மீண்டும் பூமிக்கு திரும்பும் மறுபயன்பாட்டு ராக்கெட்... இஸ்ரோவின் புதிய அஸ்திரம்
தற்போது விண்வெளிக்கு செயற்கைகோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டுகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது தெரிந்ததே. இந்தநிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்த மறுபயன்பாட்டு அம்சம் கொண்ட ராக்கெட், கடந்த மாதம் நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையின்போது 11 சிறிய செயற்கைகோள்களை சுமந்து சென்று விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்திவிட்டு, மீண்டும் பூமிக்கு திரும்பியது.
விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக கருதப்படும் இந்த சோதனை, அதனை புதிய கோணத்தில் பயணிக்க செய்திருக்கிறது. இந்தநிலையில், இதேபோன்றதொரு மறுபயன்பாடு கொண்ட ராக்கெட்டை இந்தியாவும் உருவாக்கி வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் இந்த ராக்கெட்டின் புரோட்டோடைப் மாடல் சோதனை செய்யப்பட உள்ளது. இந்த புதிய விண்வெளி வாகனத்தின் சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அவதார்
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்து வரும் இந்த புதிய மறுபயன்பாட்டு ராக்கெட்டுக்கு, அவதார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதாவது, Aerobic Vehicle For Transatmospheric Hypersonic Aerospace Transportation என்பதன் சுருக்கமே அவதார்.

ஸ்பேஸ்பிளேன்
இதனை ஸ்பேஸ்பிளேன் அல்லது விண்வெளி விமானம் என்ற பொது பெயரில் அழைக்கின்றனர். இதுதவிர, Reusable Launch Vehicle[RLV] என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஐடியா
1998ம் ஆண்டு பெங்களூரில நடந்த ஏரோ இந்தியா98 என்ற கண்காட்சியில், இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிக் கழக்கத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட திட்ட வரைவு அமெரிக்காவில் நடந்த சர்வதேச மாநாட்டிலும் சமர்ப்பிக்கப்பட்டது.

தயாரிப்பு தீவிரம்
இதைத்தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி கழகம் இதற்கான வடிவமைப்பு பணிகளை செய்தது. இதற்கான எஞ்சின் மற்றும் எரிபொருள் தொழில்நுட்ப சோதனைகளும் தொடர்ந்து நடந்தன.

புரோட்டோடைப் மாடல்
கடந்த 2012ம் ஆண்டு இந்த திட்டம் அடுத்த கட்டத்தை எட்டியது. ஆர்எல்வி வாகனத்தின் புரோட்டோடைப் தயாரிப்பு அறிவிக்கப்பட்டது. இதற்காக, 5ல் ஒரு பங்கு வடிவம் கொண்ட புரோட்டோடைப் தற்போது சோதனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. 1.5 டன் எடை கொண்ட இந்த வாகனம் 70 கிமீ உயரம் வரை செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது.

சிறப்பு தொழில்நுட்பம்
இந்த ஆர்எல்வி வாகனம் விண்வெளிக்கு செல்லும்போது, வெளிக்காற்றை இழுத்து அதிலுள்ள ஆக்சிஜனை மட்டும் வடிகட்டி சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி கொண்டுள்ளது. வளிமண்டலத்தை தாண்டி மேலே செல்லும்போது, எஞ்சினுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை சேமிப்புத் தொட்டியிலிருந்து பெற்றுக்கொள்ளும்.

விசேஷ கட்டமைப்பு
விண்வெளிக்கு சென்றுவிட்டு மீண்டும் பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழையும்போது காற்று உராய்வினால் வெளிப்புறத்தில் ஏற்படும் பெருமளவு வெப்பத்தை குறைப்பதற்காக, தும்பா ராக்கெட் ஏவுதள விஞ்ஞானிகள் விசேஷ டைல்ஸ் பூச்சை இந்த வாகனத்தில் பூசியிருக்கின்றனர்.

முழு வடிவம்
தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் புரோட்டோடைப் மாடல் 1.5 டன் எடை கொண்டதாக உள்ள நிலையில், உண்மையான ஸ்பேஸ்பிளேன் 25 டன் எடை கொண்டதாக இருக்கும். இதில், 60 சதவீத எடை திரவ ஹைட்ரஜன் எரிபொருளாக இருக்கும்.

விமானம் போன்றே இயங்கும்...
இதனை சாதாரண விமானங்கள் போன்றே வானில் ஏற்றி, இறக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விமான ஓடுபாதைகளை வைத்தே இந்த ஸ்பேஸ்பிளேனை செலுத்த முடியும்.

எஞ்சின் இயக்கம்
மேலே ஏறுவதற்கான முதல் நிலையில் டர்போ- ராம்ஜெட் எஞ்சினும், மேலே எழும்பி பறக்கத் துவங்கியவுடன் மேக் 4 என்ற ஒலியைவிட பன்மடங்கு வேகத்தில் ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் உதவியுடன் இயங்கும். வளிமண்டலத்தை தாண்டிய பிறகு, சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆக்சிஜனை, ஹைட்ரஜனுடன் எரித்து கிடைக்கும் அபரிமிதமான சக்தியை பயன்படுத்தி, இறுதிக்கட்ட தூரத்தை கடக்கும்.

கடலில் தரையிறங்கும்?
தும்பா ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் ஸ்பேஸ்பிளேன் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது 5 கிமீ தூரம் கொண்ட ஓடுபாதை தேவைப்படும். ஆனால், அந்த விசேஷ ஓடுபாதை இல்லாத காரணத்தால், கடலில் தரையிறக்கப்பட்டு, மீண்டும் அதனை மீட்டு வந்து மறுபயன்பாட்டுக்கு ஏற்றதாக சில பணிகளை செய்ய வேண்டியிருக்கும்.

மறுபயன்பாடு
ஒரு ஸ்பேஸ்பிளேனை 100 முறை வரை விண்ணில் செலுத்தி செயற்கைகோள்களை நிலைநிறுத்துவதற்கு பயன்படுத்த முடியும். இதனால், ராக்கெட் தயாரிப்பு செலவு வெகுவாக குறையும். ஏற்கனவே, உலக அளவில் குறைந்த செலவில் செயற்கைகோள்களை செலுத்தும் பெருமை இஸ்ரோவுக்கு உண்டு.

எப்போது அறிமுகம்?
வரும் 2025ம் ஆண்டு முதல் ஸ்பேஸ்பிளேன் தயாரிப்பு நிலைக்கு கொண்டு சென்று விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இது மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவு திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்புறம்...
அதற்கு அடுத்து விண்வெளி வீரர்கள் பயணித்து திரும்புவதற்கான ஸ்பேஸ்பிளேனை உருவாக்கும் திட்டமும் இந்தியாவிடம் உள்ளது.


Click it and Unblock the Notifications