விரைவில் வரும் கோவை - பெங்களூர் டபுள்-டெக்கர் ரயிலின் சிறப்பம்சங்கள்!
பெங்களூர் - கோவை இடையே துவங்கப்பட இருக்கும் புதிய டபுள்டெக்கர் ரயிலின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
கோவையிலிருந்து பெங்களூருக்கு விரைவில் டபுள் டெக்கர் ரயில் சேவை துவங்கப்பட இருக்கிறது. இந்த ரயில் குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களையும், இந்த ரயிலின் சிறப்பம்சங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

கோவை - பெங்களூர் இடையிலான உதய் எக்ஸ்பிரஸ் இரண்டடுக்கு ரயில் பெட்டிகள் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டது. வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த ரயில் பயணிகள் சேவைக்கு வர இருக்கிறது.

முதல்முறையாக உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் தானியங்கி உணவு வழங்கும் எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மொத்தமுள்ள 14 பெட்டிகளில் 8 பெட்டிகள் உணவு எந்திரம் பொருத்தப்பட்டு இருக்கும். இதில், சமைக்கப்பட்ட அல்லது சூடுபடுத்தியவுடன் சாப்பிடும் வகையிலான உணவுகள் வைக்கப்பட்டு இருக்கும்.

அனைத்து ரயில் பெட்டிகளிலும் காபி மற்றும் தேனீர் வழங்கும் தானியங்கி எந்திரங்கள் மற்றும் ரயிலின் நடுவில் சாப்பிடுவதற்கான தனி இடவசதி உள்ளிட்டவை இந்த ரயிலின் மிக முக்கிய வசதிகள்.

இருக்கைகள் அமர்ந்து செல்வதற்கு வசதியாகவும் கால்கள் வைப்பதற்கு போதிய இடவசதியுடனும் இருக்கும். இருக்கைகளை சாய்த்துக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ரயிலில் எல்சிடி திரைகள், வைஃபை இணைப்பு வசதி கொண்ட ஹெட்போன்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். செயற்கைகோள் இணைப்பில் இயங்கும் ஜிபிஎஸ் சிஸ்டம் மூலமாக ரயில் நிலையங்கள் வருகை குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வசதியும் வழங்கப்பட இருக்கிறது.

சூரிய ஒளியால் ரயில் பெட்டிக்குள் வெப்பம் இறங்குவதை தவிர்க்கும் விதத்தில், கூரையில் விசேஷ எதிரொலிப்பு பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த ரயிலில் அதிநவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட கழிவறை வசதி முக்கியமானதாக இருக்கும்.

ஒவ்வொரு பெட்டியிலும் 120 பேர் பயணிக்கலாம். தானியங்கி உணவு வழங்கும் எந்திரம் பொருத்தப்பட்ட பெட்டிகளில் 104 பேர் பயணிக்கலாம். இந்த ரயில் புதிய வண்ணக்கலவையில் வருகிறது.

கோவையிலிருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.40 மணிக்கு பெங்களூரை 12.40 மணிக்கு சென்றடையும். அங்கு பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவையை வந்தடையும்.

கோவையிலிருந்து பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் இந்த புதிய டபுள் டெக்கர் ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், பங்காருபேட்டை, ஒயிட்பீல்டு, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர் கண்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கோவையிலிருந்து பெங்களூர் செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் டபுள் டெக்கர் ரயில் 22666 எண்ணிலும், மறுமார்க்கத்தில் பெங்களூரிலிருந்து கோவைக்கு 22665 என்ற எண்ணிலும் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலுக்காக மறுசீரமைக்கப்பட்ட பெட்டிகள் தயார் நிலையில் உள்ளது. விரைவில் அனுமதி கிடைத்தவுடன் சேவை துவங்கப்பட இருக்கிறது.

கோவை - பெங்களூர் மட்டுமின்றி, பந்த்ரா[டி] - ஜாம்நகர் மற்றும் விசாகப்பட்டினம் - விஜயவாடா இடையே உதய் எக்ஸ்பிரஸ் டபுள் டெக்கர் ரயில் சேவை துவங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications