பாதசாரிகள் சாலையை கடப்பதற்கான 'ஸீப்ரா க்ராசிங்' பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
பாதசாரிகள் கடப்பதற்கான சாலை எச்சரிக்கை குறியீடு மற்றும் அதை பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
சாலை எச்சரிக்கை பலகைகள், சாலை விதிகள் குறித்து அவ்வப்போது சுவாரஸ்யமான தகவல்களை வழங்கி வருகிறோம். அந்த வரிசையில், இன்று சாலைகளில் போடப்பட்டிருக்கும் ஸீப்ரா க்ராசிங் எனப்படும், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கான வரிக்கோடுகள் பற்றிய சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.

நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் இந்த ஸீப்ரா க்ராசிங் வரிக்கோடுகள் சாலையை பாதசாரிகள் கடப்பதற்கு உரிமை அளிக்கும் விதத்தில் போடப்படுகின்றன.
முதல்முறையாக, இந்த ஸீப்ரா க்ராசிங் லைன் பிரிட்டனில் 1949ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நீலம் மற்றும் மஞ்சள் வண்ணக் கோடுகளுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஸீப்ரா க்ராசிங் பெயர் பிறந்த கதையும் கூட சுவாரஸ்யமானது. 1948ம் ஆண்டு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பின்னர் பிரதமரான ஜேம்ஸ் கலகன் அந்நாட்டின் போக்குவரத்து ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு அவ்வப்போது சென்றிருக்கிறார்.
அங்கு பாதசாரிகள் பாதுகாப்பாக கடப்பதற்கு ஆய்வுகளை ஆர்வமாக பார்த்து வந்திருக்கிறார்.

அப்போது, பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடப்பதற்கு புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் கருப்பு மற்றும் வெள்ளை வரிக்கோடுகளை ஆய்வகத்தை சேர்ந்தவர்கள் காண்பித்துள்ளனர். அதற்கு பெயரிடுவதிலும் அங்கு குழப்பம் நிலவியது.

ஆனால், ஜேம்ஸ் அதனை பார்த்தவுடனே, அது பார்ப்பதற்கு வரிக்குதிரை போலவே உள்ளது என்று கூறி இருக்கிறார். அதுவே பின்னாளில் ஸீப்ரா க்ராசிங் பெயராக மாறியதாக சொல்லப்படுகிறது.

1949ம் ஆண்டில் மொத்தம் 1,000 இடங்களில் ஸீப்ரா க்ராசிங் வரிக்கோடுகள் அறிமுகம் செய்யப்பட்டன. 1951ம் ஆண்டு வரிக்கோடுகளுக்கான அளவுகள் குறித்த விதிகள் பிரிட்டனின் சட்டத்தில் சேர்க்கப்பட்டன.
மேலும், சாலைகளில் பயன்படுத்தப்படும் பிற போக்குவரத்து எச்சரிக்கை கோடுகளை விட இந்த ஸீப்ரா க்ராசிங் அளவு அதிகமாக இருக்குமாறு விதி அறிமுகம் செய்யப்பட்டது.

பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸீப்ரா க்ராசிங் முறை, அந்நாட்டின் காலனி நாடுகளிலும், பிற நாடுகளிலும் அறிமுகமானது. மேலும், ஒவ்வொரு நாடும் இந்த ஸீப்ரா க்ராசிங்கை தங்கள் விருப்பப்படி வண்ணங்களில் சிறிய மாறுதல்களை செய்து அறிமுகம் செய்தன.

இந்த நிலையில், அதி வேகத்தில் வரும் ஓட்டுனர்களால் இந்த ஸீப்ரா க்ராசிங்கை எளிதில் கண்டுகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதற்காக, முக்கிய சாலை சந்திப்புகளில் விளக்கு சமிக்ஞைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சில வாகன ஓட்டிகள் இந்த ஸீப்ரா க்ராசிங்கை மதிப்பதில்லை.

எனவே, வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ஐஸ்லாந்து நாட்டில் உள்ள இசாஃப்ஜரூர் என்ற நகர நிர்வாகம், முப்பரிமாண தோற்றமுடைய ஸீப்ரா க்ராசிங் அமைப்பை அறிமுகம் செய்துள்ளது. இதனை பார்க்கும் வாகன ஓட்டிகள், அந்த இடத்தில் வேகத்தடை போன்ற அமைப்பு இருப்பதாக உணர்ந்து வேகத்தை குறைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் ஐஸ்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டாலும், கடந்த ஆண்டே டெல்லியில் முப்பரிமாண வேகத்தடை முறை சோதனை அடிப்படையில் சாலைகளில் வரையப்பட்டது.
இது ஓரளவுக்கு கைகொடுத்தாலும், தினசரி ஒரே சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் இதனை தெரிந்து கொண்டு மதிக்காமல் செல்வது தொடர்கதையாக உள்ளது.

அதேநேரத்தில், வேகத்தடையால் ஏற்படும் விபத்துக்களை குறைக்க வழி ஏற்பட்டது. இந்த முப்பரிமாண வேகத்தடை முறையை கொண்டு வருவது குறித்து நாட்டின் பல்வேறு முக்கிய நகர நிர்வாகங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.

