திடீர்னு செல்போன் வேலை செய்யாமல் போகலாம்! இனி இப்படி பயன்படுத்துவதை தவிர்த்திடுங்க... இல்லனா பிரச்னைதான்!
பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தங்களது செல்போன்களை இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஸ்டாண்டுகளை பயன்படுத்தி அவற்றில் பொருத்த வேண்டாம் என கூறியிருக்கின்றது. இதுகுறித்து அதிர்ச்சி தரும் வகையில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

காருல போகுறதா இருந்தாலும் சரி, பைக்குல போகுறதா இருந்தாலும் சரி அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களின் புதிய பயணங்களின்போது சரியான இலக்கைச் சென்றடைவதற்காக வழிக்காட்டி செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஏன் ஆட்டோக்காரர்கள் சிலர்கூட வழிக்காட்டும் செல்போன் செயலிகளை பயன்படுத்தியே தங்களின் பயணிகளை உரிய இடத்திற்கு அழைத்து செல்கின்றனர்.

இதனால், ஆட்டோக்காரர்கள் இடத்தில் நாம ரூட் கேட்டு சென்ற காலம் மாறி தற்போது அவர்கள் கூகுள் மேப்-ஐப் பார்த்து செல்லும் நிலை தற்போது உருவாகியிருக்கின்றது. அந்தளவிற்கு மிகவும் துள்ளியமாக பாதை குறித்த தகவலை வழங்கக் கூடியவையாக நேவிகேஷன் (வழி காட்டி) செயலிகள் இருக்கின்றன.

இந்த செயலியைப் பயன்படுத்தும்போது யாராவது ஒருவர் ரூட்டை பார்த்து ஓட்டுநருக்கு அதுகுறித்த தகவலை வழங்க வேண்டும், அல்லது, செல்போன் ஸ்டாண்டைப் பயன்படுத்தி ஓட்டுநரே வழிகுறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இங்கு சிக்கலே உருவாகுகின்றது.

வழித்தடத்தை சுலபமாக பார்த்து செல்ல உதவும் ஸ்டாண்டுகளினால் செல்போன்களில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுதவாக பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் அதிர்ச்சி தகவல்களே வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்போன் ஸ்டாண்டைப் பொருத்தி அதில் செல்போனை நிற்கச் செய்து பயணிக்கும் போது செல்போன்களின் கேமிரா மற்றும் பிற நுண்ணிய பாகங்கள் பாதிப்படைவதாக ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

இருசக்கர வாகனங்களுக்கான செல்போன் ஸ்டாண்டுகள் டூ-வீலரின் ஹேண்டில் பார்களில் நேரடியாக பொருத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இருசக்கர வாகனங்களில் அதிகம் அதிர்வுகளை பெறும் பகுதிகளில் ஹேண்டில்பாரும் ஒன்று. ஆகையால், ஹேண்டில் பாரில் பொருத்தப்படும் செல்போன் ஸ்டாண்ட் மற்றும் செல்போந் அதிக அதிர்வுகளைச் சந்திக்கும் நிலை உருவாகின்றது.

குறிப்பாக, அதிக செயல்திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் கூடுதலாக அதிர்வுகள் உருவாகின்றன. இதன் விளைவாக செல்போன்களில் இருக்கும் கேமிராக்களின் லென்ஸ் போன்ற மிக முக்கியமான பாகங்கள் விரைவில் பாதிப்படைந்து விடுகின்றன. அதிலும், ரெகுலர் பயனர்களின் செல்போன்கள் சில நேரங்களில் மீட்டெடுக்க முடியாத வகையிலான பாதிப்புகளைச் சந்திப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

அதிக அதிர்வால் ஓஐஎஸ் (optical image stabilization) மற்றும் தானியாக ஃபோகஸ் செய்யும் (closed-loop autofocus) சிஸ்டம் மிக விரைவில் செயல் இழப்பதும் தெரிய வந்திருக்கின்றது. ஓஐஎஸ் ஆனது இயக்கத்தில் இருக்கும்போதும் கூட நிலையான படத்தை எடுக்க உதவும்.

மங்கல் அல்லாத தெளிவான படங்களை எடுக்க இதில் கூடுதலாக இடம் பெற்றிருக்கும் கைரஸ்கோப் சென்சார்கள் உதவுகின்றன. இது இயக்கத்தை தானாக கண்டறியும் என்பதால் வாகனம் இயக்கத்தில் இருக்கும்போது செல்போன் ஸ்டாண்டில் ஐபோன்கள் இருக்குமானால் இந்த சென்சார் தானாக இயங்க ஆரம்பித்துவிடும்.

ஆகையால், அது தேவையற்ற நேரத்தில் ஓவர் டைம் வேலை செய்வதைப் போல் இயங்க ஆரம்பித்துவிடும். இதன் விளைவாக ஆயுட்காலம் குறைந்து விரைவில் கேமிராவின் முக்கிய சென்சார்கள் செயலிழக்க நேரிடுகின்றது. ஆகையால், அதிக திறன் கொண்ட அல்லது அதிர்வை வெளிப்படுத்தும் மோட்டார்சைக்கிள்களின் ஹேண்டில் பார்களில் ஐ-போன்களைப் பயன்படுத்த வேண்டாம் என நிறுவனம் தற்போது அறிவித்திருக்கின்றது.

டெலிவரி பணியில் இருக்கும் பெரும்பாலான நபர்கள் அதிகபட்சம் தங்களின் செல்போன்களை இருசக்கர வாகனங்களின் ஹேண்டில் பார்களிலேயே பொருத்திக் கொள்கின்றனர். இவர்கள் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை ஆப்பிள் ஐஓஎஸ் நிறுவனத்தின் அறிவிப்பு உணர்த்துகின்றது.

இருப்பினும், இது தவிர்க்க முடியாத ஒன்று என டெலிவரி சேவையில் ஈடுபட்டு வரும் நபர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆர்டர்களை உரிய நேரத்தில், உரிய இடத்தில் கொண்டு சேர்க்க நேவிகேஷன் ஆப்பே அவர்களுக்கு பெரும்பாலும் உதவுகின்றன. இத்தகைய செயலியின் உதவியின்றி எந்தவொரு பணியையும் (ஆர்டர்களையும்) முழுமையாக செய்ய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.


Click it and Unblock the Notifications








