சீன எல்லைக்கு புதிய சாலை திறப்பு... பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்தில் கிடைத்த பரிசு!
கைலாய யாத்திரை பயணத்தை மிக எளிதாக்கும் வகையில் சீன எல்லைக்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. கைலாய யாத்திரைக்கு மட்டுமில்லாமல், இந்த சாலை இந்தியாவின் பாதுகாப்பிலும், ராணுவ நகர்விலும் முக்கிய பங்காற்றும். இந்த புதிய சாலையின் சிறப்பம்சங்கள், முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

எல்லையில் சீனா அவ்வப்போது வாலாட்டி வருவது வழக்கமாகி விட்டது. இந்திய எல்லைக்குகள் சீன ராணுவம் அத்துமீறும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறின. இதனால், எல்லையோர பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தவும், எதிர்காலத்தில் போர் என்று வந்தால், படைகளை எல்லைக்கு விரைவாக கொண்டு செல்வதற்கும் எல்லைப்புற சாலை திட்டங்களை பிரதமர் மோடி தீவிரப்படுத்தினார்.

இதனால், சீன எல்லையை தொடுவதற்கு பல நாட்கள் சுற்றி வேண்டி இடங்களை சில மணிநேரங்களில் செல்வதற்கும், அதனை ராணுவ போக்குவரத்து பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இவ்வாறு கட்டப்பட்ட மிக நீளமான பாலங்கள் மற்றும் சாலைகள் தொடர்ந்து திறக்கப்ப்டடு வருகின்றன.

இந்த நிலையில், தற்போது சீன எல்லையை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையானது பல்வேறு வகையில் இந்தியாவிற்கு நன்மை பயப்பதாக அமைந்துள்ளது. சீன எல்லைக்குள் அமைந்துள்ள கைலாய மலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக இந்த சாலை பெரும் பயனுள்ளதாாக அமையும்.

அத்துடன், எல்லை கண்காணிப்பு மற்றும் போர் உள்ளிட்ட அவசர காலத்தில் இந்த சாலை ராணுவ பயன்பாட்டிற்கு மிகவும் உதவிகரமாக அமையும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் கருதுகின்றன. சிக்கிம் அல்லது நேபாளம் வழியாக சீனாவில் உள்ள கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான வழித்தடங்கள் உயரமான மலைத்தொடர்களை கொண்டதாகவும், யாத்ரீகர்களுக்கு மிகவும் ஆபத்தானதாகவும் இருந்தது.

தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தர்ச்சுலா என்ற இடத்திலிருந்து சீன எல்லையில் உள்ள லிப்பு லேக் பாஸ் வரையில் 80 கிமீ தூரம் இந்த புதிய இணைப்புச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை கடந்த வெள்ளிக்கிழமை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.

கைலாஷ்- மானசரோவர் புனித யாத்திரையை இந்துக்கள், புத்த மதத்தினர் மற்றும் ஜைனர்கள் ஆண்டுதோறும் மேற்கொள்கின்றனர். சிக்கிம் அல்லது நேபாளம் வழியாக செல்லும் இரண்டு வழித்தடங்கள் மிகவும் உயரமான மலைகளை கடந்து ஆபத்தான பயணத்தையும், 2 முதல் 3 வாரங்கள் பிடித்தது. இந்த வழித்தடங்களில் வயதான பக்தர்கள் செல்வதும் கடினமாக இருந்தது.

ஆனால், புதிய பாதையானது இந்த சிரமத்தை குறைக்கும் வகையில் உள்ளது. இந்த சாலை 6,000 அடி உயரத்தில் இருந்து 17,000 அடி உயரத்தில் உள்ள லிப்பு லேக் வரை 80 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சாலையை அமைக்கும்போது எல்லைப்புற சாலைகள் நிறுவனம் (BRO) பல்வேறு சவால்களை முறியடித்து சாதித்துள்ளது. பிஆர்ஓ அமைப்பிற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்ட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

மிக மோசமான தட்பவெப்பம், செங்குத்தான மலைகள், கடினமான பாறைகளை கடந்து இந்த சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாலை கட்டுமானம் எக்கச்சக்க சவால்கள் இருந்ததால், தளவாடங்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டன. ஏற்கனவே, கைலாஷ் - மானசரோவர் செல்லும் பக்தர்கள் 20 சதவீதம் இந்திய நிலபரப்பிலும், 80 சதவீதம் சீன நிலப்பிலும் செல்லும் நிலை இருந்தது. தற்போது இது தலைகீழாக மாறி, 80 சதவீதம் இந்திய நிலப்பரப்பிலும், 20 சதவீதம் சீன நிலப்பரப்பிலும் செல்லும் வகையில் அமைந்துள்ளது.

