செப்டம்பரில் அறிமுகமாகிறது 'மேட் இன் இந்தியா' அதிவேக ரயில்!!
முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய அதிவேக ரயில் வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ட்ரெயின் 18 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த அதிவேக ரயில் சென்னை பெ
முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய அதிவேக ரயில் வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சென்னையில் தயாரிக்கப்படும் இந்த ரயிலின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் புல்லட் ரயில் கனவு இன்னும் ஊசலாடி வரும் நிலையில், ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ரயில்வேத் துறை ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், தனி எஞ்சின் இல்லாமல் இயங்கக்கூடிய அதிவேக ரயிலை இந்திய ரயில்வேத் துறை சொந்தமாக தயாரித்துள்ளது.

ட்ரெயின் 18 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த அதிவேக ரயில் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்படுகிறது. இது 100 சதவீதம் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் முதல் அதிவேக ரயில் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ரயில் அதிகபட்சமாக 160 கிமீ வேகம் வரை இயக்க முடியும். இந்த ரயிலில் தனியாக எஞ்சின் இணைக்கப்பட்டிருக்காது. புல்லட் ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்கள் போல ரயில் பெட்டிகளிலேயே மின் மோட்டார்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதைவிட இந்த ரயில் பாதி விலையில் இந்தியாவில் தயாரிக்கப்படுவதாக சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதல் ட்ரெயின் 18 ரயிலில் 16 சேர்கார் ரயில் பெட்டிகள் கொண்டதாக இருக்கும்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியுடன் இந்த ரயில்கள் கட்டமைக்கப்படுகின்றன. புல்லட் ரயில்கள் போல, இந்த தடுப்பு இல்லாத நீண்ட கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டு இருக்கும். உட்புறம் மிக அழகிய வேலைப்பாடுகள் மற்றும் வண்ண விளக்குகளுடன் கட்டமைக்கப்படுகிறது.

இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும் 2 எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் ரயில் பெட்டியில் தலா 56 இருக்கைகளும், நான் எக்ஸிகியூட்டிவ் பெட்டிகளில் தலா 78 இருக்கைகளும் இருக்கும். சதாப்தி ரயில்களுக்கு மாற்றாக இந்த புதிய அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த ட்ரெயின் 18 ரயிலில் வைஃபை வசதியும், பொழுதுபோக்குக்காக டிவி திரைகளும் கொடுக்கப்பட்டு இருக்கும். ஜிபிஎஸ் துணையுடன் இயங்கும் நிகழ்நேர அறிவிப்பு வசதிகளும் இந்த ரயிலில் இடம்பெற இருக்கிறது.

மெட்ரோ ரயில்கள் போலவே இந்த அதிவேக ரயிலில் ஆட்டோமேட்டிக் கதவுகள் பொருத்தப்பட்டிருக்கும். ரயில் நின்றவுடன் ரயிலில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக இறங்குவதற்காக நடைமேடையுடன் இணைக்கும் விதத்தில், ஸ்லைடிங் படி அமைப்பு ஒன்றும் வெளிவரும். வீல் சேர் வைப்பதற்கான இடவசதியும் இருக்கும்.

ஒரு பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்கு எளிதாக செல்லும் விதத்தில், அகலமான பாதையுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கும். உயர்தர தளம் மற்றும் இருக்கைகள் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை தரும்.

இந்த ரயிலில் பயணிகளின் உடைமைகளை வைப்பதற்கான இடவசதியும் சிறப்பாக இருக்கும். அதிநவீன பயோ- டாய்லெட் பொருத்தப்பட்டு இருக்கும். உயர்தர பாகங்களுடன் மிக சுகாதாரமான உணர்வை அளிக்கும் விதத்தில், கழிவறை அமைப்பு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயிலில் அதிர்வுகளும் மிக குறைவாக இருக்கும் விதத்தில், பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ரயில் பெட்டிகளிலேயே மின் மோட்டார்கள் கொடுக்கப்பட்டு இருப்பதால், சிறப்பான செயல்திறனையும், விரைவாக வேகத்தை எட்டும் நுட்பத்தையும் பெற்றிருக்கிறது.

முதல்கட்டமாக இந்த ரயிலை மணிக்கு 180 கிமீ வேகம் வரை இயக்கி சோதனை ஓட்டம் நடத்த ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது. சோதனை ஓட்டங்கள் வெற்றி பெற்றவுடன் முக்கிய வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்படும். இந்த ரயில் சராசரியாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








