XtraGreen புதிய டீசல் விற்பனைக்கு அறிமுகம்... இது வழக்கமான டீசலை விட அதிக லாபத்தை தருமாம்!
அதிக சிக்கனம், குறைவான எஞ்ஜின் சத்தம் மற்றும் குறைந்த மாசுபாட்டை வெளியேற்றக் கூடிய எக்ஸ்ட்ரா-கிரீன் (XtraGreen) புதிய டீசலை இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Limited) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் காணலாம், வாங்க.

நாட்டின் மிகப்பெரிய ஆயில் நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் ((Indian Oil Corporation Limited), இந்தியாவில் பசுமை வாகன இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், மின்வாகன பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையில் நாடு முழுவதும் 10 ஆயிரம் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க இருப்பதாக நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு வெளியாகி மிக குறைவான நேரங்களே ஆகின்ற நிலையில் தற்போது மற்றுமொரு தரமான அறிவிப்பை இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. நிறுவனம் எக்ஸ்ட்ரா கிரீன் (XtraGreen) எனும் புதிய தயாரிப்பு டீசலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

அதிக லாபத்தை தரும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த டீசல் நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே விற்பனக்குக் கிடைக்கும். நாட்டின் மிக முக்கியமான 63 நகரங்களில் உள்ள 126 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மட்டுமே எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் விற்பனைக்குக் கிடைக்கும். சோதனையோட்டமாக குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

மிக விரைவில் நாட்டின் பிற பகுதிகளிலும் எக்ஸ்ட்ராகிரீன் டீசல் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டீசல் பல செயல்பாட்டு சேர்க்கை (Diesel Multi-Functional Additive) எனும் முறையில் எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது. இது எரிபொருள் சிக்கனம், குறைந்த மாசுபாடு ஆகியவற்றிற்கு உதவும்.

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் 5 முதல் 6 சதவீத கூடுதல் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் சிக்கனம் (அப்படினா வழக்கமான டீசலைக் காட்டிலும் இதில் பல மடங்கு லாபம் கிடைக்கும்), லிட்டருக்கு 130 கிராம் மட்டுமே கார்பன்-டை ஆக்ஸைடு வெளியேற்றும், 5.29 சதவீதம் வரை குறைவான கார்பன் மோனாக்ஸைடை வெளியேற்றம் மற்றும் 4.99 சதவீதம் குறைவான என்ஓஎக்ஸ் உமிழ்வு ஆகிய திறன்களை எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் கொண்டிருக்கின்றது.

இதுமட்டுமின்றி, எஞ்ஜின் சத்தத்தை குறைவாக வெளியேற்றவும் இது உதவும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டீசலுக்கு என்ஏசிஇ, ஏ தர சான்று வழங்கியிருக்கின்றது. ஆகையால், அனைத்து தரப்பிலும் அதிக சிறப்பு வாய்ந்ததாக டீசலாக புதிய எக்ஸ்ட்ராகிரீன் டீசல் காட்சியளிக்கின்றது.

எக்ஸ்ட்ரா கிரீன் டீசலுடன், ஐஓசிஎல் 'ஒன்4யு' (One4U) எனும் எரிபொருள் கிஃப்ட் கார்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பாயிண்ட்ஸ் போன்ற பரிசளிப்பிற்கு உதவும். டீசல் மற்றும் பெட்ரோலுக்கான கட்டணத்தை இக்கார்டின் மூலம் செலுத்த முடியும். தேவைக்கேற்ப ரீசார்ஜ் செய்து எரிபொருளுக்கான தொகையைச் செலுத்திக் கொள்ளலாம்.

டிஜிட்டல் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த கார்டை இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் அறிமுகம் செய்திருக்கின்றது. இதை பயன்படுத்தி கட்டணத்தைச் செலுத்தினால் ரிவார்டு பாயிண்ட் மற்றும் வவுச்சர்கள் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

எக்ஸ்ட்ரா கிரீன் டீசலின் அறிமுகம் குறித்து இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட்டின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா கூறியதாவது, "இந்தியாவை பசுமையான நாளை நோக்கி நகர்த்துவது, கார்பன் வெளியேற்றத்தை தொடர்ந்து குறைப்பது மற்றும் 2070க்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை படிப்படியாக அடைவது போன்ற பிரதமரின் உறுதிப்பாட்டிற்கு எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் உதவும். இது பயண அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்த செய்யும்" என்றார்.

இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட்டின் இந்த முன்னெடுப்புகள் இந்தியாவை மிக வேகமாக பசுமை இயக்கத்தை நோக்கி நகர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் மற்றும் நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் மின்வாகன சார்ஜிங் மையங்களை நாட்டில் அமைக்கும் திட்டம் ஆகியவை இருக்கின்றன. முதல் கட்டமாக அடுத்த ஒரு வருடத்தில் 2 ஆயிரம் சார்ஜிங் மையங்களும், இரண்டாவது ஆண்டில் 8000 சார்ஜிங் மையங்களும், மூன்றாவது ஆண்டில் முழுமையாக 10 ஆயிரம் சார்ஜிங் மையங்களும் உருவாக்கப்பட இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








