரூ.50 லட்சம் வரை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உள்ளிட்ட 13 முக்கிய விமான நிலையங்கள் இந்த வசதியை பெறும் பட்டியலில் இருக்கின்றன.

விமானிகள் பயிற்சி பெற்றிருப்பதுடன், நாட்டிலுள்ள அனைத்து முக்கிய விமான நிலையங்களும் CAT IIIB கட்டமைப்பை பெற்றிருந்தால் மட்டுமே, சீரான போக்குவரத்துக்கு வழி வகுக்கும்.

எனவே, டெல்லி உள்ளிட்ட பனி மூட்ட பாதிப்பு உள்ள நகரங்களுக்கு வரும் விமானங்களை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதித்தால் இந்த பிரச்னை ஓரளவு குறையும் என்பது அதிகாரிகளின் தரப்பு விளக்கமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications