தாய்லாந்துக்கு டூர் அழைத்து செல்லும் ஐஆர்சிடிசி... கட்டணம் எவ்ளோ தெரிஞ்சா உடனே ஒரு டிக்கெட்டை போட்டுவிடுவீங்க!
ஐஆர்சிடிசி (IRCTC) பட்ஜெட் கட்டணத்தில் தாய்லாந்து டூர் பேக்கேஜை அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பட்ஜெட் கட்டணத்தில் டூர் அழைத்துச் செல்லும் சேவையை ஐஆர்டிசி (Indian Railway Catering and Tourism Services) மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையிலேயே புதிதாக தாய்லாந்து ஹாலிடே டூர் பேக்கேஜை அது தற்போது நாட்டில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. பட்ஜெட்டில் டூர் செல்வோரை ஈர்க்கும் வகையில் குறைவான கட்டணத்தில் இந்த பேக்கேஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐஆர்டிசி என்ற உடன் நம்மில் பலருக்கு ரயில் டிக்கெட்டை புக் செய்யும் மென்பொருளே நினைவிற்கு வரும். ஆனால், இந்த பெயரில் உள் மற்றும் சில அண்டை நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லும் பணியையும் ஐஆர்சிடிசி மேற்கொண்டு வருகின்றது. ரயில் மற்றும் விமானம் என இரு வழிகளிலும் அது சுற்றுலா அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே புதிய தாய்லாந்து ஹாலிடே டூர் பேக்கேஜை ஐஆர்சிடிசி அறிவித்திருக்கின்றது. விமானத்தின் வாயிலாகவே தாய்லாந்திற்கு சுற்றுலா பயணிகளை ஐஆர்சிடிசி அழைத்துச் செல்ல இருக்கின்றது. டூர் கட்டணம் ரூ. 47,775 இல் இருந்து ஆரம்பிக்கின்றது. ஐந்து இரவுகள் மற்றும் ஆறு பகல்களுக்கான கட்டணமே இதுவாகும். இந்த பேக்கேஜின் வாயிலாக தாய்லாந்தின் முக்கிய பகுதிகளான பட்டாயா மற்றும் பேங்காக் ஆகியவற்றிற்கு ஐஆர்சிடிசி சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல இருக்கின்றது.

சேண்டி பீச்சை பார்வையிடுதல், தாய் மசாஜ் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட சிறப்பு சேவைகளும் இந்த சுற்றுலாவில் ஓர் அங்கமாகும். மேலும், மிக முக்கியமான சுற்றுலா பகுதிகளில் ஒன்றான கோரல் தீவு, பட்டாயாவில் நடைபெறும் அல்கஸார் ஷோ, பாங்காக்கில் உள்ள மெரைன் பார்க், கோல்டன் புத்தா சிலை உள்ளிட்டவற்றை பார்வையிடும் வாய்ப்பையும் இந்த பேக்கேஜின் வாயிலாக ஐஆர்டிசி சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றது.

இதுமட்டுமின்றி, தங்கும் வசதி, உணவு, உள்ளூர் பயணங்கள், விமான பயணம் (அப் அண்ட் டவுன்) மற்றும் பயண காப்பீடு உள்ளிட்டவையும் இந்த பேக்கேஜில் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பெரியவர்களுக்கான கட்டணம் ரூ. 47,775 ஆகும். இது டபுள் ஷேரிங்கிற்கான கட்டணம் ஆகும். இதுவே சிங்கிள் ஷேரிங்கை மட்டுமே விரும்புபவர் என்றால் அவர்கள் ரூ. 53,781 செலுத்த வேண்டும்.

சிறுவர்களுக்கு ரூ. 41 ஆயிரம் முதல் ரூ. 46 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை ஐஆர்டிசி-யின் அதிகாரப்பூர்வ தளம், செல்போன் செயலி ஆகியவற்றின் வாயிலாக புக் செய்து கொள்ள முடியும். இதுதவிர ஐஆர்டிசி மையங்கள் மற்றும் மண்டல அலுவலகங்களின் வாயிலாகவும் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ள முடியும்.

ஆகஸ்டு 11ம் தேதி மணிபூர் இம்பாலாவில் இருந்தே சுற்றுலா தொடங்க இருக்கின்றது. ஏர் இந்தியா விமானங்களே இந்த பயணத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அனைத்து பயணிகளும் கொல்கத்தாவில் ஒன்றிணைக்கப்பட்டு அங்கிருந்தே அனைவரும் வான் வழியாக பாங்காக் சென்று சேர இருக்கின்றனர்.

தாய்லாந்து இந்தியர்களின் விருப்பமான சுற்றுலா தளமாக இருக்கின்றது. இங்கு இந்தியர்கள் மட்டுமின்றி இன்னும் பல வெளிநாட்டவர்கள் அதிகம் சுற்றுலா வந்த வண்ணம் இருக்கின்றனர். 2019ம் ஆண்டு, கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து மட்டும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றிருக்கின்றனர்.

இதன் வாயிலாக மட்டும் அந்நாடு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயை ஈட்டியது. இந்த வருவாய்க்கே கொரோனா வைரஸ் பரவல் பெரிதும் இடையூறாக அமைந்தது. தற்போது, மீண்டும் வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் அந்நாட்டின் சுற்றுலா துறை மீண்டும் பாதிப்பிற்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே பட்ஜெட் விலையில் தாய்லாந்து டூர் பேக்கேஜை ஐஆர்டிசி அறிமுகம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications