பிரதமரான பின்பு மாதத் தவணையில் கார் வாங்கிய உத்தம அரசியல் தலைவரின் கதை
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கடனில் கார் வாங்கிய சுவாரஸ்ய விஷயங்களின் தொகுப்பை இந்த செய்தியில் படிக்கலாம்.
பெரும் அரசியல் பொறுப்புகளில் பதவி வாய்ப்பு இருப்பதாக தெரிந்தாலே, நம் அரசியல்வாதிகள் என்னென்ன செய்வார்கள் என்பது தெரிந்த விஷயம். இப்போது ஐனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பெரும் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு பல கோடி மதிப்புடைய கார்களும், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பை தாண்டிய சொகுசு விமானங்களும் பயன்பாட்டில் உள்ளன.

ஆனால், காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களை போன்றே, மிக எளிமையான நேர்மையான தேசிய அரசியல் தலைவர்களில் ஒருவராக வாழ்ந்து மறைந்தவர் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. அவர் பிரதமராக இருந்தபோதும் நேர்மையை கடைபிடித்தவர்.

பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மறைவிற்கு பின்னர் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட லால் பகதூர் சாஸ்திரி இளம் வயதிலேயே தந்தையை இழந்து பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும், இறுதி மூச்சு உள்ளவரை நேர்மையான தலைவராக நாட்டிற்கே முன்மாதிரியாக இருந்தார். அவர் மட்டுமல்ல, அவரது குடும்பத்திற்கும் அந்த நேர்மையை விதைத்து சென்றார்.

நாட்டின் இரண்டாவது பிரதமராக பதவி ஏற்ற பின்னர் வீட்டில் உள்ளவர்கள் சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்று விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதனை கேட்ட லால் பகதூர் சாஸ்திரி நீண்ட யோசனைக்கு பின்னர் ஒப்புக் கொண்டார்.

பின்னர் ஃபியட் கார் ஒன்றை தேர்வு செய்து வாங்க முடிவு செய்துள்ளனர். அப்போது அந்த காரின் மதிப்பு ரூ.12,000. ஆனால், பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் கையிருப்பில் இருந்ததோ ரூ.7,000. இதனால் சாஸ்திரி குழப்பமான மனநிலையில் இருந்தார்.

லால் பகதூர் சாஸ்திரி பணம் இல்லாமல் கார் வாங்குவது குறித்து திட்டமிட்டு தவிப்பதை பார்த்த மனைவியும், பிள்ளைகளும் கார் வேண்டாம் என்று தெரிவித்தனர். ஆனால், பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற சாஸ்திரி முடிவு செய்தார்.

ஒருவழியாக குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்ற, கடன் வாங்கி கார் வாங்க முடிவு செய்தார். இதற்காக, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.5,000 கடன் பெற்ற கார் வாங்கினார்.

இந்த சூழலில்தான் லால் பகதூர் சாஸ்திரி பாகிஸ்தானுடன் சமரசம் செய்வதற்காக ரஷ்யா நடத்திய தாஷ்கண்ட் கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தபோது மர்மமான முறையில் மரணமடைந்தார்.

பிரதமராக இருந்தாலும் லால் பகதூர் சாஸ்திரியிடம் பெரிய அளவிலான பொருளாதாரம் இல்லை என்பதால், கார் கடனை அடைப்பதற்கு போதிய வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்திற்கு பின் பிரதமராக பொறுப்பேற்ற இந்திரா காந்தி அந்த கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

ஆனால், லால் பகதூர் சாஸ்திரி தான் மட்டுமில்லாமல், தன் குடும்பத்தினரிடமும் நேர்மையை விதைத்துச் சென்றார். இதனால், இந்திரா காந்தி கொடுத்த கார் கடன் தள்ளுபடி அறிவிப்பை சாஸ்திரி மனைவி லலிதா ஏற்க மறுத்தார்.

பின்னர், தனது ஓய்வூதியத்தில் இருந்து அந்த காருக்கான மாதத் தவணையை கட்டி முடித்தார். சாஸ்திரி இறந்த பின் 4 ஆண்டுகள் கழித்துத்தான் அந்த கார் கடன் கட்டி முடிக்கப்பட்டது.

DLE 6 என்ற பதிவு எண் கொண்ட அந்த ஃபியட் கார் தற்போது டெல்லியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நினைவகத்தில் காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

பதவி வந்தார் கார், பங்களா வாங்கிவிடலாம் என்ற ஆசையில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், கார் கடன் வாங்கி கட்டாமல் இழுத்தடிக்கும் புண்ணியவான்களுக்கும் இந்த செய்தி சமர்ப்பணம்!Picture credit: Wiki Commons
சர்வாதிகாரிகள் பயன்படுத்திய சொகுசு கார்கள்!

சாஸ்திரி போன்ற நேர்மையான தலைவர்களுக்கு மட்டுமல்ல, கார் என்பது கடுகடுப்பாக இருந்த சர்வாதிகாரிகளுக்கும் விருப்பமான விஷயமாகவே இருந்துள்ளது. ஹிட்லர் முதல் கடாஃபி வரையிலான சர்வாதிகாரிகள் கார் காதலர்களாகவே இருந்துள்ளனர். அதுபற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

அடால்ஃப் ஹிட்லர்
பேரை கேட்டாலே சும்மா அதிருதில்ல வசனத்துக்கு சொந்தக்காரரான ஹிட்லர் பென்ஸ் கார் பிரியர். அவரது வாழ்நாளில் மொத்தம் 9 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை வைத்திருக்கிறார்.

ஹிட்லரின் செல்லப்பிள்ளை
அணிவகுப்புகளின்போது பெரும்பாலும் 1939 மாடல் பென்ஸ் 770கே காரைத்தான் ஹிட்லர் பயன்படுத்துவது வழக்கம். ஃபோக்ஸ்வேகன் மற்றும் அந்த நிறுவனத்தின் பீட்டில் கார் பிரபலமாவதற்கும் முக்கிய காரணகர்த்தா ஹிட்லர் என்பதும் கூடுதல் தகவல்.

பெனிட்டோ முசோலினி
இத்தாலிய சர்வாதிகாரியாக கொடி கட்டி பறந்த முசோலினி ஆல்ஃபா ரோமியோ பிராண்டின் அதிதீவிர ரசிகர். 1937ம் ஆண்டு 2300எம்எம் ஆல்ஃபா ரோமியோ கார் மாடல் அவர் பயன்படுத்தியிருக்கிறார். இந்த கார் இ-பே ஆன்லைன் ஏல நிறுவனம் மூலம் 1,20,000 டாலருக்கு ஏலம் போனது.

முசோலினியின் கார்
படத்தில் காணும் 1939ம் ஆண்டு மாடல் லான்சியா ஆஸ்ட்ரா காரைத்தான் அணிவகுப்புகளின்போது முசோலினி பயன்படுத்தியிருக்கிறார்.

விளாடிமிர் லெனின்
சோவியத் யூனியனின் முதல் தலைவரான லெனின் ரோல்ஸ்ராய்ஸ் பிரியர். தனது வாழ்நாளில் ஒரு டஜனுக்கும் அதிகமான ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வைத்திருந்தார். அதில், ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் கோஸ்ட் லெனினை மிகவும் கவர்ந்த கார். மேலும், அந்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு தக்கவாறு சில விஷேச அம்சங்களுடன் அந்த காரை கஸ்டமைஸ் செய்து வைத்திருந்தார்.

லெனின் காரின் விசேஷம்
சோவியத் யூனியனில் கடும் குளிர்காலங்களில் ஆல்கஹாலை போட்டு காரை ஓட்டுவாராம். ஏனெனில், கடும் குளிர்காலங்களில் பெட்ரோலைவிட ஆல்கஹாலில் கார் எஞ்சின் சிறப்பாக இயங்கும். இதேபோன்று, பனிக்காலங்களில் சாலைகளில் பனிக்கட்டிகள் படர்ந்திருக்கும் சமயங்களில் செல்வதற்கு ஏதுவாக காரின் பக்கவாட்டுப் பகுதியில் கேட்டர்பில்லர் டிராக்ஸ் எந்திரத்தை பொருத்தியிருந்தார்.

ஜோஸப் ஸ்டாலின்
ஸ்டாலினிடம் ஏராளமான கார்கள் இருந்துள்ளன. அமெரிக்க பிராண்டுகளான பேக்கார்டு, கேடில்லாக் கார்களை வைத்திருந்துள்ளார். இவருக்கு 1937ம் ஆண்டு மாடல் பேக்கார்டு வி12 காரை அமெரிக்க அதிபர் ஃப்ராங்களின் எஸ் ரூஸ்வெல்ட் பரிசாக கொடுத்துள்ளார். படத்தில் பேக்கார்டு அடிப்படையில் சோவியத் யூனியனில் வடிவமைக்கப்பட்ட 1942 பேக்கார்டு சூப்பர் எயின் காரை பார்க்கிறீர்கள்.

இடி அமீன்
உகாண்டா நாட்டின் சர்வாதிகாரியான இடி அமீன் ஆயிரக்கணக்கான கார்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை அந்நாட்டில் இருந்து வெளியேறிய இந்திய வம்சாவளியினர் விட்டுச் சென்ற கார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இடி அமீனுக்கு பென்ஸ் புல்மேன் கார் மீதுதான் கொள்ளை பிரியமாம். படத்தில் அவர் பயன்படுத்திய புல்மேன் காரை காணலாம்.

இடி அமீன் ஜீப்
அணிவகுப்புக்கு பெரும்பாலும் ஜீப்பில் செல்வதை இடி அமீன் வழக்கமாக கொண்டிருந்தார்.

சதாம் உசேன்
ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேனிடம் ஏராளமான சொகுசு கார்கள் இருந்துள்ளன. 60 க்கும் மேற்பட்ட கார்களை அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் பெரும்பாலானவை போரினால் சேதமடைந்துவிட்டதாம்.

சதாம் உசேன் கார்
தனி பயன்பாட்டுக்கு தவிர கார் கலெக்ஷனிலும் சதாமுக்கு ஆர்வம் இருந்துள்ளது. வின்டேஜ் கார்கள், சொகுசு கார்கள் என சேகரித்துள்ளார். போரின்போது இவை அனைத்தும் பாதாள பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்ததாம்.

அல் கடாஃபி
சமீபத்தில் மரணமடைந்த லிபிய சர்வாதிகாரி அல் கடாஃபியும் சொகுசு கார்கள் மீது ஆர்வம் கொண்டவர்தான். ஆனால், கார்கள் மீதான அவரது டேஸ்ட் மிக மோசமானது என அவருடன் இருந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், அதில் ஒன்று மட்டும் விதிவிலக்காக லிபியன் ராக்கெட் எனப் பெயர் கொண்ட கார் சிறப்பான டிசைன் கொண்டதாக இருந்துள்ளது. இதை அவர் மிகவும் நேசித்தாராம்.

என்னதான் அதிகாரம், அடக்குமுறை, பந்தா, படாடோபமாக வாழ்ந்தாலும் பெரும்பாலான சர்வாதிகளின் முடிவுரை கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்ற பழமொழிக்கு ஏற்பவே மிக மோசமானதாக முற்று பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








