இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கான ரயில்களும், ரயில் வழித்தடங்களும்!
உலகிலேயே 4வது பெரிய ரயில் வழித்தட கட்டமைப்பை கொண்ட நாடு இந்தியா. பரந்து விரிந்த நம் தேசத்தின் போக்குவரத்து நிறைவு செய்வதில் முக்கிய பங்கு வகித்து வரும், ரயில் போக்குவரத்து எல்லை தாண்டியும் விரிவடைந்து வருகிறது.
தற்போது இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் ரயில்கள் மற்றும் பரிசீலனையில் உள்ள புதிய ரயில் வழித்தடங்கள் குறித்த விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் - பாகிஸ்தான்
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சாலை மார்க்கம் தவிர்த்து, ரயில் இணைப்பு வசதியும் உள்ளது. சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1976ம் ஆண்டு ஜூலை 22ந் தேதி இரு நாடுகளுக்கும் இடையல் இந்த ரயில் சேவை துவங்கப்பட்டது. சம்ஜவுதான என்றால் ஒப்பந்தம் என்று பொருள். டெல்லியிலிருந்து அட்டாரி எல்லை வரையிலும், அங்கிருந்து லாகூர் வரையிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையில் நுழைந்ததும் பயணிகளிடம் குடியுரிமை சோதனை நடத்தப்படும். 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரயில் பெட்டிகளும், எஞ்சின்களும் மாறி மாறி பயன்படுத்தப்படுகிறது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த சேவை பாதிக்கப்பட்டாலும், தொடர்ந்து ரயில் இயக்கப்படுவது ஆறுதல்.

02. மைத்ரி எக்ஸ்பிரஸ்
இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு இயக்கப்படுகிறது. மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. இரு வழித்தடத்திலும் வாரத்திற்கு 6 முறை இயக்கப்படுகிறது.

03. நேபாளம்
இந்தியாவுக்கு மிக நெருக்கமான எல்லையை கொண்டிருக்கும் நேபாள நாட்டிற்கு 2005ம் ஆண்டு முதல் பீகாரிலுள்ள ரக்ஸல் நகரிலிருந்து, அதன் அருகில் அமைந்திருக்கும் நேபாளத்திலுள்ள பீர்கன்ச் பகுதிக்கு ரயில் வழித்தடம் செயல்பாட்டில் உள்ளது. இதுதவிர, மேலும் 5 ரயில்வே வழித்தடங்களை அமைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. அதில், 2 வழித்தடங்களுக்கான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.

04. பூட்டான்
பூட்டான் நாட்டிற்கு ரயில் இணைப்பை வசதியை ஏற்படுத்த இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. நேரு பொன்விழா இணைப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலம், ஹசிமாராவிலிருந்து பூட்டானிலுள்ள தோரிபாரி என்ற இடத்திற்கு இடையில் 18 கிமீ தூரத்திற்கு இந்த ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசியல் காரணங்களால் தாமதப்பட்டு வருகிறது.

05. மியான்மர்
இந்தியாவிலிருந்து மியான்மர் நாட்டிற்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இது சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ரயில் வழித்தடமாக மாறும்.

06. வியட்நாம்
இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் உள்ள மணிப்பூரிலிருந்து வியட்நாம் நாட்டிற்கு ரயில் சேவை துவங்குவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுவும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அமையும்.

07. சீனா
டெல்லியிலிருந்து சீனாவிலுள்ள குன்மிங் நகருக்கு அதிவேக ரயிலை இயக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இது வர்த்தக ரீதியில் மிகவும் முக்கியத்துவம் பெறும் ரயில் வழித்தடமாக மாறும்.

08. தாய்லாந்து
ஏற்கனவே தாய்லாந்துக்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. அடுத்து ரயில் பாதை அமைக்கும் திட்டமும் உள்ளது. இது வர்த்தகமும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தடமாக மாறும்.

மலேசியா
மலேசியாவிற்கும் இந்தியாவிலிருந்து ரயில் விடுவதற்கான வாய்ப்பும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர்
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு பர்மா நாட்டு உதவியுடன் ரயில் மூலம் இணைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இதன்மூலமாக, அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்களுக்கு சிறப்பான போக்குவரத்தாக அமையும் என்பதோடு, சுற்றுலா வளர்ச்சியும் மேம்படும்.

நீண்ட தூரம் பயணிக்கும் உலகின் டாப் 10 ரயில்கள்!


Click it and Unblock the Notifications








