மூன்றாம் நபர் காப்பீடு பிரிமியம் தொகை உயர்வு... வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி...!
மூன்றாம் நபர் காப்பீட்டிற்கான பிரிமியம் தொகையை, இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் காப்பீட்டுத் தொழிலை ஒழுங்குபடுத்தல் மற்றும் அதனை மேம்படுத்துதல் பணியை முக்கிய குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வரும், இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI), வாகன உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அது வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டிற்கான, வாகனங்களின் மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம் தொகை உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை வரும் ஜூன் 16ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் அது அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை ஆட்டோகார் இந்தியா ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஐஆர்டிஏஐ அமைப்பின் இந்த அறிவிப்பால், நடப்பு நிதியாண்டின் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம் தொகை அதிகரித்துள்ளது. அவ்வாறு, 1,000 சிசி எஞ்ஜின் திறன் கொண்ட, தனியார் நான்கு சக்கர வாகனத்தின் பிரிமியம் தொகை ரூ. 2,072 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டில் ரூ. 1,850 ஆக இருந்தது. தற்போது, 12 சதவீதம் உயர்வைப் பெற்று இந்த புதிய தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, 1,000 சிசி முதல் 1,500 சிசி எஞ்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு, முந்தைய தொகையில் இருந்து 12.5 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ரூ. 2,863ஆக இருந்த தொகை, தற்போது, 3,221 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, 1,500சிசிக்கும் அதிகமான திறனைக் கொண்டுள்ள பெரிய எஞ்ஜின் கார்களுக்கு ஆண்டு பிரீமியமாக ரூ. 7,890 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இவையனைத்தும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பிரிமியம் தொகையாகும். இதேபோன்று, இருசக்கர வாகனங்களுக்குமான மூன்றாம் நபர் காப்பீட்டு தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

அவ்வாறு, நாட்டில் இயங்கி வரும், 75சிசிக்கும் குறைவான எஞ்ஜினைக் கொண்ட இருசக்கர வாகனத்தின் உரிமையாளர்கள் ரூ. 482 தொகையை மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியமாக செலுத்த வேண்டும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 12.9 சதவீதம் அதிகரிப்பாகும். கடந்த ஆண்டு இது, 427 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

தொடர்ந்து, 75சிசி முதல் 150 சிசி வரை திறனைக் கொண்டிருக்கும் பைக்குகளின் உரிமையாளர்கள், 4.4 சதவீதம் உயர்வைப்பெற்று, ரூ. 720க்கு பதிலாக 752 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, உச்சகட்ட அதிகரிப்பாக, 150 சிசி முதல் 350 சிசி வரையுள்ள இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு தொகை ரூ. 21.1 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், கடந்த ஆண்டு வரை 985 ரூபாய் செலுத்தி வந்தவர்கள், தற்போது, ரூ. 1,193 செலுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், இதில் 350சிசிக்கு அதிகமான திறனைக் கொண்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர தனியார் வாகனங்களுக்கான பிரிமியம் தொகை உயர்த்தப்படவில்லை. ஆகையால், அவர்கள் முன்னதாக செலுத்தி வந்த 2,323 ரூபாயையே செலுத்தி மூன்றாம் நபருக்கான காப்பீட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதேபோன்று, எலக்ட்ரிக் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, 65kW திறன் கொண்ட கார்களின் பிரிமியம் தொகை ரூ. 6,707 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, நீண்டநாள் பாலிசிக்கு ரூ. 20,659 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 16kW திறன் கொண்ட எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் ஆண்டு பிரிமியம் ரூ. 1,975 ஆகவும், நீண்ட நாள் பாலிசிக்கு 11,079 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு விலக்காக பழைமை வாய்ந்த வின்டேஜ் கார்களுக்கு இதில் இருந்து 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

மூன்றாம் நபர் காப்பீடு என்பது, வாகனம் விபத்துக்குள்ளாகும்போது, நமது வாகனத்தால், மூன்றாம் நபருக்கு ஏற்படும் இழப்பை, ஈடுசெய்வற்கான காப்பீடாகும். இந்த மூன்றாம் நபர் காப்பீட்டின் மூலம், தொலைந்துபோன வாகனத்திற்கோ, விபத்து அல்லது இயற்கையால் அழிவைச் சந்தித்த வாகனத்திற்கோ இழப்பீடு பெற இயலாது.


Click it and Unblock the Notifications








