திருச்சி- ஸ்ரீகங்காநகர் இடையிலான ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்!
திருச்சியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்காநகர் இடையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்களை காணலாம்.
அதிநவீன வசதிகள், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கங்காநகர் இடையே அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் சேவைக்கு வரும் இந்த புதிய ரயில் திருச்சியிலிருந்து பெங்களூர் மற்றும் வட மேற்கு இந்திய நகரங்களுக்கு செல்பவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இந்த நிலையில், இந்த புதிய எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.

புதிதாக அறிமுகமாகி இருக்கும் இந்த புதிய எக்ஸ்பிரஸ் ரயில் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது. இது மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்டது. கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் இந்த புதிய ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

ராஜ்தானி, துரந்தோ போன்று இந்த ரயில் பிரத்யேக வண்ணப் பூச்சுடன் வேறுபடுகிறது. உட்புறம் மிகவும் தரமான பாகங்களுடன், அதிக சிறப்பம்ங்களை பெற்றிருக்கிறது.

இதன் படுக்கைகள் மிகவும் சொகுசாக இருக்கும். மேலே உள்ள படுக்கைகளுக்கு எளிதாக ஏறி, இறங்குவதற்கு வசதியாக கைப்பிடிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஒவ்வொரு படுக்கை அறைகளுக்கும் தனித்தனி மொபைல்சார்ஜர்கள், திரைசீலைகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதனால், மிக உன்னதமான பயண அனுபவத்தை வழங்கும்.

எந்த நேரத்திலும் காபி, டீ போன்றவற்றை பெறும் வகையில், தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டு இருக்கிறது. சூப் வகைகளும் இந்த தானியங்கி எந்திரங்கள் மூலமாக பெற முடியும். உணவு வகைகளை ஆர்டர் செய்து பெறும் வசதியும் இருக்கும்.

இந்த ரயிலில் எல்இடி திரை கொண்ட தகவல் பலகைகள், பார்வையற்றோருக்கு உதவும் பிரெய்லி தகவல் பலகைகள் மற்றும் படுக்கை எண் வரிசை பலகைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஜிபிஎஸ் அடிப்படையில் இயங்கும் ரயில் நிலையங்கள் பற்றி முன்னறிவிப்பு வசதியும் உண்டு.

இந்த ரயிலில் கெட்ட வாடை வருவதை தவிர்ப்பதற்கான விசேஷ வடிகட்டி கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. சிசிடிவி கேமரா, புகை மற்றும் தீப்பிடிப்பதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதியும் உள்ளது.

இந்த ரயிலில் சுத்தத்திற்கும், சுகாதாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. பயோ- டாய்லெட் கழிவறைகள், புதிய வடிவமைப்பிலான குப்பைத் தொட்டிகள் போன்றவை முக்கியமானவை.

திருச்சி- ஸ்ரீகங்கா நகர் இடையிலான இந்த ரயில் வாராந்திர சேவையாக இயக்கப்பட உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீ கங்கா நகரில் இருந்து செவ்வாய்கிழமை தோறும் இரவு இரவு 12.25 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமை மதியம் 1.30 மணிக்கு திருச்சியை வந்தடையும். திருச்சியில் இருந்து வியாழக்கிழமை தோறும் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு ஸ்ரீ கங்காநகரை சென்றடையும். சாதாரண ரயில்களைவிட 20 சதவீதம் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!
புதிய ஹூண்டாய் வெர்னா காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








