பிரதமர் மோடி பயன்பாட்டிற்காக வரும் புதிய போயிங் 777 விமானத்தின் சிறப்பம்சங்கள்!
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபி.,களின் பயன்பாட்டிற்காக இரண்டு புதிய போயிங் 777 விமானங்களை ஏர் இந்தியா வாங்க இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
Recommended Video

ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பயன்பாட்டிற்காக இரண்டு புதிய போயிங் 777 விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. வரும் 26ந் தேதி குடியரசு தினத்தன்று இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் இந்த பிரம்மாண்ட விமானங்களின் சிறப்பம்சங்களை காணலாம்.

நாட்டின் உயர் பொறுப்பில் இருக்கும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பயன்பாட்டிற்காக விசேஷ அம்சங்கள் கொண்ட விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏர் இந்தியா ஒன் என்ற குறியீட்டுப் பெயரில் இயக்கப்படும் இந்த விமானங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏர் இந்தியா நிறுவனம் பராமரித்து வருகிறது.

தற்போது ஜனாதிபதி, பிரதமர் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்வதற்காக போயிங் 747- 200 என்ற இரண்டடுக்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 25 ஆண்டுகள் பழமையான இந்த விமானங்களில் பல்வேறு வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில், விவிஐபிகளின் பாதுகாப்பு கருதி, நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, பல ஆண்டுகளுக்கு முன் ஆர்டர் செய்யப்பட்ட இரண்டு புதிய போயிங் 777-300ER விமானங்கள் டெலிவிரிக்கு தயார் நிலையில் உள்ளன.

சாதாரண வர்த்தக பயன்பாடுகளில் இருக்கும் போயிங் 777-300ER விமானத்தில் 368 பேர் வரை செல்வதற்கான இருக்கை வசதியுடன் கிடைக்கிறது. ஆனால், இந்த விமானம் விவிஐபி பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு உட்புறத்தில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட இருக்கின்றன.

படுக்கை வசதி, ஆலோசனை நடத்துவதற்கான அரங்கம், உயர் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதி, சமையல் கூடம், மருத்துவ பணியாளர்கள் மற்றும் சிறிய அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

பாதுகாப்பு குழுவினருக்கான இடவசதி, சேட்டிலைட் போன் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு வசதிகளுடன் இந்த விமானம் கஸ்டமைஸ் செய்யப்பட இருக்கிறது. அடுத்த 6 மாதங்களில் கஸ்டமைஸ் பணிகள் முடிவடைந்து மீண்டும் இந்தியாவுக்கு வரும். வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும்.

இந்த ரக விமானங்கள் மிக நீண்ட தூரம் இடைநில்லாமல் பயணிக்கும் வல்லமை வாய்ந்தது. அதிகபட்சமாக 13,650 கிமீ தூரம் வரை எங்குமே நிற்காமல் செல்லும் திறன் படைத்தது.

எனவே, வெளிநாடு பயணங்களின்போது எரிபொருளுக்காக இடையில் நிறுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

ஃப்ளை பை ஒயர் என்ற மிக நவீன மின்னணு கட்டுப்பாட்டு அமைப்புடன் வந்த முதல் வர்த்தக ரீதியிலான பயணிகள் விமானம் என்ற பெருமை இந்த விமானத்திற்கு உண்டு. இதனால், விமானத்தை சிக்கல் இல்லாமல் எளிமையாக இயக்குவதற்கான வசதியை பைலட்டுகள் பெற்றனர்.

ப்ளை பை ஒயர் நுட்பம் விமானம் அதிவேகத்த்தில் பறப்பதை தவிர்க்கவும், திரும்பும்போது ஏற்படும் அபாயங்களை தவிர்க்கவும் உதவுகிறது. இந்த விமானத்தின் விசேஷ வடிவமைப்பு மூலமாக அதிகபட்சமாக மேக் 0.84 என்ற வேகம் வரை தொடக்கூடிய திறனை பெற்றிருக்கிறது.

இந்த விமானம் மணிக்கு 945 கிமீ வேகம் வரை பயணிக்கும். மணிக்கு 892 கிமீ என்ற சராசரி வேகத்தில் இயக்க முடியும். இரண்டு பைலட்டுகளை கொண்டு இந்த விமான மாடலை இயக்க முடியும்.

பொதுவாக விவிஐபி.,களின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்காக 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விமானங்கள்தான் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த விமானம் இரண்டு எஞ்சின்கள் கொண்டவை. ஆனால், நீண்ட தூர வழித்தடங்களில் மிக அதிக அளவில் இயக்கப்படுவதுடன், மிகவும் நம்பகமான விமான மாடலாகவும் இருப்பதால் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானம் வணிக ரீதியில் 15,844 கிமீ தூரம் பறக்கும் திறன் கொண்டதாக போயிங் நிறுவனம் தெரிவிக்கிறது. சிங்கப்பூரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல நீண்ட தொலைவு வழித்தடங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது இந்த விமானம்தான்.

குடியரசு தினத்தன்று இந்த விமானங்கள் இந்தியா வந்தாலும், உட்புறத்தில் கஸ்டமைஸ் செய்வதற்காக அமெரிக்கா செல்ல இருக்கின்றன. மீண்டும் ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த இரண்டு விமானங்களும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்காக முறைப்படி இந்த விமானங்கள் பயன்பாட்டிற்கு வரும். அதுவரை தற்போதுள்ள போயிங் 747-200 விமானம்தான் பயன்படுத்தப்படும்.

2006ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் போயிங் நிறுவனத்திடம் 68 விமானங்களுக்கு ஆர்டர் செய்தது. அதில், 27 போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள், 15 போயிங்-300இஆர், 8 போயிங் 777-200எல்ஆர் மற்றும் 18 போயிங் 737-800 ரக விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டன.

அதில், இரண்டு போயிங் 777-300இஆர் விமானங்கள்தான் தற்போது ஜனாதிபதி, பிரதமர் பயன்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றன. அனைத்து விமானங்களையும் குறுகிய கால கடன் திட்டத்தில் வாங்குவதற்காக ஃபர்ஸ்ட் அபுதாபி வங்கி, ஸ்டான்டர்டு சாட்டர்டு மற்றும் மஸ்ரெக் வங்கிகளுடன் ஏர் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த இரண்டு புதிய விமானங்களையும் டெலிவிரி எடுத்து வருவதற்காக மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 4 பைலட்டுகள் அடங்கிய குழு வரும் 20ந் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்ல இருக்கிறது.

வரும் 24ந் தேதி அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இரண்டு புதிய போயிங் 777 விமானங்களையும் டெலிவிரி பெற்று இந்தியா திரும்ப இருக்கின்றனர். குடியரசு தினத்தன்று இந்த இரண்டு புதிய விமானங்களும் இந்தியா வர இருக்கின்றன.

நஷ்ட கணக்கில் ஓடும் ஏர் இந்தியாவை தனியாரிடம் தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பிரதமர் பயன்பாட்டிற்கான விமானங்களை ஏர் இந்தியா வாங்குவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








