இனி வெயிட்டிங் லிஸ்ட்ல வெயிட் பண்ண வேணாம்! கன்ஃபார்ம் டிக்கெட் கன்ஃபார்மா கிடைக்கும்! எப்படி தெரியுமா?
இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் தற்போது ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு காலத்தை குறைத்துள்ளது. இதற்கு முன்னர் 120 நாட்களுக்கு பிறகு பயணம் செய்ய வேண்டிய ரயிலுக்கு தற்போதைய டிக்கெட் புக் செய்யலாம் என்று இருந்த நிலையில், இதை 60 நாட்களாக தற்போது குறைத்துள்ளது. இதன் மூலம் பயணிகள் காத்திருப்பு பட்டியலில் காத்திருக்க வேண்டிய தேவை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் நீண்ட தூர போக்குவரத்துக்கு ரயில் பயணம் மிக முக்கியமான வசதியாக இருக்கிறது. ஏராளமான மக்கள் ரயில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். சொகுசாக அதே நேரம் குறைந்த செலவில் பயணம் செய்ய ரயில் தான் ஏற்ற பயணம் என்பதால் ரயில் தான் இந்தியாவின் நீண்ட தூர பயணத்திற்கு முதுகெலும்பாக இருக்கிறது என சொல்லலாம்.

இப்படியாக இந்தியா முழுவதும் ரயில்களில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி தளம் தான் பிரதான டிக்கெட் புக்கிங் செய்யும் தளமாக இருக்கிறது. இந்த தளத்தில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் டிக்கெட்டுகளை புக் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தளத்தில் தற்போது ரயில் பயணத்திற்கு 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்யும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
இதை 60 நாட்களாக குறைத்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இனி வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அடுத்த 60 நாட்களுக்கான ரயில் பயண டிக்கெட்டுகளை மட்டுமே புக்கிங் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது எப்படி புக்கிங் செய்யும் காலத்தை குறைத்தால் வெயிட்டிங் லிஸ்ட் குறையும் என நீங்கள் நினைக்கலாம். இதற்கு பின்னால் இருக்கும் ஒரு உளவியல் விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். 120 நாட்கள் என்றால் கிட்டத்தட்ட நான்கு மாதம். நான்கு மாதத்திற்கு பிறகு பயணம் செய்ய வேண்டிய பயணத்தை ஒருவரால் இன்றே சரியாக திட்டமிடுவது என்பது இந்தியாவில் பெரிய அளவில் சாத்தியமில்லாத விஷயமாக இருக்கிறது.
இதனால் குழப்பமான மனநிலையிலேயே மக்கள் டிக்கெட்டுகளை புக் செய்கிறார்கள். ஒருவேளை பயணம் செய்ய வேண்டியது வந்தால் பயணம் செய்வோம் இல்லையென்றால் டிக்கெட்டை ரத்து செய்து விடுவோம் என நான்கு மாதத்திற்கு முன்னே டிக்கெட்டுகளை புக் செய்து விடுகிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் இவர்கள் பயணம் செய்ய வேண்டிய தேவையில்லாத சூழ்நிலையில் டிக்கெட்டுகளை ரத்து செய்கிறார்கள்.

இப்படியாக இருக்கும் கொஞ்சம் டிக்கெட்டையும் இவர்கள் புக்கிங் செய்து பிளாக் செய்து விட்டால் உண்மையாக பயணம் செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் போகிறது. அவர் புக்கிங் செய்ய வரும்போது காத்திருப்பு பட்டியலிலோ அல்லது ஆர்ஏசி -யிலோ டிக்கெட் புக் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதை தடுப்பதற்காக 60 நாட்களாக இதை குறைத்தால் அடுத்த இரண்டு மாதத்திற்கான பயணித்திட்டத்தை ஒருவரால் சுலபமாக செய்ய முடியும்.
இதன் மூலம் உண்மையாக பயணம் செய்யும் பயணிகள் மட்டுமே அதிக அளவில் டிக்கெட்களை புக் செய்வார்கள். கடைசி நேரத்தில் எமர்ஜென்சி காரணமாக பயணம் செய்ய முடியாதவர்கள் மட்டுமே டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் உண்மையான பயணிகள் காத்திருப்பது பட்டியலில் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
இது ஒரு வகையில் நன்மை பயக்கிறது என்றால் அடுத்ததாக இந்த டிக்கெட் புக்கிங் செய்யப்படும் முறையில் மற்றொரு புதிய மாற்றத்தை ரயில்வே நிர்வாகம் கொண்டு வருகிறது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உட்புகுத்துகிறது. இதனால் டிக்கெட் புக் செய்ய நினைப்பவர்களுக்கு இனி கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதன்படி தற்போது ஒருவர் ஒரு ரயில் நிலையத்திலிருந்து, மற்றொரு ரயில் நிலையத்திற்கு டிக்கெட் புக் செய்கிறார் என்றால் அவர் கிளம்ப வேண்டிய ரயில் நிலையத்தில் இருந்து டிக்கெட் இல்லை என்றாலும் அடுத்த ரயில் நிலையங்களில் இருந்து டிக்கெட் கிடைக்கும் பட்சத்தில் அவருக்கான டிக்கெட்டுகளை புக் செய்வதற்கான வழிமுறைகளை தற்போது கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
உதாரணமாக திருநெல்வேலியில் இருந்து ஒரு ரயில் சென்னைக்கு வருகிறது என வைத்துக் கொள்வோம். அந்த ரயிலில் பயணம் செய்வதற்காக மதுரையிலிருந்து ஒருவர் டிக்கெட் புக் செய்கிறார் என்றால் மதுரையில் இருந்து சென்னை வரை காலியாக ஒரு சீட் இருந்தால் மட்டுமே தற்போது டிக்கெட் புக் ஆகும் என்ற சூழ்நிலை இருக்கிறது.
ஒருவேளை திருநெல்வேலியில் இருந்து திண்டுக்கல் வரை செல்வதற்கு மட்டும் ஒருவர் டிக்கெட் புக் செய்து அவர் திண்டுக்கல்லில் இறங்கி விட்டார் என்றால், திண்டுக்கல்லுக்கு பிறகு யாரும் அந்த டிக்கெட்டை புக் செய்யவில்லை என்றால் அந்த சீட் சென்னை வரை காலியாக தான் செல்கிறது.இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு புக் செய்யும் நபருக்கு திண்டுக்கல்லில் இருந்து அவருக்கு சீட்டு வழங்குவதற்கான வழிமுறைகளை இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செய்யப் போகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது ரயில் டிக்கெட் புக் செய்வதில் பயணிகள் மத்தியில் மாறிவரும் டிரெண்டை உணர்ந்து ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது நிச்சயம் பாராட்டத்தக்கது தான். இதன் மூலம் மக்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள். குறிப்பாக காத்திருப்பு பட்டியலில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.


Click it and Unblock the Notifications