பாதசாரிகள் கடப்பதற்கான ஸீப்ரா க்ராசிங் குறித்து மட்டுமே இதுவரை பார்த்தோம். ஆனால், பரிணாம வளர்ச்சியில் இன்று ஸீப்ரா க்ராசிங் எவ்வாறு மேம்பட்டிருக்கிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

ஸீப்ரா க்ராசிங்கின் பரிணாம வளர்ச்சியாக, பெலிகன் க்ராசிங், பஃபின் க்ராசிங், டூகன் க்ராசிங் மற்றும் பீகாசஸ் க்ராசிங் என விலங்குகளின் பெயர்களில் வெவ்வேறு வகை பாதசாரிகள் கடக்கும் பகுதிகள் நடைமுறையில் உள்ளன.

பெலிக்கன் க்ராசிங்
ஸீப்ரா க்ராசிங்கில் விளக்கு சமிக்ஞை இருக்காது. பெலிக்கன் க்ராசிங் முறையில், சிக்னலில் உள்ள சிக்னல் பட்டனை பாதசாரிகள் அழுத்தினால், அவர்களுக்கான சிக்னல் கிடைக்கும். மேலும், இந்த க்ராசிங்கில் வாகனங்களுக்கு பச்சை விளக்கு சமிக்ஞை கிடைத்தால் கூட, ஒரு பாதசாரி சாலையை கடந்தாலும், அவர்களுக்கு கண்டிப்பாக வழி தர வேண்டும்.

பஃபின் க்ராசிங்
Pedestrian User Friendly Intelligent Crossing [Puffin Crossing]என்பதன் சுருக்கமே பஃபின் க்ராசிங். இது பெலிக்கன் க்ராசிங் போல இருந்தாலும், சற்றே வேறுபடுகிறது. அதாவது, பாதசாரிகள் கடப்பது சென்சார்கள் மூலமாக கண்காணிக்கப்படும். பாதசாரிகளின் நகர்வு சென்சார்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு, அவர்கள் சாலையை கடந்தவுடன், வாகனங்களுக்கான பச்சை சிக்னல் மாறும்.

டூகேன் க்ராசிங்
இதுவும் பெலிக்கன் க்ராசிங் போலவேதான். ஆனால், இந்த க்ராசிங்கானது, பூங்கா மற்றும் மிதிவண்டிகளுக்கான தடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கொடுக்கப்படுகிறது. இதுவும் சாதாரண விளக்கு சமிக்ஞையின் அடிப்படையிலான சிக்னலாக செயல்படும்.

பீகாசஸ் க்ராசிங்
இந்த பீகாசஸ் க்ராசிங் என்பது பாதசாரிகள், மிதிவண்டியில் வருபவர்கள் தவிர்த்து, குதிரையில் வருபவர்களும் கடக்கும் விசேஷ வசதி கொண்டது. ஆம், இந்த சிக்னல்களில் இரண்டு பொத்தான்கள் இருக்கும். ஒன்று பாதசாரிகளும், மிதிவண்டியில் வருபவர்களும் கடக்கும் வகையில் இருக்கும். மற்றொன்று, குதிரையில் வருபவர்களுக்காக தரையிலிருந்து 2 மீட்டர் உயரத்தில் கம்பத்தில் இருக்கும்.

இந்த நிலையில், ஸீப்ரா க்ராசிங் பற்றிய மற்றொரு சுவாரஸ்யத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். சாலையை கடப்பதற்கான உலகின் மிகப்பெரிய ஸீப்ரா க்ராசிங் அமைப்பு, ஜப்பானில் உள்ள ஷிபுயா என்ற இடத்தில் உள்ளது.
ஐந்து சாலைகள் ஒன்று கூடும் சாலை சந்திப்பில் உள்ள இந்த ஸீப்ரா க்ராசிங்கில், பரபரப்பு மிகுந்த நேரங்களில் ஒவ்வொரு முறை சிக்னல் மாறும்போதும் 2,500 பேர் வரை கடந்து செல்கின்றனர். சாலையின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், மறுபுறத்திற்கு எறும்புகள் போல பாதசாரிகள் கடந்து செல்கின்றனர்.

சரி, பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடப்பதற்காக நீண்ட ஆராய்ச்சிகள் செய்து இந்த வரிக்கோடுகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தினர். ஆனால், போக்குவரத்து பெருகிவிட்ட இந்த காலத்தில், பலரும் இந்த ஸீப்ரா க்ராசிங்கை மதிப்பதில்லை.

பாதசாரிகள் பலரும் தடுப்புகளை தாண்டி குதித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஸீப்ரா க்ராசிங்கை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதேபோன்று, சாலையை கடக்க முயலும் பாதசாரிகளை அச்சுறுத்துவது போலவே, இந்த ஸீப்ரா க்ராசிங்கை மதிக்காமல் பலர் வாகனத்தை ஓட்டுகின்றனர்.

மொபைல்போனில் பேசிக்கொண்டே சாலையை கடப்பது, மொபைலில் பேசியபடியே வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவாக சாலையை கடப்பது போன்ற அஜாக்கிரதையான செயல்களால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். இந்த புள்ளி விபரங்கள் கடும் அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது.

எனவே, பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இந்த ஸீப்ரா க்ராசிங் உள்ளிட்ட போக்குவரத்து சமிக்ஞைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சாலையை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் சுய ஒழுங்குடன் விதிகளை மதித்தால் மட்டுமே, இதுபோன்ற சாலை குறியீடுகள் பயன்தரும் என்பதுடன், உயிரிழப்புகளையும் குறைக்கும்.


Click it and Unblock the Notifications








