இந்திய போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் தங்க நாற்கர சாலை: சிறப்பம்சங்கள்!
இந்திய போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் தங்க நாற்கர சாலை குறித்த சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
நாட்டின் நான்கு முக்கிய பெரு நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகியவற்றை இணைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலையை அமைப்பதற்காக தங்க நாற்கர சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத் திட்டமாக சொல்லப்படும் இந்த திட்டத்தின் மூலமாக நாட்டின் சாலை கட்டமைப்பு வெகுவாக மேம்பட்டு இருக்கிறது.

1999ம் ஆண்டு திட்டம் இறுதி செய்யப்பட்டு, 2001ம் ஆண்டு முறைப்படி இந்த சாலை திட்டம் துவங்கப்பட்டது. உலகிலேயே 5வது நீளமான நெடுஞ்சாலை கட்டமைப்பாக இது கூறப்படுகிறது. விரைவு சாலைகளை உருவாக்குவதும், ஏற்கனவே இருக்கும் சாலைகளை நான்கு அல்லது ஆறு வழிச் சாலைகளாக மாற்றும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் கோடுகளா உருவகித்தால், நாற்கரம் போல இருப்பதால், இது தங்க நாற்கர சாலை என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சாலை 5,846 கிமீ நீளம் கொண்டது.

இந்த சாலை திட்டம் ரூ.60,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது. விரைவான போக்குவரத்து, தரமான சாலைகள், பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்டது.

தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ், மேற்கூறிய நான்கு முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, வழியில் உள்ள பல சிறிய நகரங்களும், தொழில் நகரங்களும் சிறப்பான சாலை இணைப்பை பெற்றுள்ளன.

டெல்லி- கொல்கத்தா இடையே 1,453 கிமீ தூரத்திற்கும், கொல்கத்தா - சென்னை இடையே 1,667 கிமீ தூரத்திற்கும், சென்னை- மும்பை இடையே 1,290 கிமீ தூரத்திற்கும், மும்பை -டெல்லி இடையில் 1,419 கிமீ தூரத்திற்கும் தங்க நாற்கர சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு பணிகள் 2011ம் ஆண்டு முழுமை பெற்றது.

டெல்லி- கொல்கத்தா இடையே பரீதாபாத், மதுரா, ஆக்ரா, இட்டாவா, கான்பூர், அலகாபாத், வாரணாசி, தான்பாத், அசன்சோல், துர்காபூர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் சிறப்பான சாலை இணைப்பை பெற்றிருக்கின்றன.

கொல்கத்தா- சென்னை இடையே காரக்பூர், கட்டாக், புவனேஸ்வர், விசாகப்பட்டினம், காக்கிநாடா, விஜயவாடா, நெல்லூர், கும்மிடிப்பூண்டி ஆகிய நகரங்கள் இணைப்பை பெற்றிருக்கின்றன.

சென்னை - மும்பை இடையே காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, பெங்களூர், தும்கூர், தாவணகெரெ, ஹூப்ளி, பெல்காகம், கோலாப்பூர், புனே ஆகிய நகரங்கள் வழியாக செல்கிறது.

மும்பை- டெல்லி இடையே சில்வாசா, சூரத், ஆமதாபாத், உதயப்பூர், அஜ்மீர், ஜெய்ப்பூர், குர்கான் ஆகிய நகரங்கள் இணைப்பை பெற்றிருக்கின்றன.

நாட்டிலேயே அதிகபட்சமான அளவு தங்க நாற்கர சாலை திட்டம் ஆந்திராவில்தான் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு சுமார் 1014 கிமீ தூரம் அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 342 கிமீ தூரத்திற்கு தங்க நாற்கரச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை- பெங்களூர் இடையிலான போக்குவரத்து மிகச் சிறப்பாக இருப்பதற்கும், இந்த வழித்தடத்தில் தொழில் வளர்ச்சி பெருகுவதற்கும் இந்த தங்க நாற்கர சாலை திட்டம் அதீத பங்களிப்பை வழங்கி வருகிறது. மேலும், இரு நகரங்களிலும் பணிபுரிவோர் வார இறுதியில் சொந்த ஊருக்கு திரும்புவதற்கும் மிகச் சிறப்பான இணைப்பையும் வழங்குகிறது.

தங்க நாற்கரச் சாலை திட்டம் மூலமாக சுற்றுலா மற்றும் சரக்குப் போக்குவரத்து மூலமாக நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் எளிதாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








