இதைதான் எதிர்பாத்தோம்... இந்தியன் ஆயில் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!
இந்தியன் ஆயில் நிறுவனம் தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகில் பெட்ரோல், டீசலுக்கு அதிகப்படியான வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை மிகவும் அதிகம். இது நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தினமும் வாகனங்களை பயன்படுத்தியாக வேண்டிய தேவை உள்ளவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

அவர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகச்சிறந்த மாற்றாக இருக்கும். ஆனால் அனைவராலும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடியுமா? என்பது சந்தேகம்தான். ஏனெனில் தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டுமென்றால், பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம் என்பதும் மற்றொரு தடைக்கல். ஆனால் விலை எல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது என்பவர்கள் கூட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறைதான் அந்த சிக்கல்.

இந்தியாவில் தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாய் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கின்றன. வீடுகளில் பொருத்தப்படும் சார்ஜிங் ஸ்டேஷனை மட்டும் நம்பி, எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கினால், நடைமுறை பயன்பாட்டில் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம் என முடிவு செய்பவர்கள் கூட, சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான பற்றாக்குறையால், தங்களது முடிவில் இருந்து பின் வாங்கி விடுகின்றனர். இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சிகளின் விளைவாக, முன்பை காட்டிலும் தற்போது சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை ஓரளவு உயர்ந்துள்ளது. பெட்ரோல் பங்க்குகள், ஷாப்பிங் மால்கள் உள்பட பல்வேறு பொது இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில் இந்தியா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் பல்வேறு இலக்குகளை நிர்ணயித்துள்ளது.

இந்த இலக்குகளில் முதல் கட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் தற்போது எட்டியுள்ளது என்று சொல்லலாம். அடுத்ததாக எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு உள்ளாக இந்தியாவில் செயல்பட்டு வரும் 10 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தயாராகி வருகிறது.

தடையற்ற பயணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இது பொதுமக்களுக்கு வழங்கும். இதன் மூலம் நிறைய பேர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவார்கள் என்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் முடிவை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தைரியமாக எடுக்கும். இது இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் நன்மை பயப்பதாக இருக்கும்.

இந்தியன் ஆயில் நிறுவனம் பொது பயன்பாட்டிற்கான தனது முதல் எலெக்ட்ரிக் வாகன சார்ஜரை கடந்த 2017ம் ஆண்டு நாக்பூரில் அமைத்தது. தற்போது இந்தியாவின் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைந்துள்ளன. இதில், பல்வேறு நெடுஞ்சாலைகளும் அடக்கம்.

இந்தியன் ஆயில் போன்ற பல்வேறு நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் முயற்சிகள் காரணமாக வரும் காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பல மடங்கு உயரலாம்.

இந்தியாவில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாக உள்ளது. வரும் காலங்களில் எலெக்ட்ரிக் பைக்குகள் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் போன்ற வாகனங்களின் விற்பனையும் மிகப்பெரிய அளவில் உயரும் என நம்பப்படுகிறது. இது நடந்தால், கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளை இந்தியா சார்ந்திருக்க வேண்டிய நிலையும் குறையும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








