மருந்து கண்டுபிடிக்கப் போய் எஞ்சின் ஆயிலை கண்டுபிடித்த மருத்துவர்... ஒரு சுவாரஸ்ய வரலாறு!
வாகனத்தின் இதயம் போன்று கருதப்படும் எஞ்சினின் இயக்கத்திற்கு ஆயில் மிக முக்கிய விஷயமாக இருக்கிறது. எஞ்சின் ஆயுளை நீடிப்பதிலும், பிரச்னையில்லாமல் வாகனங்களை இயக்குவதிலும் இந்த எஞ்சின் ஆயில் உயிர் நாடி போல செயல்படுகிறது. சிலர் தங்களது வாகனத்தில் எந்த ஒரு பராமரிப்பு செய்யவில்லை என்றாலும், எஞ்சின் ஆயிலை மட்டும் சரியாக மாற்றி எந்த பிரச்னையும் இல்லாமல் ஓட்டிக் கொண்டே இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

கார், பைக் உள்ளிட்ட வாகன எஞ்சின்கள் உராய்வு தன்மையுடன் கூடிய பல நுணுக்கமான உதிரிபாகங்களுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், எஞ்சின் இயக்கும்போது உதிரிபாகங்கள் உரசும்போது அதிக உராய்வு ஏற்படுவதால் அதிகப்படியான வெப்பம் வெளிப்படுவதுடன், தேய்மானம் என்பதும் தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது.

இந்த நிலையில், எஞ்சின் ஆயில் கண்டுபிடிப்பதற்கு முன்னர் விலங்குகளின் கொழுப்புதான் எஞ்சின் உள்ளிட்ட எந்திரங்களில் மசகு பொருளாக பயன்படுத்தப்பட்டது. ஆனால், எஞ்சின் ஆயில் கண்டுபிடிக்கப்பட்டதால், மிருக கொழுப்பு பயன்படுத்தும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இன்று எஞ்சின் இயக்கத்திற்கு முக்கிய பொருளாக இருக்கும் எஞ்சின் ஆயில் மாறி இருக்கும் நிலையில், கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னால் ஒரு சுவாரஸ்ய வரலாறு உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜான் எல்லிஸ் என்ற மருத்துவர் கச்சா எண்ணெயிலிருந்து மருத்துவ குணம் கொண்ட பொருளை கண்டறிவதற்கான முயற்சியில் இறங்கினார். இதற்காக, அவர் சொந்தமாக ஒரு கருவியை உருவாக்கி சோதனைகளை செய்தார்.

அப்போது, கச்சா எண்ணெயை குறிப்பிட்ட நிலையில் வைத்து சூடுபடுத்தும்போது அதன் மசகுத்தன்மை சிறப்பாக மேம்படுவதை கண்டறிந்தார். அத்துடன், அந்த சமயத்தில் அவர் பக்கம் அதிர்ஷ்டக் காற்றும் அடிக்கத் துவங்கியது. அவரது மனைவியின் தங்கை கணவர் (சகலைபாடி) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். ஆனால், அதில் போதிய வர்த்தகம் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அப்போது, ஜான் எல்லிஸ் உதவியை நாடினார்.

இதையடுத்து நீராவி எஞ்சின்களில் பயன்படும் மசகு எண்ணெய்யை தயாரித்து அசத்தினர். வர்த்தகத்தையும் மேம்படுத்தினர். அதற்கு பிறகுதான் அவர் வால்வோலைன் என்ற ஆயில் நிறுவனத்தை உருவாக்கினார். இன்று உலக அளவில் மிகப்பெரிய ஆயில் தயாரிப்பு நிறுவனங்களில் வால்வோலைனும் ஒன்று. இதற்கான காப்புரிமையையும் அவர் பெற்றார்.

சரி, எஞ்சின் வரலாறு ஒருபுறம் இருந்தாலும், இன்று எஞ்சின் ஆயில் குறித்த பல சந்தேகங்கள் உங்களுக்கு எழுந்திருக்கலாம். இதுகுறித்த சில முக்கிய விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

எஞ்சினுக்குள் இயங்கும் மிக நுணுக்கமான உதிரிபாகங்கள் சீராக இயங்குவதற்கும், வெப்பத்தை கட்டுப்படுவதற்கும் எஞ்சின் ஆயில் பயன்படுகிறது. இதற்காக, குறிப்பிட்ட அளவில் மசகுத்தன்மையுடன் வாகன எஞ்சின் ஆயில்கள் தயாரிக்கப்படுகின்றன.

கச்சா எண்ணெயிலிருந்துதான் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பல பொருட்களை போல எஞ்சின் ஆயிலும் கிடைக்கிறது. அதேநேரத்தில், வாகனத்தில் பயன்படுத்தப்படும் ஆயில்களில் சில ரசாயனங்களும் கலக்கப்படுகின்றன. அதாவது, எஞ்சின் ஆயிலின் மசகுத்தன்மையை நீண்ட காலம் நீடிக்கச் செய்வதற்கும், உதிரிபாகங்கள் துரு பிடிக்காமல் இருப்பதற்கும் சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

வாகனங்களுக்கு தயாரிக்கப்படும் எஞ்சின் ஆயில்கள் வெப்பத்தை தாங்கும் திறனை பொறுத்து பல குறியீடுகளுடன் விற்பனை செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு 20W40 என்ற ஆயில்தான் நம் பகுதிகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதில், W என்பது Winter என்று குறிப்பிடப்படுகிறது.

பொதுவாக, நம்மூர்களில் பயன்படுத்தப்படும் 20W40 ஆயில் என்பது 20 டிகிரி முதல் 40 டிகிரி வரையிலான வெப்ப நிலையில் இந்த ஆயிலின் மசகுத்தன்மை தன் நிலை இழக்காமல் சிறப்பாக இருக்கும். இதனால், எஞ்சினில் பிரச்னை ஏற்படுவது குறைவாக இருக்கும்.

அதுவே அதிக குளிர் நிலவும் பிரதேசங்களில் 0W25 என்ற கிரேடு ஆயில் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஆயில் 0 டிகிரி வெப்பநிலை முதல் 25 டிகிரி வெப்ப நிலை வரை தனது மசகுத்தன்மையை இழக்காமல் எஞ்சின் பாகங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும்.

அதிக வெப்ப நிலை கொண்ட பிரதேசங்களில் 20W60 என்ற கிரேடு பயன்படுத்த பரிந்துரைக்கப்படும். அதாது, 20 டிகிரி முதல் 60 டிகிரி வெப்ப நிலையில் கூட இந்த ஆயிலின் மசகுத்தன்மை சிறப்பாக இருக்கும். மேலும், 5W60 என்ற ஆயில் டபுள் கிரேடு என்று வகைப்படுத்தப்படுகிறது. அதிக குளிர் மற்றும் வெப்ப நிலை என இரண்டிலும் தனது மசகுத்தன்மையை எளிதாக இழக்காமல் எஞ்சினுக்கு பாதுகாப்பு வழங்கும்.

எஞ்சின் ஆயிலை பலரும் வாங்கி கார், பைக்குகளில் மாற்றி இயக்குவதை வழக்கமான விஷயமாக இருக்கிறது. எனினும், எஞ்சின் ஆயில் வாங்கும்போது அதன் வெப்ப நிலை தாங்கும் மேற்கண்ட சரியான கிரேடை கவனித்து வாங்கி மாற்றுவதுதான் நல்லது.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைக்கும் கிரேடு ஆயிலை மட்டுமே பயன்படுத்துங்கள். அதேபோன்று, வாகன தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ள சரியான இடைவெளியில் எஞ்சின் ஆயிலை மாற்றுவதும் அவசியம். வாகனம் ஓடினாலும், ஓடாவிட்டாலும், எஞ்சின் ஆயில் அதன் மசகுத்தன்மையை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே நிலை இழக்காமல் இருக்கும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும், இதற்கு தரமான எஞ்சின் ஆயிலை வாங்குவதும் அவசியம்.


Click it and Unblock the Notifications