இந்த சாலையின் மூலமாக கைலாஷ் - மானசரோவர் புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பெரும் நன்மை கிட்டும். விரைவான பயணம் மற்றும் குறைவான போக்குவரத்து செலவுடன் அவர்களது புனித பயணத்தை ஒரு வாரத்திற்குள்ளாகவே நிறைவு செய்ய முடியும். எனினும், இந்த புதிய இணைப்புச் சாலையில் 75 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் செல்லலாம். கடைசி 5 கிமீ தூரத்திற்கான பணிகள் இன்னும் நிறைவுபெறவில்லை. இதனை நடைபயணமாக கடந்துவிடலாம். ஏற்கனவே, இந்த 80 கிமீ தூர சாலையை நடைபயணமாக பக்தர்கள் கடந்தனர். இதற்கு 5 நாட்கள் பிடித்தது.

இந்த புதிய சாலையின் மூலமாக, இந்த வழித்டத்தில் உள்ள உள்ளூர் கிராம மக்கள், குளிர்காலத்தில் விரைவாக இடம் பெயர்ந்து செல்வதற்கான வாய்ப்பும் கிட்டும். அங்குள்ள கிராம பொருளாதாரம் மேம்படுவதற்கும் உதவும். இதனிடையே, லிப்பு லேக் வழியாக இந்தியா - சீனா இடையே வர்த்தகம் செய்வதற்கான உடன்படிக்கையும் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், இரு நாட்டிற்கு பொருளாதார ரீதியில் இந்த சாலை மிக முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, சீனாவுடன் வர்த்தகம் செய்து கொள்வதாக கூறி, ராணுவ பயன்பாட்டு நோக்கில் இந்த சாலையை மத்திய அரசு அமைத்துள்ளது.
Image Courtesy: micknik/Wiki Commons

இது வர்த்தக உடன்படிக்கை, புனித யாத்திரை மூலமாக இரு நாடுகளுக்கு வர்த்தக வாய்ப்பை அளிக்கும் என்று தெரிவித்து இந்த சாலை திட்டத்தை சீனா எதிர்க்காதவாறு இந்தியா பார்த்துக் கொண்டது. இதனால், இது ராஜதந்திர ரீதியில் இந்தியாவிற்கு பெரும் பலன் அளிக்கும். இந்தியா- சீனா என இருநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்த உதவினாலும், இது இந்தியாவுக்கு அதிக சாதக அம்சங்களை கொண்டுள்ளது. அதாவது, ராணுவ ரீதியில் பிரதமர் மோடியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பரிசாகவே இது பார்க்கப்படுகிறது. ஒரே கல்லில் பல மாங்காய்களை இந்தியா அடித்துள்ளது.

இந்த சாலை சீன எல்லையோர பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு இந்தியாவிற்கு வாய்ப்பாகவும் கருதப்படுகிறது. ராணுவ தளவாடங்கள், துருப்புகளை எளிதாக சீன எல்லைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பையும் இந்த சாலை வழங்கும்.

லிப்பு லேக் பாஸ் பகுதியானது இந்தியா- சீனா- நேபாளம் ஆகிய மூன்று நாடுகளின் எல்லை சந்திப்புப் புள்ளியாகவும் இருக்கிறது. இதனிடையே, இந்த புதிய சாலை தங்கள் நாட்டு எல்லைக்குள் செல்வதாக நேபாள அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

ஆனால், இதனை இந்தியா நிராகரித்துள்ளது. ஏற்கனவே யாத்ரீகர்கள் நடைவழியாக பயன்படுத்திய இந்த வழித்தடத்தை தற்போது மேம்படுத்தி உள்ளதாகவும், இதற்கான வரலாற்று ஆவணங்களின் அடிப்படையிலேயே செய்துள்ளதாகவும் இந்தியா விளக்கம் கொடுத்துள்ளது.

சிக்கிம் வழியாக செல்லும் வழித்தடம் 2,780 கிமீ தூரத்திற்கு பயணிக்க வேண்டும். இதில், டெல்லியிலிருந்து விமானம் 1,115 கிமீ தூரம் விமான பயணம், பின்னர் 1,665 கிமீ தூரத்திற்கு சாலை மார்க்கமாக செல்ல வேண்டும். நேபாளம் வழியாக செல்வதற்கு 1,940 கிமீ தூரம் பயணிக்க வேண்டும்.
Image Courtesy: micknik/Wiki Commons

ஆனால், தற்போது டெல்லியிலிருந்து சாலை மார்க்கமாக லிப்புலேக் பகுதியை இரண்டு நாட்களில் அடைந்துவிடலாம். விமானம் அல்லது ஹெலிகாப்டர் பயணம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது திறக்கப்பட்டுள்ள பாதையில் லிபுலேக் வரையில் 5 கிமீ தூரத்திற்கான பணிகள் நிறைவு பெற்றால், சீன எல்லைக்குள் 5 கிமீ நடந்து சென்று அங்கிருந்து வாகனங்கள் மற்றும் புனித யாத்திரை மூலமாக கைலாய மலையை அடையலாம்.


Click it and Unblock the Notifications








